பகோடா மோர்க் குழம்பு
மே 9, 2011 at 3:34 பிப 11 பின்னூட்டங்கள்
இதுவும் நம்முடைய மோர்க்குழம்பு வகைபோல செய்தேன்
சென்ற ஆகஸ்ட்டில் அமெரிக்காவில் தயானந்த ஸரஸ்வதி
ஸ்வாமிகள்ஆசிரமத்தில்பென்ஸில் வேனியா குருகுலத்தில்,அவருடையஸதாபிஷேகக்கொண்டாட்டத்தில்
கலந்துகொண்டு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இந்த
மோர்க்குழம்பு சற்று வித்தியாஸ முறையில் ருசித்தது.
அப்போதே இதை மனதில்க் கொண்டு எழுதப் ப்ளான் மனதில்
தோன்றியது. நேரம் இப்போதுதான் என்று நினைக்கிறேன்.
வெங்காயம் நான் சேர்த்து செய்தேன். சாதாரணமாக நாம்
வெங்காயம் மோர்க் குழம்பில் சேர்ப்பது கிடையாது.
இதுவும்.ஒரு தனி ருசிதான்.
பகோடாக்களைச் செய்து கொண்டு மோர்க் குழம்பில் சேர்த்து ச்
செய்வதுதான் இதன் முக்கியம். கடலைமாவைக் கரைத்து
செய்யாமல்அரைத்து செய்திருப்பதுதான் நம்முடைய வழி.
வேண்டியவைகள்
பகோடா தயாரிக்ககடலைமாவு—-6 டேபிள் ஸ்பூன்
பெறிய வெங்காயம் —1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
மிளகாய்ப் பொடி—-கால் டீஸ்பூன்
உப்பு—-கால் டீஸ்பூன்
எண்ணெய்—-பொறிப்பதற்கு வேண்டிய அளவு
மோர்க் குழம்பிற்கு வேண்டியவைகள்
கெட்டியான மோர்——3 கப்பிற்கும் மேல்
கடலைப் பருப்பு—-1டேபிள்ஸ்பூன்
தனியா—-2 டீஸ்பூன்
கடுகு—-1 டீஸ்பூன்
பச்சைமிளகாய்—–3
வற்றல் மிளகாய்—1
தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க—-கடுகு, சிறிது பெருங்காயம்
மஞ்சள்ப் பொடி—–சிறிது
ருசிக்கு—-உப்பு
செய்முறை
கடலைப்பருப்பு,தனியா.கடுகை ஊரவைத்து பச்சைமிளகாய்,
தேங்காய்த்துருவல்,வற்றல் மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
திட்டமாக ஜலம் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை மோருடன் உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து
கரைத்து வைக்கவும்.
கடலைமாவுடன், நறுக்கிய வெங்காயம்,உப்பு, மிளகாய்ப்பொடி
சேர்த்துக் கலந்து ஜலம் விட்டுத் தளரப் பிசைந்துகொள்ளவும்.
சற்று லூஸாக இருக்கட்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக், கலந்த மாவை
பகோடாக்களாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப்
பொறித்தெடுக்கவும். ஷேப்பைப் பற்றிக் கவலை வேண்டாம்.
மோர்க் கலவையை குழம்பு வைக்கும் பாத்திரத்தில் கொட்டி
மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பொறித்தெடுக்கும் போதே பகோடாக்களைக் குழம்பில் சேர்த்து
விடவும்.
நல்ல பால் பொங்குவதுபோல் நுறைத்து வரும்போது கிளறி
தீயை மட்டுப்படுத்தி இரண்டு நிமிஷங்கள் மேலும்
வைத்திருந்து குழம்பை இறக்கவும்.
கடுகு, பெருங்காயம் தாளித்து மூடி வைக்கவும்.
பகோடா மிருதுவாக ஆகி, குழம்பும் சாப்பிட தயாராகிவிடும்.
இருக்கவே இருக்கிறது கொத்தமல்லி,கறிவேப்பிலை.
மேலே தூவுங்கள். காரம் அதிகரிக்க மிளகாயை தாளிப்பில்
சேர்க்கவும்.
வேண்டுமானவைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
Entry filed under: குழம்பு வகைகள்.
11 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 3:52 பிப இல் மே 13, 2011
ஊரிலே அம்மா இந்த குழம்பு செய்வாங்க. எனக்கென்னமோ இந்த தயிர்-மோர்-தேங்காய் ப்ரபோர்ஷனே பிடிபடமாட்டேன்னுது. ஏதாவது ஒன்றை அதிகமா/குறைவா போட்டுடறேன். இவருக்கு சும்மாவே மோர்குழம்பு-அவியல் எல்லாம் அவ்வளவாப் பிடிக்காது,என் சொதப்பல்களை ருசித்து இப்ப சுத்தமா பிடிக்காமல் போயிட்டது. 😉
அந்த குழம்பு bowl-ஐ அப்படியே இங்கே தாங்கோ! 🙂
2.
chollukireen | 2:02 பிப இல் மே 17, 2011
விரும்பி உங்களவர் சாப்பிடாவிட்டால் கவனம் குறைந்து விடுகிறது. எல்லாவற்றையும்விட சுலபம்.மோர்க்குழம்புதான். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் மட்டும் அறைத்துவிட்டு
தாளித்துக் கொட்டினால் கூட குழம்பு ருசியாக வரும். பக்கத்து வீடா. கொஞ்சம் கொடுத்து ருசி பார் என்று சொல்ல. அம்மா செய்வது பெண்ணுக்கும் வரும். வேற என்ன சொல்லறது.
3.
chollukireen | 11:47 முப இல் ஒக்ரோபர் 17, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் பல வருஷங்களுக்கு முன்னர் எழுதியது. வேண்டிய அளவு பின்னும் மோர் சேர்த்துச் செய்யுங்கள் அன்புடன்
4.
Geetha Sambasivam | 12:33 பிப இல் ஒக்ரோபர் 17, 2022
ஆமவடை, உளுந்து வடை மாவில் உருட்டிப் போட்டுப் பொரித்து எடுத்து மோர்க்குழம்பில் சேர்த்தது உண்டு. பகோடாக்களைப் போட்டது இல்லை. நீங்க சொல்றாப்போல் வெங்காயம் சேர்த்தும் பண்ணினது இல்லை. வாய்ப்புக் கிடைத்தால் பண்ணிப் பார்க்கணும். நன்றி அம்மா.
5.
chollukireen | 11:10 முப இல் ஒக்ரோபர் 18, 2022
கடி என்று சொல்லும் வட இந்திய மோர்க்குழம்பில் இது இல்லாமல் இருக்காது. வடைமாவில் குணுக்குமாதிரி பொரித்துப் போட்டு எங்காத்திலும் செய்வதுண்டு. இது ஒரு புதுமாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்.
6.
நெல்லைத்தமிழன் | 2:30 பிப இல் ஒக்ரோபர் 17, 2022
இந்த மாதிரி வாழ்க்கையில் ஒரு முறைகூடச் சாப்பிட்டதில்லை. கடைகளில் பெரிய வடகம் பார்த்திருக்கிறேன். அதைக் குழம்பில் போடுவார்கள் என்பார்கள். அதைக்கூட நான் சாப்பிட்டதில்லை.
ஆனாலும் மோர்க்குழம்பில், வெங்காயமா?
7.
chollukireen | 11:35 முப இல் ஒக்ரோபர் 19, 2022
பஞ்சாபி கடியில் இதுதான் முக்கியம்.பகோடாக்கள். நம் பக்கத்தில் வழக்கமில்லைதான். அதையும் குறிப்பிட்டுள்ளேனே. நானும் செய்து பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. மோர்குழம்பில் வெங்காயம் என்று தலைப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆமாம். வெங்காயம். நன்றி. அன்புடன்
8.
நெல்லைத்தமிழன் | 2:31 பிப இல் ஒக்ரோபர் 17, 2022
எங்க அம்மா, மோர்க்குழம்பில் போட ஒரு வடை தயார் செய்வார்கள். பருப்பு வடை, துவரம்பருப்பு அரிசி ஜாஸ்தி போட்டு. அவ்வளவு நன்றாக இருக்கும். செய்முறை கேட்டுக்கலை. மறுநாள் ஊறி, மோர் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.
9.
chollukireen | 11:40 முப இல் ஒக்ரோபர் 19, 2022
எந்த வடை செய்தாலும் போடலாம். நீங்கள் தவறவிட்ட வடை யாருக்காவது தெரிந்தால் நானும் செய்ய முடியும். கீ.சா .அவர்களுக்குத் தெரியுமாபார்க்கலாம். நன்றி. அன்புடன்
10.
ஸ்ரீராம் | 12:01 முப இல் ஒக்ரோபர் 18, 2022
மசால்வடை கடையில் வாங்கி குழம்பு செய்திருக்கிறேன்! மெதுவடை போட்டும் செய்திருக்கிறேன். மோர்க்குழம்பு புதுசு. அதுவும் வெங்காயம் சேர்த்து.. ஒருமுறை முயற்சிக்கவேண்டும்.
11.
chollukireen | 11:44 முப இல் ஒக்ரோபர் 19, 2022
புதுனசுதானே செய்து பாருங்கள். என்னுடயதும் முயற்சிதான். நன்றாக இருந்தது. நன்றி அன்புடன்