மோர் மிளகாய்
ஒக்ரோபர் 31, 2011 at 10:17 முப 7 பின்னூட்டங்கள்
பெயர் தான் மோர் மிளகாயே தவிர ஊறுவதென்னவோ தயிரில்தான்.
நல்ல ருசியான மிளகாய். எண்ணெயில் வறுத்து தயிர் சாதத்துடன்
சாப்பிட கட்டு சாப்பாட்டுகளுடன் எடுத்துப் போக என சுலபமானது.
ஜெனிவா வெய்யிலில் தயாரித்த என்னை ஏன் போடவில்லை என்று
கேட்பது போல மனதில் ஒரு எண்ணம். எழுதின குறிப்பைப் போட்டுவிட்டால்
போகிறது. விருப்பமானவர்களுக்கு உபயோகமாக இருக்குமே.
வேண்டியவைகள்.
பச்சை மிளகாய்—அதிக காரமில்லாத சிறிய சைஸ் ஒரு 20 , 25.
பெறிய சைஸாக இருந்தால் நம்பரைக் குறைத்துக் கொள்ளவும்.
நல்ல தயிர்—–ஒருகப். அதிகமும் விடலாம்.
உப்பு ருசிக்குத் தக்கபடி .2 டீஸ்பூன் வரை ஸரியாக இருக்கும்.
செய்முறை.
மிளகாய்களை அலம்பித் துடைத்துக் காயின் நுனியில் சற்றுக் கீரவும்.
காம்பையும் சிறிது வைத்து மிகுதியை நீக்கவும்.
கண்ணாடி, அல்லது ஜாடிக் கிண்ணத்தில் மிளகாயைப் போட்டு அது
மூழ்கும்படி தயிரைக் கடைந்து அத்துடன் சேர்க்கவும்.
உப்பு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.
2, 3நாட்கள் தயிரில் ஊறின பிறகு மிளகாயைச் சற்று பிழிந்தாற்போல
எடுத்து வெய்யிலில் காயவைக்கவேண்டும்.
ஒரு ட்ரேயிலோ, தட்டிலோ பாலிதீன் பேப்பரினால் கவர் செய்து
அதன் மேல் பரவலாக மிளகாயைப் பரப்பி நல்ல வெய்யிலில்
காயவைக்கலாம்.
தயிர்க் கலவையையும் கூடவே வெய்யிலில் வைக்கவும்.
வெய்யில் போன பிறகு மிளகாயைத் திரும்பவும் தயிருடனே
கலந்து வைக்கவும்.
ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படியே மிளகாயைக் காய வைக்கவும்.
வெய்யிலில் வைக்க வைக்க மிளகாயும், தயிரும் காய்ந்து விடும்.
கொஞ்சம்,தயிர், உப்பு காய்ந்து மிளகாயினின்றும் பொடியாக உதிரும்.
நன்றாகக் காய்ந்த மிளகாயை பாட்டிலில் போட்டு வைத்து, வேண்டும்
போது எண்ணெயில் சற்றுக் கருக வறுத்து உபயோகிக்கவும்.
தயிரில் ஊறின மிளகாய்கள் நல்ல மணத்துடன் உப்பும் உறைப்புமாக
ருசியாக இருக்கும். எண்ணெயில் வறுத்த பிறகுதான்.
ஊறும் போதே பச்சையாக தொட்டுக் கொள்ள உபயோகிப்பவர்களும்
உண்டு.
கெட்டியான புளிக்கரைசலிலும் மிளகாயை ஊறவைத்து இதே முறையில்
காயவைத்து தயாரிப்பதும் உண்டு.
தயிர் அதிகமாகவே சேர்க்கவும்.
மோர்க்குழம்பு, மோர்க்களி, இட்லிஉப்புமா இவைகளில் முக்கியமாக
இம்மிளகாய் உபயோகப்படும்.
வீட்டில் அதிகப்படியாக மிகுந்து போகும் 7, 8 மிளகாயில் கூட இதைச்
சிறிய அளவில் செய்து காயவைத்து உபயோகப் படுத்தலாம்.
மூன்றாவது படம் ஊறும் மிளகாய்.
கடைசி படம் நன்றாகக் காய்ந்த மோர் மிளகாய். இனி வறுக்க வேண்டியதுதான் பாக்கி.

Entry filed under: வற்றல் வகைகள்.
7 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
சித்ராசுந்தர் | 6:46 பிப இல் ஒக்ரோபர் 31, 2011
காமாட்சி அம்மா,
ஜெனிவா வெய்யிலில் மோர்மிளகாய் நன்றாக இருக்கிறது.
எனக்கு இதை தயாரிக்க ஆசைதான்.ஆனால் வெயில்தான் பிரச்சினை.ஒரு பெரிய மரம் எங்கள் வீட்டு patio முழுவதும் ஆக்கிரமித்திருக்கும். இன்றுதான் அதை முழுவதும் வெட்டிவிட்டார்கள். காலையிலேயே நினைத்தேன்,இந்த வேலையை ஓரிரு மாதங்களுக்கு முன் செய்திருந்தால் வத்தல்,மோர்மிளகாய் எல்லாம் போட்டிருக்கலாமே என்று.
வந்து உங்கள் blog ஐப் பார்த்தால் நான் எதை நினைத்தேனோ அதையே குறிப்பாகக் கொடுத்திருக்கிறீர்கள்.இப்போது இங்கு வெயில் குறைந்து குளிர் வர ஆரம்பித்துவிட்டது.ஜூன் மாதத்திற்கு மேல் பார்க்கலாம்.
2.
chollukireen | 5:52 முப இல் நவம்பர் 2, 2011
குளிர்போய் வெய்யில் ஆரம்பிக்கத்தானே போகிறது.அந்த ஸமயத்தில் செய்துவிட்டால் போகிறது. மனதில் ஏதாவது நினைத்து அது பார்க்கவோ, படிக்கவோ, பேசவோ கிடைத்தால் மனதிற்கு அலாதியான த்ருப்தி ஏற்படுகிறது.. அது
மாதிரிதான் இதுவும். இந்தமாதிரி மரத்தின் பிரச்சினை ஜெனிவாவிலும் இருக்கு. ஆனால் அங்கு ஓங்கிஉயர்ந்த மரம். எங்களது 7வது ப்ளோர்.
ஒருமணி நேரம் வெய்யிலை மறைக்கும். அடிக்கடி
வாம்மா.
3.
angelin | 8:15 பிப இல் ஒக்ரோபர் 31, 2011
மாமி ,இன்றுதான் மகி ப்ளோக்ல இருந்து உங்க பக்கத்தை பார்த்தேன் .
மோர் மிளகாய் எனக்கும் பிடிக்கும் .அடுத்த சம்மர்தான் செய்ய முடியும் .
4.
chollukireen | 5:10 முப இல் நவம்பர் 2, 2011
உன் பதில் பார்த்து ஸந்தோஷம். அடிக்கடி வந்து கமென்ட்டுகள் கொடுக்கவும். குறிப்பு மனதிலிருந்துவிட்டால் எப்போது ஸீஸனோ அப்போது செய்து கொள்ளலாம் அல்லவா.மஹி மூலம் உங்களைத் தெறிந்து கொண்டது மிகவும் ஸந்தோஷம்.
5.
Mahi | 4:01 முப இல் நவம்பர் 8, 2011
ஊர்ல இருந்து எங்கம்மா குடுத்தனுப்பின மோர்மிளகா இருக்கும்மா!:) அது தீரும்போது இங்கே அடுத்த கோடை ஆரம்பிக்கும்,செய்துடவேண்டியதுதான். மும்பை எப்படி இருக்கு..ஜெட் லாக் எல்லாம் தீர்ந்து செட்டில் ஆகிட்டீங்களா?
6.
chollukireen | 6:10 முப இல் நவம்பர் 9, 2011
எல்லா ஊர்களும் அதனதன் போக்கில் இய.ங்கிக்கொண்டிருக்கிறது..சீதோஷ்ணமாற்றம்தான் ஸவுகரியங்களை கொடுக்கின்றது. உன் வரவு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அம்மா கொடுத்தனுப்பிய மிளகாய் அன்போடு சேர்த்து மிகவும் ருசியாக இருக்கும்..
இப்படி ஸந்தித்துக் கொண்டே இருக்கலாம்.
7.
malar | 7:20 முப இல் மே 6, 2015
Genivavil more milagaai….vaazhthukkal