Posts filed under ‘ஊறுகாய் வகைகள்’
வடு மாங்கா,அல்லது மாவடு
ஸீஸனில் கிடைக்கும், பிஞ்சு மாங்காய்களின் ஊறுகாய்.
Continue Reading மார்ச் 8, 2013 at 12:02 பிப 22 பின்னூட்டங்கள்
கடாரங்காய் ஊறுகாய்
இதுவும் நாட்பட இருக்கும் ருசியான ஊறுகாய்தான்.
ஹிந்தியில் இதை கல்கல்என்று சொல்லுவார்கள். பழுத்த கடாரங்காயில்
ஊறுகாய் தயாரித்தல், கலந்த சாதம் தயாரித்தல் என எல்லாம் ருசியாக
இருக்கும்.
வேண்டியவைகள்—-
கடாரங்காய்—–3
வறுத்துப் பொடிக்க சாமான்கள்
கடுகு—-2 டேபிள் ஸ்பூன்
சீரகம்—-2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்—2 டீஸ்பூன்
பொடிகள்
பெருங்காயப்பொடி—-2 டீஸ்பூன்
மஞ்சள்ப் பொடி—-1டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி—4 டேபிள்ஸ்பூன்
உப்புப் பொடி—–3டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய்—முக்கால் கப்
கடாரங்காய் என்று சொல்லுகிறோமே தவிர இதுவும் பழுத்து மஞ்சள்-
-நிறம் வந்த பிறகுதான் ஊறுகாய் போடுகிறோம்.
அவசரத்திற்கு ஊறுகாய் போடுவதானால்காயைமுழுவதாகஎண்ணெயில்
வதக்கி, பிறகு நறுக்கி உப்பு காரம் சேர்த்து உபயோகிப்பதும் உண்டு.
நாம் நிதான முறையிலேயே செய்வோம்.
செய்முறை—-2 காய்களைச் சுருளாக நறுக்கி சிறிய துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும்.
சிறிது உப்பைக்கலந்துகசக்கினாற்போலதுண்டுகளைக் கலந்துவைத்தால்
,விதைகளைச் சுலபமாக நீக்க முடியும். விதைகளை நீக்கவும்.
ஒரு கடாரங்காயை இரண்டாக நறுக்கி அதன் ரஸத்தைப் பிழிந்து
நறுக்கிய துண்டுகளுடன் கலக்கவும்.
பாட்டிலிலோ, சுத்தமான ஜாடியிலோ மிகுதி உப்பைக் கலந்து 2அல்லது3
நாட்கள் நன்றாக ஊறவிடவும்.
ஊறின துண்டங்களை , பாட்டிலின் வாயில் ஒரு மெல்லிய துணியைக்
கட்டி வெய்யிலில் 2 நாட்கள் வைத்து எடுக்கவும்.
வெந்தயத்தைச் சிவப்பாக வறுத்து பொடிக்கவும்.
கடுகு, சீரகத்தைச் சூடு ஏறும்படி வறுக்கவும்.
யாவற்றையும் பொடிக்கவும்.
அடுத்து எண்ணெயை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவிடவும்.
பொடி வகைகள்,யாவற்றையும் சேர்த்துக் கிளறி ஊறின கடாரங்காய்த்-
-துண்டுகளையும் சேர்த்துக் கலந்து பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.
ஊறஊற ருசியாக இருக்கும்.
கை படாமலும், மரக் கரண்டியினால் கிளறி விட்டும், அழுத்தமாக
மூடி வைத்தும் உபயோகிக்கவும்.
காயின் சைஸைப் பொறுத்து , உப்பு காரம் , ருசி பார்த்து கூட்டிக்
குறைக்கவும். எண்ணெய் அளவும் கூட்டவும்.
டில்லியில் போட்ட ஊறுகாய். படம் எடுக்க மறந்து போனேன்.
நெல்லிக்காய் ஊறுகாய்
இதற்கு நல்ல நெல்லிக்காய் அதுதான் தோப்பு நெல்லிக்காய்
என்றும் சொல்வார்களே அந்த வகைதான் தேவை.
அறி நெல்லிக்காய் என்றும் மற்றொரு வகை உண்டு. அது
ஜூஸ்,சட்னி , கலந்த சாதங்கள் செய்ய பயன்படும்.
நான் பெறியவகை நெல்லிக்காயில் ஊறுகாய் தயாரித்ததை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
வேண்டியவைகள்
நெல்லிக்காய்—அரைகிலோ
நல்லெண்ணெய்—அரைகப்
மிளகாய்ப்பொடி—-5 டேபிள் ஸ்பூன்
வறுத்துப் பொடிக்கசாமான்கள்
1 டீஸ்பூன் வெந்தயம்
2 டீஸ்பூன் சீரகம்
3 டீஸ்பூன்—கடுகு
மற்றும் மஞ்சள்பொடி—-2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி–2 டீஸ்பூன்
உப்பு.—4 டேபிள்ஸ்பூன்
நல்ல வினிகர்—6 டேபிள்ஸ்பூன்
செய்முறை.——வெறும் வாணலியைச்சூடாக்கிவெந்தயத்தைச்
சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
கடுகு, சீரகத்தை வாஸனை வறும்படி வறுக்கவும்.
ஆறினபின் மிக்ஸியிலிட்டுப் பொடித்துக் கொள்ளவும்.
அலம்பித் துடைத்த நெல்லிக்காய்களை, வாணலியில் சிறிது
2 ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து , அதில் போட்டு லேசாக
வதக்கி இறக்கவும்.
காய்கள் ஆறியவுடன், பகுதி,பகுதியாக சிறுகத்தியின் உதவி
யுடன் இதழ்களாகப் பிறித்துக் கொட்டைகளை நீக்கவும்.
உப்பை, அரை கப் ஜலம் விட்டுக் காய்ச்சி சற்று சுண்டியதும்
இறக்கவும்..
அகன்ற ஜாடிக் கிண்ணத்தில் மிளகாய்ப்பொடி,வெந்தய,
கடுகுப் பொடிகள், சீரக,பெருங்காயப்பொடிகள், இவைகளுடன்,
நெல்லிக்காய்த் தளர்களைச் சேர்த்து மிகுதி எண்ணெயைக்
காய்ச்சி விடவும்.
உப்பு ஜலம், வினிகர் இவைகளையும் சேர்த்துக் கிளறவும்.
உப்பு ஸரி பார்த்துக் கிளறி சுத்தமான பாட்டிலில் எடுத்து
வைத்து, 2, 3 நாட்கள் ஊற விடவும்.
தினமும் சுத்தமான ஈரமில்லாத கரண்டியினால் கிளறவும்.
பிறகு பாட்டிலின் வாயில் மெல்லிய துணியினால் கட்டி
மூடி , நல்ல வெய்யிலில் 4, 5 நாட்கள் வைத்து எடுக்கவும்.
உப்பும், எண்ணெயும் சற்று அதிகமிருந்தால் ஊறுகாய்
கெட்டுப் போகாது.
காற்று புகாத அழுத்தமான மூடியினால் பாட்டிலை மூடி
உபயோகிக்கவும்.
சாதாரணமாக நெல்லிக்காய் சீக்கிரம் கெட்டுப் போகக்
கூடிய வஸ்து. ஆதலால் பிரிஜ்ஜில் வைத்து வேண்டிய
அளவு வெளியில் எடுத்து உபயோகித்தால் மிகவும் நல்லது.
நல்ல ருசியான ஊறுகாய்.உ ப்பு, காரம், எண்ணெய் ருசிக்குத்
தக்கபடி அதிகமாக்கலாம்.
ரஸஎலுமிச்சை
இது உப்பும் தித்திப்பும் காரமும் சேர்ந்த ஊறுகாய் வகை.
எண்ணெய் இல்லாமல் தயாரிப்பது. சூரிய வெளிச்சம் தான்
முக்கிய ஆதாரம்.
எலுமிச்சம் பழம் —–பழுத்ததாக 12
திட்டமாக ருசிக்கேற்ற உப்பு
சர்க்கரை—–சாற்றின் அளவு
மஞ்சள் பொடி—-1 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி——3 டீஸ்பூன்
செய்முறை—-நன்றாகப் பழுத்த 6 பழங்களைப் பிழிந்து
கொட்டை நீக்கி வாயகன்ற பாட்டிலில் போட்டு சிறிது உப்பு
சேர்க்கவும்.
மிகுதி ஆறு பழங்களை மெல்லிய கீற்றாக நீண்டவாக்கில்
நறுக்கி கொட்டை நீக்கி எடுத்துக் கொள்ளவும்
எலுமிச்சை சாற்றை அளந்து அதே அளவில் சர்க்கரையைச்
சேர்த்து நறுக்கிய மெல்லிய துண்டங்களையும் அதில்
கலந்து ஒரு நாள் ஊறவைத்து நன்றாகக் குலுக்கி விடவும்.
பாட்டிலின் வாயை மெல்லிய வெள்ளைத் துணியினால்க்
கட்டி நல்ல வெய்யிலில் தினமும் வைத்து எடுக்கவும்.
வெய்யிலில் வைப்பதற்கு முன் கிளறிவிடவும்.
பழம் ஊறி சற்று கெட்டியாக பாகு பதத்தில் வறும் வரை
வெய்யிலில் வைத்து பிறகு மிளகாய்ப் பொடியும், மஞ்சள்
பொடியும் சேர்த்துக் கிளறி ஒரு நாள் வெய்யிலில் வைத்து
எடுத்து உபயோகிக்கவும்.
இனிப்பும், காரமும், உப்பும் சேர்ந்த ஆரோக்கியமான
ஊறுகாய் இது. எண்ணெய் அவசியமில்லை.
ஊறும் பழம் அளவிற்கு அதே எண்ணிக்கையின் பழச்சாறு
அவசியம்.
சாற்றின் அளவு சர்க்கரை. குறைந்த அளவு உப்பு காரம்
நம் விருப்ப அளவு. முக்கியமான வஸ்து தொடர்ந்த
வெய்யில். நீண்ட நாட்கள், ஏன் மாதங்கள் கூட கெடாது.
ஆவக்காய் மாங்காய்.
இந்த ஊறுகாய் நிறைய மாதங்கள் வரை கெட்டுப் போகாது.
பிரிஜ்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. சரியான முறையில்
பாதுகாத்தால் நல்ல ருசியைக் கொடுக்கும்.
வேண்டியவைகள்.—–நல்ல புளிப்புள்ள முற்றிய மாங்காய் 12
அலம்பி துடைத்து பெரிய துண்டுகளாக உள் ஓட்டுடன் வெட்டிக்
கொண்டு , உள் பருப்பை மட்டிலும் நீக்கி பரவலாக தாம்பாளத்தில்
ஒரு மணி நேரம் உலர்த்திக் கொள்ளவும்.
சிவப்பு மிளகாயில் தயாரித்த மிளகாய்ப் பொடி–கால்கிலோ
கடுகு —-150 கிராம். நன்றாக வெய்யிலில்க் காயவைத்து மிக்ஸியில்
நைஸாக பொடித்துக் கொள்ளவும்.
வெந்தயம்— 50 கிராம். வெய்யிலில் காய வைத்து சுத்தப்
படுத்தி வைத்துக் கொள்ளவும்.
நல்லெண்ணெய்—-அரைகிலோ
உப்பு —பொடித்தது—-150 கிராம்.
மஞ்சள் பொடி—3 டேபிள் ஸ்பூன்
ஊறுகாயில் விறுப்பத்திற்கிணங்க சேர்க்கக் கூடியவைகள்
வெய்யிலில் காயவைத்து உறித்த பூண்டு–100 கிராம்
சுத்தப் படுத்திய கொண்டைக் கடலை–100 கிராம்
சுத்தப் படுத்திய முறுங்கைக்காய்த் துண்டுகள் 15 ஐ
துடைத்து வைக்கவும்.
ஒரு களிம்பேராத பாத்திரத்தில் மிளகாய்ப் பொடி, உப்பு, வெந்தயம்
கடுகுப்பொடி மஞ்சள்பொடி இவற்றை ஒன்றுசேர்த்து
கலக்கி எண்ணெயைச் சேர்த்து பஜ்ஜி மாவு போலக்
கலக்கவும்.
நல்ல ஜாடியை வெய்யிலில் காயவைத்துத் தயாராக வைக்கவும்.
அகன்ற தாம்பாளத்தில் மாங்காய்த் துண்டுகளைச் சிறிது சிறிதாக
போட்டு எண்ணெய்க் காரக்கலவையை மேலே போட்டுப் பிசறி
ஜாடியில் நிரப்பவும். பூரா கலவையைச் சேர்க்கவும்.
பூண்டு, கடலை எது விருப்பமோ அதை மாங்காயுடனே சேர்த்து
விடவும்.
ஜாடியைத் துணியினால் வாயைக்கட்டி ஒருநாள் வெய்யிலில்
வைத்து எடுக்கவும்.
அடிக்கடி உலர்ந்த மரக் கரண்டியினால்க் கிளறி மூடவும்.
நல்ல சைஸ் மாங்காய்க்கான அளவு இது.
உப்பு ருசிக்கேற்ப பின்பும் சிறிது கூட்டலாம்.
வெந்தயம் வறுக்கவோ பொடிக்கவோ வேண்டாம்.
எண்ணெய் .அதிகம் இருந்தால்தான் ஊறுகாய்
.கெடாமலிருக்கும்
யோசனையாக இருந்தால் பின்னுமொரு நாள் முதலிலேயே
வெய்யிலில் வைக்கவும்.
ஊற ஊற ருசியாக இருக்கும். ஊறின பிறகு எப்பொழுதாவது
கிளறினால்ப் போதும். காற்றுப் புகாமல் அழுத்தமாக மூடி
உபயோகிக்கவும். பூண்டு போடாவிட்டால் பெருங்காயம்
ஒரு பெரிய கோலி அளவிற்குப் பொடித்துச் சேர்க்கவும்.
எலுமிச்சம்பழ ஊறுகாய்
வேண்டியவைகள்—நல்ல பழுத்த பழமாக எலுமிச்சை—8
இஞ்சி—-சிறிய துண்டங்கள் 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்—-3
மஞ்சள் பொடி —-ஒண்ணரை டீஸ்பூன்
பெருங்காயம்—-பொடித்தது 1டீஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி—-1 டீஸ்பூன்
தேவையான உப்பு
மிளகாய்ப் பொடி—-5 டீஸ்பூன்
நல்லெண்ணெய்—4 டேபிள் ஸ்பூன்
செய்முறை——6 பழங்களைச் சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு
சேர்த்து விதைகளை நீக்கிவிட்டு ஒரு பாட்டிலில் போடவும்.
மீதி 2 பழங்களை நறுக்கி அதன் சாற்றைப் பிழிந்து துண்டங்களுடன்
சேர்த்து 2 நாட்கள் ஊற வைக்கவும்.
இஞ்சி, பச்சைமிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு
இறக்கி, மஞ்சள், பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும்.
எண்ணெய் ஆறியவுடன் மிளகாய்ப் பொடியையும் சேர்த்து
எலுமிச்சைக் கலவையில் கொட்டிக் கலக்கவும்.
அடிக்கடி கிளறிவிட்டு காற்றுப் புகாமல் மூடி வைத்து ஒரு
வாரம் கழித்து உபயோகிக்கவும். காரம் சேர்ப்பதற்கு முன்
ஒரு நாள் வெய்யிலில் சற்று வைத்து்ம் எடுக்கலாம். அதிகம்
செய்வதானால் மிகவும் நல்லது. ஊறுகாய்கள் எடுக்கும் போது
நன்றாக உலர்ந்த ஈரப்பசை இல்லாத கரண்டிகளை உபயோகிக்க
வேண்டும். ஊற ஊறத்தான் ஊறுகாய்கள் ருசியாக இருக்கும்.