Posts filed under ‘கதைகள்’
தொட்டில்–6
பாட்டி வீட்டு வாசலில் புதுப்பாளையத்தா வந்துவிட்டாளா? அதிகாலை ஆறு மணிக்கே வந்து விடும் தயிர்காகாரியைப் பற்றி யாவரும் விஜாரித்துக் கொள்ளும் கேள்வி இது. என்ன புதுப்பாளையத்தா ஏதாவது மாரி அம்மனா என்று தோன்றும். இல்லை. எங்கள் கிராமத்தின் அதுவும் எங்கள் வீட்டு சுற்றுப்புறமுள்ள எல்லோர் வீட்டிற்கும் தயிர் வழங்கும் பெண்மணி. ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வருவாள். பெரிய கூடையில் சுற்றிலும் அண்டையாக ஏதாவதை வைத்து பெரிய பானையில் தயிர் இருக்கும். தவிர அதன்மேல் வேண்டியவர்களுக்காக சிறியசிறிய மண் கலயங்களில் கெட்டியாக கத்தியால் வெட்ட வேண்டும் என்ற தோற்றத்துடன் தயிரும் எப்படி லாவகமாகச் சுமந்து வருகிராளோ என்று எண்ண வைக்கும்.
பெரிம்மா நான் வந்துட்டேங்கோ. பக்கத்தில் அக்கத்தில் யாராவது இறக்கி விடுவார்கள். தயிர்க்காரி வந்துட்டா,வந்துட்டா செய்திகள் அஞ்சலாகும். யாருக்கும் முதல்லே அவ குடுக்கமாட்டா. ஸரிபோவோம்
என்றுஎல்லார்வீட்டுஈயச்சொம்புகளும்,ஈயக்கிண்ணங்களும்அவரவர்கள் கையில். பெரிம்மா வரும் வரை கூடையை திறக்கமாட்டாள். எங்கே பெரிம்மா வா. ஒங்கையாலே போணி பண்ணு.
ஒரு சின்ன தடியை ஊன்றிக்கொண்டு பாட்டி வரும்போதே அவாளுக்கெல்லாம் கொடுக்கறதுதானே. சின்ன குழந்தைகாரி அவள்.
இல்லே இந்தா பிடி. உள்ளார போயி பாத்திரத்தில் ஊத்திக்கோ என்ற சொல்லுடன் ஒரு சின்ன கலயம் கைமாறும்.
அடுத்தது சுப்பம்மா. இது அவங்களுக்கு.எங்கே அவங்க? இன்னொரு கலயம் கைமாரும். எல்லாம் பாட்டி வீட்டுத் திண்ணையில்தான். பெரிய பானை திறக்கும். எல்லோரும் எனக்கு உனக்கு என்று பாத்திரம் நீளும். நறைய இருக்குது தயிரு. நீ கொண்டா உனக்குதான் பிள்ளை அழுவும். காசு எம்மாம் வைச்சிருக்கே, கடன் குடுக்க மாட்டேன்.
நாலு மொந்தை குடு. உனக்கு மூணு மொந்தைதான் . மீந்தா குடுக்கறேன்.கெட்டியாகத் தோய்த்த தயிரில் கெட்டியாக சிறிது மோர் கலந்துமற்றவர்களுக்குக் கொடுப்பாள். அதுவும் அவ்வளவு நன்றாக இருக்கும். இது ஒரு காட்சி. நான்கு மைல் தூரத்திலிருந்து வருகிறாள். அவளுக்கு பழையதும் குழம்பும் பாட்டி கொடுக்காத நாளே இருக்காது.வேறு யார் கொடுத்தாலும் வாணாம் பெரிம்மா வைச்சிருக்கும் என்பாள்.
அப்பளாத்துக்கு மாவு அறைக்க பாட்டியாத்து ஏந்திரம்தான் எல்லோருக்கும் வேண்டும் . மாவைப் பூராவும் எடுப்பதற்கு முழுத்தேங்காயின் மேல் மட்டையை ஒரு பகுதியை நறுக்கி அதை ஒழுங்கு செய்து அதுதான் மாவை ஒட்ட எடுக்கும் பிரஷ்.
மத்தியானம் அதுவும் வீட்டிற்கு ஒரு இளம் பாட்டி இருப்பார்களே!அவர்களின் பொழுது போக்கும் இடமும்,பல்லாங்குழியும், தாயக்கட்டமும், பத்து கட்டமும்,பரமபதமும் மும்முரமாக இருக்கும். ஆடு புலி ஆட்டம் என்று கூட ஒன்று வரைந்து ஆடுவார்கள்.பாட்டியின் தவலை தோசை பெயர் போனது. வீட்டு அரிசியும்.காணத்தில் ஆட்டிய நல்லெண்ணையும் சேர்த்தது. வந்தவர்கள
வீட்டின் பின்பக்கம் நெல் உலர்த்த பெரிய செங்கல் பதித்த களம். பொரிவடாம் இட மூன்று காச்சல் போட,மற்றும் வடாமிட, ஸாமான்கள் காயவைக்க பத்திரமான இடம். பாட்டியின் மாப்பிள்ளை ஊரில் இல்லாத போதெல்லாம் பாட்டி ஒரு வி.வி.ஐ.பி தான். யார் இவர் அகிலாண்டம் பாட்டிதான்.
கருப்பான சிறிய உருவம்தான்.பேச்சில் அவ்வளவு இனிமை கலந்திருக்கும். நிறைய க்ஷேத்திரங்களுக்கும்,தீர்த்த யாத்திரைகளுக்கும் சென்ற அனுபவம் உண்டு. அதைப்பற்றி எல்லாம் சொல்லும் போது யாவரும் ஆச்சரியப் படும்படி இருக்கும்.நேபாளத்திற்க்கு அந்த நாளில் போவதென்றால் அதுவும் காட்மாண்டு பசுபதி தரிசனமென்றால் யாவருக்கும் கிடைக்கக் கூடியதல்ல. இப்போது பஸ்,ஆகாய விமானம் முதலானது உண்டு. மட்டக் குதிரைகளின் மீது ஸவாரி செய்துதான் போக வேண்டுமாம். அந்த முறையில் பசுபதி தரிசனம் செய்ததைச் சொன்ன போதுஎல்லோரும் ஆச்சரியப் பட்டுப் போனோம்.
பாட்டி சின்ன வயதிலேயே விதவையானவர். ஒரு பெண் குழந்தை, அவளையும் விவாகம் செய்து கொடுத்தாகி நிறைய காலமாகிறது. பாட்டியின் உறவினருக்குத் தெரிந்தவர், திருவாங்கூர் ஸமஸ்தான திவான் ஸி.பி. ராமஸ்வாமி அய்யர். அவர்கள் மனைவி, தாயார் இருவருடனும் பூஜை முதலான நல்ல காரியங்களுக்கு உதவி செய்து கொண்டு, அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தவர் அகிலாண்டம்மா. ஆக நல்ல வாய்ப்பாக அவர் ஏராளமான இடங்களைப் பார்க்கவும், விசாலமான மனதையுடையவராகவும் இருந்ததில் ஆச்சரியமில்லை. ஓரளவுவயதான பின்பு பெண்ணுடன் இருக்க வந்தவர்.
இவ்வளவு நல்ல மனதுடைய அந்தம்மாவின் பெண்ணிற்கு மகப்பேறு ஏற்படவில்லை. வயித்தியங்கள் செய்யாது இருந்திருப்பார்களா? பெண்ணின்
புகுந்த வீட்டில் மைத்துனர்களுக்கு அந்தபாக்கியம் இருந்தது. அவர்களின் குழந்தைகளைப் பார்த்தே பாட்டியின் பெண் தங்க விக்கிரஹம்மாதிரி குழந்தைகள் என்று பெருமை பட்டுக்கொள்ளும் ஒரு தங்கமான மனம். வம்சம் விளங்குகிறது, என்று பெருமை அடைந்து பேசுவாள். பெரியவர்களைத் தேடி நமஸ்காரம் செய்து எனக்கும் வம்சம் விளங்கவேண்டும் என்று ஆசீர்வதியுங்கள் என்று வெகுளியாகக் கேட்பாள்.
பாட்டி ஊரில் வீடு,நிலம் முதலானது வாங்கி இருந்தாள். அவ்வப்போது மாப்பிள்ளை அவர்கள் உடன் பிறந்தவர்களுக்கும் ஒத்தாசை செய்வார். அவரும்
கவர்மென்ட் வேலையில் இருந்தார். பார்க்கிறவர்கள் என்ன இருந்தாலும் அவளுக்கென்று குழந்தை குட்டி இல்லாத போது தனக்கென சேமிக்கவேண்டாமா? என கேட்கத் துவங்கினர். இதெல்லாம் வழக்கம்தானே! காலம் அப்படியேவும் ஓடவில்லை.
பாட்டியின் பெண்ணிற்கு ஓயாத தலைவலி அடிக்கடி வந்து எவ்வளவு வயித்தியங்கள் செய்தும் பலனில்லாமல் இரண்டு கண்களிலும் பார்வை குறைந்து கொண்டே வந்து பார்வை பறிபோனது. பாட்டியின் மனது எப்படி இருந்திருக்கும். ஊரோடு, தாராளமான ஸொந்த வீட்டில் இருக்க பெண்ணுடன் பாட்டி ஊரோடு வந்து விட்டாள். மாப்பிள்ளை சென்னையினின்றும் அடிக்கடி வந்து போவார். பாட்டிக்கும் கால் சற்று ஊனமானதால் ஒத்தாசைக்கும் ஒரு உறவின வயதானவளையும் உடன் வைத்திருந்தார். தண்ணீர் கஷ்டம் அப்போது.
வீட்டிலும் பொழுது போக வேண்டுமே!கலகலக்க அக்கம்பக்கத்தினர்கள்,கலகத்தையும் செய்வார்கள்.
தொட்டிலுக்கும் இதற்கும் என்ன ஸம்பந்தமா? பாட்டியின் கதை என்றே தலைப்பு அளித்திருக்கலாமா? தொடருவோம்.
தொட்டில்-5
பலபல வருஷங்களுக்கு முன் நிகழ்ந்த ஸ்வீகரங்கள் எந்த வகைகளில் இருந்தது. அப்போதைய உறவு முறைகளும்,மருத்துவ வசதி குறைவுகளும்,பார்த்த கேட்டவைகள் இவை.நல்லது கெட்டது எல்லாம் சேர்ந்ததுதான் இவைகள். தெரிந்து கொள்ளலாமே. அவ்வளவுதான் மேலும் வரும்.
தொட்டில்–4
உதவி—கூகல்—நன்றி
என்னது திரும்பவும் ஆசாரமான குடும்பத்துத் தொட்டிலேவாா? நீங்கள் கட்டாயம் நினைப்பீர்கள் . இம்மாதிரி கதைகளெல்லாம் நான் சொன்னால்தானே உண்டு. எல்லா இடத்திலேயும் எதிர்மறையேதானா? நல்லது ஒன்றுமே இல்லையா? சொல்லிக் கொண்டேதான் வருகிறேன்.. ஞாபகம் வரும் அளவிற்கு எழுத்து வேகம் போதவில்லை.ஆமாம் இன்னொரு வைதீகக் குடும்பம் இப்படிதானே ஆரம்பிப்பீர்கள். என்ன செய்வது. இப்படிப்பட்ட ஸமுதாயத்தில்தான் புத்ரன் இல்லைவிட்டால் பித்ருக்கள் கடைதேற மாட்டார்கள் என்ற எண்ணங்கள் ஆழப் பதிந்திருந்த காலம். அவர் ஒருவேதமூர்த்தி.
வேதவித்துஎன்றேசொல்வார்கள்வேதங்கள்,தர்மசாஸ்திரம்,தத்துவ வியாகரணங்கள் எல்லாம் கரைத்துக் குடித்தவர். கிரஹஸ்தன் எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு உதாரணமானவர். குடும்பத்துக்கு ஒரே பிள்ளை. அவருக்குப் பெண்தானா கிடைக்காது. நல்ல குடும்பத்துப் பெண்ணுடன் விவாகமாகி பல வருஷங்களுக்குப் பின் பெண் மகவு. ஸந்தோஷம் அநுபவிக்கக விடாமல், அடுத்த மூன்று நாட்களிலேயேே மகராஜி போய்ச் சேர்ந்து விட்டாள். அம்மாவினால்க் குழந்தையை எவ்வளவு நாட்கள் பார்த்துக் கொள்ள முடியும்? அப்படியும் ஐந்தாறு வருஷங்கள் போயிற்று. இன்னொரு விவாகம் செய்தாலும் சிறிய பெண்கள்தானே கிடைக்கும். திரும்பவும் விவாகம் செய்தார்கள்.. நாலைந்து வருஷங்கள் கடந்தது.பாட்டிக்கு பேரன் பிறக்கப் போகிறான் என்று ஸந்தோஷம்.
பார்க்கிறவர்கள் எல்லோரும் தாயும்,பிள்ளையும் நல்லபடி வெவ்வேறாகி ஸுகப்பிரஸவம் ஆக வேண்டும் என்றே ஆசிகள் வழங்கும் காலமது. பிரஸவம் என்பது மறு பிறவி.. ஆயிரம் காலத்துப் பயிராக இருக்க வேண்டும் என்பார்கள். வைத்திய வசதி கிடையாது. நம்மது என்ன ஆயிற்று பார்ப்போமா?
எவ்வளவு ஜாக்கிரதை,எப்படி இருந்தாலும் நடப்பது நடந்தே தீரும். சோதனை என்பது இதுதானோ? மூத்தவளாவது ஒரு குழந்தையை விட்டுப் போனாள். இவளது குழந்தை உலகத்தையே பார்க்கவில்லை.மறுபடியும் சோகம்.இவளும் போய்ச் சேர்ந்தாள். அந்தகாலகட்டத்தில் பெண்களைக் கொடுக்கவும் மனிதர்கள் தயார். காலம் ஓடவேண்டுமே. பெண்ணுக்கும் நல்ல இடமாகப் பார்த்து பிறகும் ஒத்தாசை
வேண்டுமே!
ஊருக்குள்ளேயே ஸம்பந்தம் வேண்டுமே? அவரும் பெண்ணுக்கு முதலில் நல்ல இடத்தில் விவாகம் செய்து விட்டுத் தானும் கலியாணம் செய்து கொள்கிரார். நல்ல வேளை இந்தக் கல்யாணத்தின் மூலம் ஸந்ததி உண்டாகவில்லை..
பெண் கர்பவதி ஆகிராள். நல்லபடி ஆகவேண்டுமே என்ற பயம்தான் மேலிடுகிறது. அந்த நாட்களில் இப்படி எவ்வளவு காலம் முன்நின்றது யூகிக்க முடியவில்லை. குடும்பத்தின் முதல் ஸந்தோஷமாகப் பேரன் பிறந்தான். ஸந்தோஷம் கரை புரண்டது. எவ்வளவுவருஷங்களுக்குப்பின்வீட்டில்சம்பந்திகள்,மாப்பிள்ளை,வருவோர்,போவோர் என களை கட்டியது.மூன்றாவதாக பெண்ணைக் கொடுத்தவர்களுக்கு மட்டும் நம் பெண்ணிற்கு ஒன்றுமில்லாது போய்விடுமோ என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்து விட்டத
.எந்த காலத்திலும்எல்லோரிடமும் எல்லா குணங்களும் ஆங்காங்கே தலை தூக்கிக் கொண்டுதான் இருந்தது.ஆனால் ஸம்பந்தப் பட்டவளோ எவ்வளவோ கஷ்டங்களை நேரில் பார்த்ததின் பயன் குடும்பத்தின் ஸந்தோஷத்தை அவளுடயதாகவே ஏற்றுக்கொண்டு நல்ல முறையில் தோழமையுடன் பாராட்டுவதும்,சீராட்டுவதாகவும் பெரிய மனுஷியாகவே செயல்பட்டு குடும்பத்தை அழகுற நடத்தினாள். குழந்தை பேரனாகவும்,பிள்ளையாகவும் அவ்வளவு உயர்வுடன் கொண்டாடப்பட்டு ஊரே அவர்களை மெச்சும் படி அவ்வளவு ஸந்தோஷமாக இருந்தது குடும்பம்.
. நாட்டிலும் வியாதிகள் கண்டு பிடிப்பும்,நிவாரணங்களும்,டாக்டர்களும் வைத்திய வசதிகளும் ஓரளவு பெருகின என்றே சொல்ல வேண்டும்.
வசூரி,விஷ ஜுரங்கள், குழந்தைகளுக்கு ஈரல் குலைக்கட்டி இன்னும் இப்படி எத்தனையோ வியாதிகளும் ,அவைகளுக்கான மருந்துகளும் கண்டு பிடித்துக் கொண்டிருக்கும் நேரம்.நாமும் தொட்டிலுடன் இன்னும் சற்று மேலே போவோமா? தொடருவோம். மே மாதம் 18 ஆம்தேதி 2016 அன்று பதிப்பிக்கப் பட்டது இந்த நான்காவது பாகம்.
தொட்டில்-3
படஉதவி –கூகலுக்கு நன்றி
ஒவ்வொருகதையாக நான் முன்னே நீ முன்னே என்று மனதில் போட்டிபோட ஆரம்பித்து விட்டது. ஏதோ ஒன்றுக்கொன்று ஸம்பந்தமிருப்பதுபோலத் தோன்றினாலும் இம்மாதிரி எல்லாம் இப்போது சொல்லிக் கேட்க கூட முடியாது.அவ்வளவு உஷாரான காலமிது. இப்போது நடப்பவைகள் இன்னும் புதியமாதிரி உள்ளது. முன்பு ஸ்வீகாரம் அதாவது தத்தெடுப்பது என்பது சுலப காரியமில்லை. பணம்,காசு,ஸொத்து,ஸுதந்திரம்,வீடுவாசல் எல்லாமிருந்து ,அதிலும்நல்லகுடும்பமாக,நெருங்கியஉறவினர்கள்தான்,பங்காளிகளாக இருந்தால்தான்தத்து எடுக்கவோ, கொடுக்கவோ விரும்புவார்கள். நல்லது கெட்டது
நம் கையிலா இருக்கிறது குடும்பத்தில் உள்ள. எல்லோருக்கும் கஷ்டப்படாத வகையில் சொத்துக்களை எழுதி ரிஜிஸ்டர் செய்து விட்டு , ஆசார அனுஷ்டானத்துடன் உறவினர்முன், விதி பூர்வமாக தத்தெடுப்பது என்பது விருந்துகளுடன் முடியும். பிறகு நல்ல நாளில் தத்தெடுத்தவர்கள் ஸ்வீகாரப் பிள்ளைக்கு உபநயனம்,பிரமோபதேசம் செய்வார்கள். தத்துக்கொடுத்த பெற்றோர்களுக்கு அதிலும் தாய்க்கு கனமான பவுனிலான சங்கிலி கட்டாயம் போடுவார்கள்
. மற்றவர்கள் பேசிக் கொள்வார்கள்.நல்ல கனமாகத்தான் சங்கிலி இருந்தது. வம்பில்லை இது. வழக்கமான டயலாக். ஸொத்தே அவர்கள் வசம் வருகிறது. ஒற்றுமையும்,நேசமும் வளர்க்கத்தான் பாடு படுவார்கள். எங்கோ ஒன்று ஆக்கிரமிப்புபோல அமைந்து விடுவதும் உண்டு.ஏதோ எனக்கு ஞாபகம் வந்த சிறிதளவு ஸமாசாரமிது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்பவர்களைக்கூட சில ஸமயம் ஸ்வீகாரம் விடாது. அந்த ஒற்றைத்தெரு கோகிலா பாட்டி,தாத்தா எதுவும் வேண்டாம். எல்லாம் கோவிலுக்குக் கொடுத்து விடலாம்,குழந்தை இல்லா விட்டால் என்ன என்று சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று போய்விட்டார். குழந்தை வளர்ப்பதிலும் கஷ்டங்கள் எவ்வளவோ உள்ளது. தானமாக எழுதி வைத்து விடலாம் என்றவர்தான்அவ்வளவாகவயதுமுதிர்ந்தவரும்இல்லை.காயோ,கறியோ,பழங்களோ, எல்லாம் ஏழைகளுக்கு வாரிவாரி வழங்கியவர். சற்று வயதான பாட்டி. என்ன செய்ய முடியும். அவ்வளவாக விவகாரம் போதாது. ஊர்க்காரர்கள் சேர்ந்து பாட்டியின் தம்பியின் பேரனை ஸ்வீகாரம் செய்து வைத்தனர்.
தம்பி யாவற்றையும் பார்த்துக் கொண்டார். அதிக வருஷம் பாட்டி உயிருடனில்லை. கோவில் முதலானவற்றிற்கும் ஏராளமாக கொடுத்தார்கள். காலம் சென்று கொண்டே இருந்தது. பாட்டியின் மகனும் அழகிய வாலிபனாகி,படித்து,முடித்து தில்லியில் வேலைக்குப் போனான். என்ன நீங்களே சொல்வீர்கள் காதலா? என்று. ஆமாம் அதுவேதான். கூட வேலை செய்யும் அழகியபெண். மிக்க சினேகம்தான். இவன் மனதில் ஒருதலைக்காதல்போல. அது தெரியாத அந்தப்பெண் வேறு நண்பருடன் திடீர் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பார்டிக்கு அழைக்க பையன் விட்டு விட்டான் மனதை.
பயித்தியம் பிடித்தவன்போல் பிதற்ற ஆரம்பித்து விட்டான்.
கலங்கிவிட்டது மனம். கூட இருந்தவர்கள் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுக்க, ஓடினார்கள் பெற்றவர்கள்.எதுவும் தெரியாதவர்கள். மனதை விட்டுவிட்ட பிள்ளையைப் பார்த்து, காரணம் மற்றவர்கள் சொல்லக் கேட்டு பதறி ஊருக்கு அழைத்து வந்தார்கள். அவ்வளவுதான் எதிரில் யாரைப் பார்த்தாலும் உன்னை நான் எவ்வளவு காதலித்தேன். உன்னிடம் சொல்வதற்குள், என்னை நீ புரிந்து கொள்ளவில்லையே! இப்படி செய்து விட்டாயே, இது ஸரியில்லை, நான் உன்னை விரும்புகிறேன் என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்து விட்டான். ஊரில் வீட்டுக்கு வீடு அறியாத பெண்கள். வாசலில் தலைகாட்டவே பயம்.தப்பித் தவறி பெண்கள் எதிர்ப்பட்டால் மிகவும் கஷ்டமாகிவிடும்.வயித்தியம் அவர்கள் செய்தாலும் , வீட்டில் அவனைத் தக்க வைக்க முடியவில்லை.
அந்தகாலத்துவயித்தியங்கள்மந்திரம்,தந்தரம்,ரக்ஷை,திருஷ்டி என்று பலவகைகள் செய்து அவன் ஸாதாரணநிலைக்குத் திரும்பவே கஷ்டமாக இருந்தது. பெண்கள் உள்ள வீட்டின் வாசலில்ப் போய் உட்கார்ந்து விடுவான். இதனால் எவ்வளவு புரிந்து கொண்ட குடும்பங்களாக இருந்தாலும் மனஸ்தாபங்கள் உண்டாக ஆரம்பித்தது. ஏச்சு பேச்சு சண்டை,சச்சரவு அளவிற்கு உயர்ந்தது. ஏதோ நல்ல காலம். இதெல்லாம் பாட்டிக்கு இல்லை. சென்னையில் நல்ல டாக்டர் ஒருவர் இருப்பதாகத் தெரிந்து, அவ்விடம் அழைத்துப்போனதில், யார் செய்த புண்ணியமோ, படிப்படியாக உடல்நிலை முன்னேறியது. திரும்ப அதே வேலையிலும் சேர அனுமதி வந்தது.சுபாவத்தில் மிகவும் ஒழுங்கான பையன்.
டாக்டரின் ஆலோசனை பையனுக்கு நல்லதொரு விவரங்கள், உண்மை அறிந்த பெண்ணாய்ப் பார்த்து விவாகம் செய்வித்து, தாய்தந்தையர்களான நீங்களும் உடன் போய் இருங்கள். எல்லாம் ஸரியாகிவிடும் என்று மருந்துகள் ஏதோ சிறிது நாட்களுக்கும் கொடுத்தார். எல்லாம்ஸரி. பெண் யார் கொடுப்பார்கள். பிள்ளைக்கு வசதிகளுக்குக் குறை ஒன்றுமே இல்லை. ஊரே அவனால் சினேகமிழந்தது. இதற்கு வழி யார் வகுப்பது? பெரிய கேள்விக் குறி யாவர் மனதிலும். விடை எப்படிக் கிடைக்கும். வேலைக்குப் போயாக வேண்டும். ஊர் மட்டிலும் மாற்றிக் கிடைத்தது.அம்மா மிகவும் நல்ல பெயரெடுத்தவள். அவள் பெண்ணையே , உன் பெண்ணைக்கொடு. நான் யாரிடம் கேட்பேன்? இந்த உபகாரம் செய். வேறு வழி இல்லை. ஸ்வீகாரத்தில் புத்ரான் தேஹி என்று பிள்ளையை யாசகமாகக் கேட்பார்களாம்
. நான் உன்னுடன் பிறந்தவனுக்காக மருமகளாகத் தானம் கொடு என்று கேட்கிறேன் என்று அறற்றி இருக்கிரார்கள்.பின்னிப் பிணைந்த குடும்பமது. எவ்வளவோ யோசித்திருப்பார்கள். பல டாக்டர்களைக் கலந்து ஆலோசித்திருப்பார்கள். ஆடம்பரமில்லாது திருப்பதியில்ப் போய்த் தன் பெண்ணை, விவாகம் செய்து கொடுத்துவிட்டனர் அந்த பாசமுள்ள தம்பதியினர். குடும்பம் தொடங்கியது.அந்தப்பெண்ணும் எவ்வளவு பயந்திருப்பாள்? வேளை நன்றாக இருந்தது.
யாவும் நல்ல படியே சென்று ஒரு குழந்தையும் பிறந்தது. நேசம் மிகுந்தது. குழந்தைதான் சற்று மூளை வளர்ச்சி குன்றியதாக இருந்தது. திரும்பவும்கவலைகளா? அதிக மாதங்கள் அது ஜீவித்திருக்கவில்லை
நெருங்கிய உறவில் ஸம்பந்தம் செய்வதால் இம்மாதிரி குறைகள் உண்டாகிறதென்று அறிந்த காலமது.அவளுக்கு அடுத்து கர்பகாலத்திலேயே தக்க மருந்துகள் சாப்பிட்டுத் ,தற்காப்பு முறையில் இரண்டு குழந்தைகள் பிறந்து வாழ்க்கை எந்த சிக்கலுமின்றி வளமாக ஓடி பாட்டி தாத்தாவின் வம்சம் விளங்கியது
. ஊர் ஜனங்களுக்கு ஓரளவு நெருங்கிய உறவில் ஸம்பந்தம் எந்தளவிற்குப் பாதிக்கிறதென்ற நீதி போதனையும் கிடைத்தது. எவ்வளவு சிக்கல். வேண்டாமென்றாலும் விடாத தொட்டில் ஸம்பந்தம். நினைவுகள் இன்னும் கரை புரள்கிறது. இன்றும் உறவில் ஸம்பந்தம் என்பது அறவே ஒழிக்கப்படவில்லை. நல்ல காலம் இருந்தால் இராகுகாலம் ஒன்றும் செய்யாது என்பது இதுதான் போலும்.
தொட்டில் 2

தொட்டில்கள்
லக்ஷ்மி அக்காவிற்கு ஏதோ கருப்பைக் கோளாறுகள். அவளக்காவிற்கு நிறைய குழந்தைகள் . பிள்ளையோ,பெண்ணோ அக்கா கர்பமாக இருக்கும்போதே அவளை அழைத்துக் கொண்டு வந்து பிறந்தது முதல் குழந்தையை வளர்க்க உத்தேசம். மாமியார் பிள்ளைக்கு வேறு கல்யாணம் செய்து விடப்போகிறாள் என்ற பயம்.அக்காவிற்கும் ஆண் குழந்தையே பிறந்தது. ஸொத்து ஸுகத்திற்கா பஞ்சம். ஒருமாதம் வரை உடனிருந்து விட்டு அக்கா ஊர் போய்ச் சேர்ந்தாள்
.லக்ஷ்மியின் மாமியார் சொல்லுவாள். சின்னக்குழந்தை பிறந்து வளர்ந்து, அழணும்,சிரிக்கணும், விளையாடணும், படுத்தணும், விழணும், எழுந்திருக்கணும், கூட இருக்கும் பசங்களுடன் சண்டை போடணும்,ஸமாதானம் ஆகணும், எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளணும்,பாத்து,பாத்து வளக்கணும், இப்படி எல்லாம் இருக்க பெரியவனாக்க குழந்தை வேண்டுமென்பாள் அது ஞாபகம் வந்தது..
என்ன கோலாகலமான தொட்டில் வைபவம்? அதனைத்தொடர்ந்து,பார்த்ததும்,கேட்டதும் ஞாபகம் வரத்துடங்கியது. ஸாதாரணமாக தொட்டிலுக்கு அலங்காரம்அதிகம் இருக்காது. மெத்தென்று பழைய துணியை மடித்துப்,போட்டு சுற்றிலும் வேப்பிலை தொங்கும். தரையில் அரிசியைப்பரப்பிஅதில்பெயரைஎழுதி,துளிபவுனைப்போட்டுஅதில்பெரியவர்களான,
பாட்டியோ அத்தையோகுழந்தையின் பெயரை அதன் காதில் மெல்ல மூன்று முறைச்சொல்லி விட்டு தொட்டிலில் கிடத்தி தாலட்டுப் பாடுவார்கள்.இதெல்லாம் ஸாயங்கால வேளையில். ராமரையும்,கிருஷ்ணரையும் முன்னிருத்தியே பாட்டுகள் இருக்கும். லாலி என்ன தாலாட்டு என்ன வந்தவர்கள் குழந்தைக்கு கையில் பணத்தைத் திணிப்பதென்ன? பணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறதே!. சமர்த்து. கேட்கணுமா என்ற ஸர்டிபிகேட்டுகளும் கிடைக்கும். பதினொன்றாம் நாள் காலையிலேயே புண்யாசனத்தின் போதே பெயரிடுபவர்களும் உண்டு.
தொட்டிலில் ஒரு சிறிய சுண்டல் மூட்டையும் இருக்கும்.அப்பா இவர்கள் வீட்டிலோ ஏகதடபுடல். வந்த குழந்தைகளுக்கெல்லாம் பரிசுகள். திருவிழா தோற்றுப்போகும். கோலாகலமான தொட்டில்.
இதுவும் ஒரு ஸ்வீகரித்தல்தான்.செல்லமோசெல்லம். நடந்தால் குழந்தைக்கு கால் தேய்ந்து போகும். போகிறபோக்கிலே கண்டித்து வளர்க்காமல் நினைத்ததை சாதிக்கும் முரட்டுப் பிள்ளையாக வளர்ந்தது.காலம் வயதைக் கூட்டினால் ரௌடியாக உருவெடுக்க வேண்டியதுதானே. படிப்பென்னவோ வந்தது. மேலும் படித்து வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. ஊரிலுள்ள பெண்களைப் பார்த்து நக்கலடித்துக்கொண்டு , கோபித்தால் இதற்குதான் என்னை வளர்த்தீர்களா என்று கேட்பதுமாக இருந்தான். நல்ல வேளை ஊரிலுள்ளவர்கள் முன்னாடி ஒரு கால்கட்டுப் போடு. எல்லை தாண்டிவிட்டால் கஷ்டம் என உணர்த்த கடவுளருள் சமத்துள்ள,சாந்தமான பெண்ணொன்று கிடைத்து அதிர்ஷ்டம் நன்றாக இருந்ததால் தேடி மணமுடித்தனர். குடும்பம் மிகவும் பாழ்படாமல் ஒரு கௌரவமான முறையில் வழிநடந்து அந்தப் பெண் பாராட்டுதலுக்கு உள்ளானாள். அவள் எவ்வளவு மனக் கஷ்டம் அனுபவித்தாளோ? அவன் திருந்துவதற்குள் பாதி ஸொத்து காலி. இன்று குடும்பம் நன்றாக உள்ளது. இது ஒரளவு தக்க மனைவி கிடைத்ததின் பலன். காலத்தில் திருத்தித் திருந்தியதால் பேரனும் பேத்தியுமாக வம்சம் வளருகிறது. ஸ்வீகாரம் ஓரளவு ஒழுங்காகியது. ஸொந்தம் ,இரவல் காரணமில்லை.
அதிக செல்லம் ஆபத்தில் முடியும். இது மட்டும்தானா ஞாபகத்தில் வந்தது?
வேறு பெரிய பெயர்போன ஆசாரஅனுஷ்டான சாஸ்த்திர ஸம்பிரதாயங்கள் அறிந்து, வேத,தர்ம சாஸ்திரங்கள் அறிந்த குடும்பம் ஒன்றும் ஒரு நிமிஷத்தில் கண் முன் ஓடியது.
ஸந்தேகங்கள் கேட்டுசாந்தி,ஹோமங்கள்,நாகப்பிரதிஷ்டை இதற்கு இது பரிஹாரம், செய்யக் கூடியவைகள், கூடாதவைகள் என்று , ஜாதகத்தின் பலன்களுக்கேற்ப பரிஹாரங்களும், சாஸ்திரமறிந்து சொல்லக்கூடிய குடும்பம். பலன்பெற்றோர் ஏராளம். அந்தக் குடும்பத்தில் பெண் ஒன்றும் பிள்ளை ஒன்றுமாக இரண்டுபேர். பிள்ளைக்கு ஸந்தான பாக்கியம் ஏற்படவில்லை. இந்தக் காலமா?எல்லோருக்கும் சொல்கிறாரே அவருக்கென்ன ஆயிற்று என்று கேட்பார்கள். டாக்டரைப் பார்ப்பதுதானே என்று கேட்பார்கள். அந்தக்காலமில்லை அப்போது. யோசித்து யோசித்து ஸ்வீகாரம்தான் ஸரி என்று பட்டது. பூணூல் போடாத பையன்கள்தான் ஸ்வீகாரத்திற்கு ஏற்றது. தேடினார்கள் உறவில் கிடைத்த பையனை ஒன்பது வயதான அழகிய பையனை ஸ்வீகரித்தனர்.
தெரிந்த கலைகளை எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டாமா? பையன் பரவாயில்லை, அக்கரை காட்டினான். இருப்பினும் பாட்டில்தான் நாட்டம் இருந்தது பையனுக்கு. ஏதோபெயரளவிற்கு வேதம் படிப்பதாக பாவனை செய்து கொண்டு பாட்டுபாடுவதும்,கூத்தடிப்பதுமாக வளரத் தொடங்கினான். ஊர் சுற்றுவது,பாடுவது, இப்படி கூத்துகள் அறங்கேற ஆரம்பித்தது எல்லாம் வயதானால் ஸரியாகி விடும் அதிகம் கண்டித்தால் வேறு விதமாக பையன் மாறிவிட்டால் என்ன செய்வது?இப்போதே பதில் பேசுகிறான். கண்டித்தால் சண்டையும்,சச்சரவுமாக அல்லவா குடும்பம் போய்விடும். ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்தால் ஸரியாகப் போகும். பெண்யார் கொடுப்பார்கள்.தன் வம்சம்விளங்க பெண்ணின் பெண்ணையே, நன்றாகத் திருந்தி விடுவான் என்று பேத்தியையே மணம் முடித்து வைத்து திருந்துவானா என்று பார்த்தார். வம்சம் விளங்க பேரன்,பேத்தி கிடைத்தது. ஊர் சுற்றும் பாட்டுக் கும்பலுடன் பழகி வேண்டாத பழக்கங்கள்.குடி,சீட்டாட்டம் போதாதா? பார்த்த பெரியவர் மனந்தாளாது கால கதியடைந்தார். பிள்ளைக்குத் தத்தாரித்தனம் அதிகமாகியது. இருக்கும் ஸொத்துக்களையும் அழித்து விடுமுன்னர் ஊரிலுள்ள பெரியவர்கள் எப்படியோ முனைந்து ஓரளவு ஸெட்டில்மென்ட் செய்து இருப்பவர்கள் வாழ ஊரிலுள்ளோர் வழி செய்தனர். எந்த ஸமயத்தில் எங்கு வீழ்ந்திருப்பானோ, என்ன தண்ட கடன்களை வாங்கி சந்தி சிரிக்கும்படி செய்து விடுவானோ என்ற பயத்திலேயே, தாயும்,பெண்ணுமாக வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு குழந்தைகளையும் வளர்த்து, அவனையும் கவனித்து , அவன் போன பின்னர்தான் குடும்பத்திற்கே விடிவு ஏற்பட்டது. ஸந்ததிகள் பெரியவரின் வம்சமாக நன்றாக உள்ளனர். அந்த குடும்பம் மனதில் பரந்தோடியது.இதே மாதிரி மற்றொரு குடும்பமும் என்னை மறந்து விட்டாயா என்று கேட்கிறது. பார்க்கலாமா? தொடரலாம்.

தொட்டில்
படங்கள் உதவி—கூகல்..நன்றி
தொட்டில் 1
பொழுது போகாமல் ஏதோ யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும்,வெளியில் போகாமல் தன் தள்ளாமையைக் காரணம் காட்டும் தாயைப் பார்த்தவுடன் மனம் கனத்தது. பிள்ளையல்லவா?
ஆபீஸிலிருந்தும் வந்ததும் வராததுமாய் அம்மா நான்உன்னைக் கூட அங்கு அழைத்துப்போகிறேன்.கட்டாயம் பெரியவர்கள் வந்துதான் ஆசீர்வாதம் செய்ய வேண்டுமாம்.வந்ததும் வராததுமாக அவ்வளவு முக்கிய செய்தி அம்மாவிற்கு.
ஆமாம் 75வயது முதியவளை அழைத்துப் போகிறானாம். வந்ததும் வராததும் அம்மாவிற்கு மனம் குளிர வார்த்தைகள். இந்த வயதானவர்கள் வீட்டிலிருந்தால் ஏதோ பெரிய உபசாரம் அவர்களுக்கு. வீட்டில் எத்தனைப் பிரசினைகளை நாம் கவனிக்கிறோம். நாம் பின்னுக்குப் போவது இவர்களால்தான் போலுள்ளது. இப்படி சில மருமகள்களின் எண்ணம் முகத்தில் பிரதிபலிக்கிறது.
என்ன அவஸரம் எங்கு ஓடிவிடப் போகிரார்கள். அப்புறம் விசாரித்தால் போதாதா. தான்தான் பெரிய ஆஸாமி என்ற எண்ணம் இப்படிதான் வந்து விடும் இவர்களுக்கு.
அழைத்துப் போகிறேன் என்று சொன்ன ஒரு வார்த்தையே அம்மாமார்களுக்கு வேண்டியவர்கள் வீட்டிற்குப்போய், வந்திருப்பவர்களிடம் அளவளாவிய ஒரு பெருமையை மனது ஒரு க்ஷணத்தில் அனுபவித்து விடுகிறது.போய் என்ன செய்யப்போகிறோம்?
நம்மை சற்று ஜாக்கிரதையாக அழைத்துப் போகும் பொருப்பு, இன்னும் போன இடத்திலும் நம்மைசற்று கவனிக்கும் பொருப்பு இவையெல்லாம் பிள்ளைக்கா?இன்னும் அக்கரையாக வேலைதான் பிரமோஷன் ஆகும். வாஸ்தவமும் அதுதானே.இப்படி சிந்திக்கும் மருமகளின் முகத்தை பார்த்து விட்டு நீங்கள் போய்விட்டு வாருங்கள். நான் போன மாதிரிதான் என்று ஒரு நொடியில் மனதை மாற்றிக்கொண்டு வாய்கள் மொழியை உதிர்க்கும். வாஸ்தவமும் அதுதானே!
முகமே காட்டிக் கொடுக்கிறதே
ஏன் அப்படி சொல்லணும் என்ன விசேஷம் கேட்டு விட்டுப் பதில் சொல்லுங்கள். நான் காபி கலக்கப்போகணும். மேலே போய் ட்ரஸ் மாத்திண்டு வரேன். நீ ஸந்தோஷப் படுவாய் அதான் வந்தவுடனே சொன்னேன். பிள்ளை மேலே போயாச்சு. என்ன நாம் ஸந்தோஷப்படும்படியான அவ்வளவு பெரிய ஸமாசாரம். யோசனை பலத்தது.
ஆவல் அதிகரித்தது. என்னுடைய சினேகிதன் குழந்தைக்கு நாளைக்குத் தொட்டில் போட்டு பெயரிட வேண்டுமாம் . பெரியவளாக நீ வரவேண்டுமாம்.
என்னது,தொட்டிலா.குழந்தையா என்ன சொல்றே நீ! அதெல்லாம் நாளைக்குப் போனால்தான் தெரியும். வீட்டுக்கு வரும்போது அவஸரமா சொல்லிவிட்டுப் போனான். எனக்கும் ஒன்றும் புரியலே. போனால்த் தெரியும். அவ்வளவுதான்.
வயதானவர்களுக்கு எண்ண ஓட்டமா பஞ்சம். இரவு படுத்தால் எண்ண ஓட்டம் கனவா,நினைவா இது எத்தகையது?
எத்தனை தொட்டில்கள் போட்டுப்பார்த்து பேரிட்டு வாழ்த்தி இருக்கிறோம். குழந்தையே பிறக்க வாய்ப்பில்லை என்று பல காலமான பிறகு அவர்கள் வீட்டில் தொட்டில். ஆச்சரியம். மனது சிந்திக்க ஆரம்பித்து விட்டது.
என்ன ஒரு இருபதுவயதில் லேட் கலியாணம்தான் அந்தக் காலத்தில் எனக்கு வாசலில் நிக்காதே, பெரியவா வாசலில் நடந்துபோனா அதுவும் நாம் எழுந்து நிற்க வேண்டும். அறியா பிள்ளைகள் ரோடில் போனால் எழுந்து உள்ளேயே ஓடிப்போய்விட வேண்டும். எங்கேயாவது போகவேண்டுமானால் அதுவும் கல்யாணம் கார்த்திக்கு வயதானவர்களுடன் உட்கார்ந்து பதவிசாக இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்து ஊர் கதைகளெல்லாம் பேசுபவர்கள் பேச்சை மட்டும் தாராளமாக காதில் விழும். வம்பு என்று சொல்வதா நியூஸ் பேப்பர் என்று சொல்வதா? அது அந்தக்காலம். நல்லது கெட்டது எல்லாம் அத்துபடியாகும்.
ஜெயாமாமி பெரிய பணக்கார பாட்டி என்று கூடச் சொல்லலாம். மாமா இல்லை. ஒவ்வொரு காரியமும் அவ்வளவு விதரணை. கூடப் பிறந்தவர்கள் உறவு, தெரிந்தவர்கள் என்று யாவருக்கும் அவ்வளவு உபகாரம். தயை,தாக்ஷண்யம் எல்லாம். குழந்தைகள் கிடையாது. மிகவும் யோசித்து யோசித்துச் சின்ன தங்கையின் பிள்ளையை ஸ்வீகாரம் எடுத்தார். நல்ல அருமையான பிள்ளை. தன் கூடவே வைத்துக்கொண்டு சீராட்டி,பாராட்டி,படிக்க வைத்துகாலேஜும்படிக்கவைத்து,மனமகிழ்ந்து இருந்தார். கிராமங்களில் வேலை கிடைக்குமா? நல்ல வேலை சென்னையிலும் வேலை கிடைக்கப்போகிறது.. ஊரார்முதல் யாவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. நான் ,நீ என்று பெண் கொடுக்க முன் வந்தனர். அழகான பெண்,படித்தபெண்,நல்ல குணமுள்ளவள் என்று தூரத்து உறவினரின் வழியில் மருமகளும் வந்தாயிற்று. மருமகளோ நகரத்தில் படித்தவள். பார்க்க,பேச அழகுதான். நல்ல பெண்
ஊரே கொண்டாடியது. புதுப்பொண்ணு ஒரு காரியம் கண்ணில் காட்டாமல் எல்லாம் செய்து மாதங்களோடி விட்டது. பண்டிகை,பருவம் ஐயோ இந்தப் பெண்ணிற்கு மடி ஆசாரமே தெரியவில்லையே! மாமிக்கு தோன்றியது. நாம் சொல்லிக் கொடுப்போம். காத்தாலே எழுந்ததும்,பல் கில்தேச்சுட்டுவந்து ஸாமியை நமஸ்காரம் பண்ணணும்னு சொன்னோம். ஒரு நாள் கூட பண்ணி பாக்கலே. குளிச்சுட்டு மடியா புடவை கட்டிண்டுதான் சமையல் பண்ணணும். அட கூட மாடவாவது ஒத்தாசை பண்ணும்மான்னு சொன்னா அதுவும் இல்லே. நம்ம அளவு மடி இல்லாவிட்டாலும்,லாண்ட்ரிலேந்து இஸ்திரி பண்ணி வந்த புடவையைக் கட்டிக் கொண்டு வந்து, கூடமாட செய்ய வரா. சொன்னா புடவை சுத்தம்தானே அம்மா வேணும் இதெல்லாம் என்னம்மா? எனக்கு சுத்தமா இதெல்லாம் பிடிக்காது என்று நேரில் சொல்லி விட்டாள். ஸரி நாம் எதுவும் சொல்லக்கூடாது. நல்ல பேர் கிடைக்காது. மனம் குமுறினாலும் பார்க்கலாம். நாமே செய்து கொள்வோம் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள். எச்சல் பண்ணி சாப்பிட்டால் கை அலம்பணும் இப்படி செய்யணும்மா என்று நல்ல முறையில் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு மறு நாளே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஸகஜபாவம் தொலைந்து விட்டது. எதையும் சொல்ல முடிவதில்லை. நாம் ஏதோ வேண்டுமென்று சொல்வதுபோல பிள்ளையிடம் உருவேற்றி விட்டாள்.
என்ன பெரிம்மா வரவர அதோட ரொம்ப மல்லு கட்ரே போலெருக்கே. வேலைக்கு நான் போகும்போதேஎன்னோட அவ வந்துடணுமாம். அதுவரை பொறந்தவீடு போகிறேன் என்கிறாள் . அப்படி என்னதான் நடக்கிறது இங்கே. என்னாலே நம்ப முடியலே. ஒண்ணுமே இல்லப்பா நடந்தது இதுதான். வேண்டாம் பெரிம்மா போகட்டும். வீடு பார்த்து அப்புறம் அவவரட்டும். நான் அவளைக் கொண்டு விட்டுடறேன். உன் மடி ஆசாரம்,அன்பு அவளுக்குப் புரியாது. நான் எப்படியும் அடுத்த வாரம் போகணும். மறுத்து எதுவும் சொல்ல முடியலே. துக்கம்,தொண்டையை அடைக்க பிரமித்து நின்றாள். எல்லாம் ஒவ்வொன்றாக நாளாவட்டத்தில் அவளிஷ்டப்படியே நடந்தது.பேரன்,பேத்தி பிறந்தது. போய்ப் பார்த்து விட்டு வந்தாள். அவள் திரும்பவராததுடன் கணவனையும், ஸொத்தில் விற்கவும்,இதை விற்கவும் என்று மனஸ்தாபம், அபிப்ராய பேதமுண்டாக்கி பேச்சு வார்த்தை அற்றுப் போகும் அளவிற்கு வளர்ந்து விட்டது. மாமி எதைக் கேட்டாலும் கொடுத்தாள். ஊர் அக்கம் பக்கம் அருகில் தெரிந்த,அரிந்த பெண்களிடம் பாசம் காட்டி காலம் முழுதும் அவர்களின் அன்புடன் காலத்தைக் கழித்தாள். ஆஸ்திக்குப் பிள்ளையாக எல்லாம் அவர்களுக்குப் போயிற்று. மாமியும் ஊராரின் அன்பிலேயே நல்லபடி போனார்.வளர்த்த ஸ்வீகாரம்.தொட்டில்போடாதது.
இது மனதை விட்டு அகலுமுன்னரே லக்ஷ்மி அக்காவாத்துத் தொட்டில் ஞாபகம் வந்து விட்டது.
தொடரும்
ஹலோ ஹலோ ஹலோ.2
கஷ்டங்களாக நினைப்பை ஏற்படுத்தும் நடைமுறைகள் கற்பனைமட்டுமல்ல.
நிகழ்வுகளாகவும் இருக்கிறது. வயோதிக மன உணர்ச்சிகளாக நினைக்க வேண்டியவைகள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Continue Reading மார்ச் 6, 2013 at 6:03 முப 24 பின்னூட்டங்கள்
ஹலோ, ஹலோ,ஹலோ
இதுவும் ஒரு வயதான பெண்மணியின் வாழ்க்கை ஓட்டம்தான். பணம் என்ன செய்ய முடியும்/?
வயது ஓடுவதைவிட வாழ்க்கை ஓடிவிட வேண்டும்.
Continue Reading பிப்ரவரி 27, 2013 at 10:40 முப 17 பின்னூட்டங்கள்
தை பிறந்தால்–2
அன்றைய கதையின் இன்றைய முடிவு. படியுங்கள். கருத்து சொல்லுங்கள்.
தை பிறந்தால்–1
கதைதான். நீண்ட கதை. படித்து ரஸித்துச் சொல்லுங்கள்.
Continue Reading ஜனவரி 12, 2013 at 10:37 முப 52 பின்னூட்டங்கள்