சீஸ்பால்ஸ்
ஓகஸ்ட் 8, 2016 at 1:54 பிப 13 பின்னூட்டங்கள்

மேலே இருப்பது சீஸ் பால் செய்யஉபயோகப்படுத்திய சில ஸாமான்கள். நல்ல மழை,குளிர் போன்ற ஸமயங்களில் யாவரும் காபி,டீயுடன் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
செய்வது ஸுலபம்தான். இக்காலங்களில் சீஸ் சேர்த்த பண்டங்கள் யாவரும் விரும்பிச் சாப்பிடும் பொருளாகவும் ஆகிவிட்டது. பிரட்,உருளைக்கிழங்கு, சீஸ்,காய்கறிகள்,எண்ணெய் இவை யாவுமே முக்கியப் பொருட்கள். வாங்க நீங்கள் யாவரும். எப்படிச் செய்வதென்று பார்ப்போம். அப்படியே அளவுகளையும்.பார்ப்போம்.
பிரட்ஸ்லைஸ் —3, பெரிய அளவிலான உருளைக்கிழங்கு –2. காப்ஸிகம்1 துருவின சீஸ் மூன்று டேபிள்ஸ்பூன், சிறிது முட்டகோஸ்,பொரிப்பதற்கு எண்ணெய். ருசிக்கு–உப்பு, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன். பச்சைமிளகாய் அரைத்த விழுது சிறிதளவு
செய்முறை—–பிரட்டை மிக்ஸியிலிட்டுப் மாவாகப்பொடித்துக்கொள்ளவும்.காப்ஸிகம்,கோஸ் இரண்டையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உறித்து சூடு இருக்கும்போதே நன்றாக மசித்துக் கொள்ளவும். ஆறினவுடன் பிரட் பொடியில் ஓரளவு பாக்கி வைத்துக்கொண்டு மசித்த உருளைக் கிழங்குடன் பொடியைச் சேர்த்துப் பிசையவும்.மிளகாய் விழுது,உப்பு சேர்த்துக் கெட்டியான பதத்தில் பிசையவும். தண்ணீர் விடக் கூடாது. வேகவைத்த உருளைக்கிழங்கின் ஈரப்பசைக்குப் போதுமான ரொட்டித்தூள் போட்டால் போதுமானது.
அடுத்து பொடியாக நறுக்கிய கேப்ஸிகம்,கோஸுடன் சீஸ்,மிளகுப்பொடி,உப்பு சிறிதுசேர்த்துக் கலக்கவும். இதில் உப்பைக் குறைத்துப் போட்டால் நீர்க்காமல் இருக்கும்.
பிசைந்து வைத்திருக்கும் உருளைக்கலவையில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு எடுத்து சிறிய கிண்ணம் போல விரல்களால் அகட்டிச் செய்து கொள்ளவும்.
அதில் சிறிதளவு காய்கறிக் கலவையை வைத்து பக்குவமாக மூடி, லேசாக உருட்டி பிரட்பொடியில் லேசாகப் பிரட்டவும். இப்படியே யாவற்றையும் செய்து கொண்டு, அடி அகலமான வாணலியை அடுப்பில் எண்ணெயைக் காயவைத்து மிதமான தீயில் உருண்டைகளைப் போட்டு லேசாகத் திருப்பி விட்டுச் சிவக்க எடுக்கவும். தக்காளி சாஸுடனோ, மற்றும் பிடித்தமானவைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
போட்டோவைத் தனித்தனியாக எடுக்கவில்லை. சிறிது ரொட்டித்தூள் மிகுதியும் ஆகலாம். செய்து பார்க்கிறீர்களா? டவுன் ஸைடில்தான் இந்தச் சீஸ் கலாசாரமெல்லாம். எங்களுக்குப் பிடிக்காது என்று சொல்லுவர்களும் இருக்கலாம். பாருங்கள்.
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 12:21 முப இல் ஓகஸ்ட் 10, 2016
இதுவரை செய்தது இல்லை. சீஸ் இதுவரை எங்கள் வீடுகளில் வாங்கியதே இல்லை. இதை ஒருமுறை செய்து பார்க்க ஆவல் வருகிறது. குறித்துக் கொண்டுள்ளேன். நட்ஸ் அண்ட் ஸ்பைசஸ் கடையில் சீஸ் கிடைக்கிறதா ன்று பார்க்க வேண்டும்!
2.
chollukireen | 12:12 பிப இல் ஓகஸ்ட் 14, 2016
துளி கொப்பறைத் துருவலும், பன்னீரும் சேர்த்துச் செய்து பாருங்கள். இதுவும் ஒரு வித ருசியாக இருக்கும். அன்புடன்
3.
Geetha Sambasivam | 4:37 முப இல் ஓகஸ்ட் 17, 2016
இங்கே நம்மவருக்கு சீஸ், பனீரெல்லாம் பிடிக்கிறதில்லை. குழந்தைகள் இருந்தால் அவங்களுக்காகச் செய்வது உண்டு.
ஶ்ரீராம், சீஸ், பனீரெல்லாம் எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கிறது. கிடைத்தாலும் அமுல் சீஸ், அமுல் பனீர் தான் நல்லா இருக்கும். தேதி காலாவதி ஆகாமல் பார்த்து வாங்கணும்.
4.
chollukireen | 12:00 பிப இல் மே 5, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
சற்று உலர்ந்த Bபிரட்டைப் பொடி செய்து தயாரித்த சிற்றுண்டி இது. சீஸ் யாவரும் விரும்பும் பொருளாகவும் ஆகிவிட்டது. செய்துதான் பாருங்களேன். அன்புடன்
5.
நெல்லைத்தமிழன் | 1:16 பிப இல் மே 5, 2021
பொரிக்கச் சொல்றீங்களா இல்லை பிரட்டச் சொல்றீங்களா (லைட்டா எண்ணெய் விட்ட தோசைக்கல்லில்) என்று சந்தேகம் வருது.
நிச்சயம் பசங்களுக்குப் பிடித்தமானதுதான். ஒரு தடவை செய்துவிடுகிறேன். உங்க ரெசிப்பில்லாம் சின்னவங்களுக்குப் பிடித்ததாகவே இருக்கு.
6.
chollukireen | 11:17 முப இல் மே 6, 2021
பொரிக்கத்தான் சொல்லி தான் எழுதியிருக்கிரேன். ருசி கூடும். நானும் பேரன் பேத்திகளுக்காகச் செய்ததுதான். எங்கள் காலத்தில் சீஸ் பெயரே தெரியாது. ஏதேனும் ஒரு குறிப்பு பார்த்தால் நமக்கு வேண்டியபடி சற்று மாற்றுவதுதான். குறிப்புகள் பார்க்கக் கூட பிற்காலம்தானே தெரியும்.நன்றி. அன்புடன்
7.
Revathi Narasimhan | 10:33 பிப இல் மே 5, 2021
சீஸ் மிகப் பிடித்த பண்டம்.
பேரனுக்கு சீஸ் பெயர் சொன்னால் எதுவும்
உள்ளே போகும். உ.கிழங்கு வேற இருக்கு. நான் இதை
தோசைக்கல்லில் தாம்மா தட்டுவேன்.
சீஸ் சேர்த்து செய்து கொடுக்கிறேன். நன்றி காமாட்சி மா.
8.
chollukireen | 11:24 முப இல் மே 6, 2021
நீங்கள் டிக்கி மாதிரி தட்டுவீர்கள். நான் போண்டா வடிவத்தில் பூரணம் மாதிரி வைத்து பொரித்திருக்கிறேன். நான் கூட நாட்டுப்பெண்கள் சொல்லிதான் செய்திருப்பேன்.வருகைக்கு நன்றி. அன்புடன்
9.
ஸ்ரீராம் | 12:30 முப இல் மே 6, 2021
செய்வது ரொம்ப சுலபமாக இருக்கிறது. ஒருமுறை செய்து விடுகிறேன்.
இன்னமும் அதையேதான் சொல்கிறேன், இல்லை?!!
10.
chollukireen | 11:27 முப இல் மே 6, 2021
அவரவர்கள் சௌகரியம். ஞாபகமும் வரவேண்டும்.ரஸிப்பதே எனக்குப் போனஸ் கிடைத்தமாதிரிதான்.நன்றி. அன்புடன்
11.
Geetha Sambasivam | 1:33 முப இல் மே 6, 2021
நெல்லைத் தமிழருக்குப் பொரிக்கப் பிடிக்கலைனால் தோசைக்கல்லில் போட்டும் எடுக்கலாம். செய்வதும் கஷ்டம் எல்லாம் இல்லை. இதுக்கு முன்னரே வந்திருக்கேன் போல. இப்போவும் படித்தேன். எளிமையான செய்முறை அம்மா!
12.
chollukireen | 11:31 முப இல் மே 6, 2021
நமக்கென்று செய்வதில்லையானாலும், இளைய தலைமுறையினருக்காக செய்த அநுபவம் உங்களுக்கு இருக்கிரது.
13.
chollukireen | 11:35 முப இல் மே 6, 2021
உங்களுக்கும் அனுபவம் இருக்கிறது. ருசியில் சற்று மாறுபடும். என்றோ ஒரு நாள் செய்கிறோம். சுலபமானது மீள் பதிவும். நன்றி. அன்புடன்