Posts filed under ‘கிச்சடி வகைகள்’
ஜெயின் கிச்சடியும் பத்லா கடியும்
ஜெயின் கிச்சடியும்,பத்லா கடியும்.
ஜெயின் சமூகத்தினர் செய்யும் விஜிடபிள் கிச்சடியும் அதற்கான நீர்த்த மோர்க்குழம்பும் ருசியாக இருக்கும். இதோடு கூட சுட்ட மிளகு அப்பளாமும் எல்லோரும் சாப்பிட ஒரு அருமையான ,சுலபமான உணவு. வாய்க்கு ருசியாக இருப்பதோடு பூரா ஸத்துகள் நிரம்பியதாகவும் இருப்பது இதன் விசேஷம். ஸாதாரணமாக பூமிக்கடியில் விளையும், கிழங்கு,இஞ்சி போன்றவைகளை ஆசாரமானவர்கள் சமையலில் சேர்ப்பதில்லை. இது அம்மாதிரி முறையில் செய்யப்படவில்லை.யாவும் சேர்த்துச் செய்தது.
வேண்டியவைகள்
பெரிய வெங்காயம் —2
பூண்டு இதழ்கள்—3,
பீன்ஸ்—6, கேரட்—1,தக்காளி—1, காப்ஸிகம் சிகப்பு,பச்சை –பாதிபாதி. பட்டாணி உரித்தது அரைகப். உருளைக்கிழங்கு –1 இரண்டாக் கீறிய பச்சை மிளகாய் ஒன்று.
தாளித்துக் கொட்ட— வற்றல் மிளகாய்—2, சீரகம்—1 டீஸ்பூன்,மிளகு—1 டீஸ்பூன்,லவங்கம்—6 , ஒரு துளி லவங்கப்பட்டை, இஞ்சி சிறிது, பிரிஞ்ஜி இலை1 எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
அரிசி—பெரியடம்ளரால் ஒரு டம்ளர். பயத்தம் பருப்பு கால் டம்ளர். ருசிக்கு உப்பு.
செய்முறை. பிரமாதமொன்றுமில்லை.
கரிகாய்களை ஒன்றுபோல் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி,பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயை விட்டுக் காய்ந்ததும் தாளித்துக் கொட்டக் கொடுத்தவைகளைப் போட்டு வறுக்கவும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி,பூண்டு இஞ்ஜியைச் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பிறகு காய்களையும்,பிரிஞ்ஜி இலையையும் சேர்த்து வதக்கவும். இதனுடன்அரிசிப்,பருப்பை நன்றாகக் களைந்து அதனுடன் மூன்று பங்கு அளவு தண்ணீரையும் சேர்க்கவும் துளி மஞ்சள்ப்பொடி வேண்டிய உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விஸில் வரும் அளவிற்கு வேக வைக்கவும். நீராவி அடங்கியபின் ஒரு கிளறு கிளறி மூடி வைத்துச் சுடச்சுட பறிமாறவும்.
நான்கு ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும்.
உடன் சாப்பிட மிளகு அப்பளாம் சுட்டதும், பத்லா கடியும்.
கடி என்ற சற்றுத் நீர்க்க இருக்கும் மோர்க்குழம்பும்.
பத்லா கடி எப்படி?
நான்கு கப் மோரில் 2 டேபிள்ஸ்பூன் கடலைமாவைப் போட்டுக் கட்டி இல்லாமல் கரைக்கவும். வேண்டிய உப்பும் மஞ்சளும் சேர்க்கவும்.
பச்சைமிளகாய் இரண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்கடுகு,வெந்தயம், சிறிது லவங்கம்,மிளகு சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டி மிளகாயையும் வதக்கி மோரில் சேர்த்து நிதான தீயில் நன்றாகக் கிளறி ஒரு கொதி விட்டு இறக்கி கொத்தமல்லி இலையோ,கறிவேப்பிலையோ போட்டு இறக்கவும்.
மிளகு அப்பாளாத்தைச் சுட்டு கிச்சடியுடன் பத்லா கடியும் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கிரார்கள். கிச்சடியின் மணம் வீடுபூராவும்.
மிகவும் ருசியாகத்தானிருக்கிறது. கமகமக்கிறது.
என் மருமகள் செய்தது. நீங்களும் ருசித்துப் பாருங்கள். நமக்கு மஸாலா அதிகமாகத் தோன்றும். நன்றி ஸுமன்.