Posts filed under ‘ரொட்டி வகைகள்’
பாசிப்பருப்பு ரொட்டி
முன்பெல்லாம் நெடுந்தூரம் பிரயாணம் செய்வதானால் உணவிற்காக ஏதாவது தயார் செய்தே எடுத்துப் போவார்கள். இன்னும் முன்காலத்தில் அரிசி,பருப்புமுதல் கட்டி எடுத்துக் கொண்டே போவார்கள். ஸமீபத்தில் காட்மாண்டுவிலிருந்து ஒரு நடுத்தர வயது தம்பதியினர் ஐரோப்பாவில் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க வந்தனர்.
வந்த இடத்தில் சைவ உணவு சில ஸமங்களில் கிடைக்காது போகலாம். எதற்கும் கைவசம் ஏதாவது வைத்திருக்க வேண்டுமென்று, இனிப்புகளும், சில வகை ரொட்டிகளும் எடுத்து வந்திருந்தனர். ஜெயின் தம்பதிகள்.
எதுவும் கிடைக்காவிட்டால்,அலுத்து சலித்து திரும்பவும் ஹோட்டல் தேட வேண்டுமே என்று நினைக்காமல், ஏதோ ஒன்றுடன் இரண்டு ரொட்டிகளைச் சாப்பிட்டு விட்டு ,இனிப்பும் எடுத்துக் கொண்டால் அந்தநேர பசி அடங்கி விடும் என்றனர். ஸரி நாமும் கேட்டுக் கொண்டால் பிளாகில் ஒரு குறிப்புஎழுதலாமே என்று யோசித்து விவரம் கேட்டுக் கொண்டேன்.
நாம் பிரயாணங்களுக்காகத் தயாரிக்கா விட்டாலும் சுடச்சுட தயாரித்துச் சாப்பிடலாமே!
மாதிரிக்காக சிறிய அளவில் செய்தது. வீட்டிலுள்ள சாமான்களைக் கொண்டே செய்ய முடியும். வேண்டியவைகள்.
பயத்தம் பருப்பு—இரண்டு குழிக்கரண்டி.
ரொட்டிமாவு தேவையான அளவு, ரொட்டிக்கும்,பிரட்டியிட மேல் மாவிற்குமாக
எண்ணெய்–மாவில்க் கலந்து பிசைய–2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் வேண்டிய அளவு உபயோகிக்கவும்.
தாளித்துக் கொட்ட–கடுகு அரைஸ்பூன்+சீரகம் அரைஸ்பூன்+நெய் ஒரு டீஸ்பூன்
.வேண்டிய பொடிகள்—மிளகாய்ப்பொடி–ஒரு டீஸ்பூன்,
பெருங்காயப்பொடி–கால்டீஸ்பூன்,மஞ்சள்பொடி–கால்டீஸ்பூன்
கஸூரிமெத்தி–அரைடீஸ்பூன். அதாவது பொடித்த வெந்தய இலைகள்
ருசிக்குஉப்பு, கால்டீஸ்பூன் சர்கரை.
செய்முறை
பருப்பைக் களைந்து ஒருமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
தண்ணீரை ஒட்ட இறுத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் ,ஒருஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கி,கடுகு,சீரகம் தாளித்து, அதனுடன் இரண்டு குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். மிளகாய்,மஞ்சள்,பெருங்காயப் பொடிகளைச் சேர்க்கவும். பருப்பைும் சேர்த்து சற்று வேகவைக்கவும். அதிகம் வேக வேண்டாம்.
நெத்துப்பதமாக பருப்பு அழுத்தமாக இருக்க வேண்டும். கீழிறக்கி ஆறவைக்கவும்.
பருப்பும்,அது வெந்த தண்ணீரும் இருக்கும். நன்றாக ஆறியவுடன் அந்த தண்ணீருக்கு ஏற்றபடி ரொட்டிமாவைச் சேர்த்துப் பிசையவும். வேண்டியஉப்பு,சர்க்கரை,இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய், கஸூரிமெத்தி
இவைகளைையும் சேர்த்துச் சப்பாத்திமாவு பதத்திற்குப் பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.இது ஞாபகத்தில் இருக்கட்டும்.
இரண்டு கரண்டி ஊறவைத்தப் பருப்புடன் இரண்டு கரண்டி தண்ணீர் சேர்த்து சற்று வேக வைத்து ஆறிய கலவையில் மாவைப் போட்டு பிசைந்திருக்கிறோம். தண்ணீர் வேறெதுவும் சேர்க்கவில்லை. இது முக்கியம்.
பத்து நிமிஷங்கள் மாவை ஊறவைக்கவும்.,
இனி வழக்கமாக ரொட்டி தாரிப்பது போலவே மாவைப்பிரித்து, குழவியினால் மாவில்த் தோய்த்து ரொட்டிகளை இடவும். பருப்புடன் சேர்ந்து ரொட்டி இட அழகாகவே வருகிறது.
திட்டமான சூட்டில் ரொட்டிகளை எண்ணெய் விட்டு தோசைக்கல்லில் போட்டுச்செய்து எடுக்கவும்.
ஆறவைத்து, நான்கு நான்காக அடுக்கிப் பார்ஸல் செய்து வைத்தால் அதிக நாட்கள் உபயோகிக்கலாமாம்.
நீங்கள் உங்களுக்குப் பிடித்த எதனுடனும் சாப்பிடலாம். தயிர் மிகவும் ஏற்றது.
கறி,கூட்டு,சட்னி,ஊறுகாய்,டால் எது வேண்டுமோ அதையும் செய்யவும்.
டால்,காலிபிளவர்வதக்கல், கீரை,தயிர் இவைகளுடன் உங்களுக்குக் கொடுக்கிறேன். சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள்.
எனக்கு உதவி என் மருமகள்.
பனீர்பரோட்டா
பனீரைக் கொண்டு செய்யும் இதை மெல்லியதாக தயாரித்துச் சாப்பிடலாம்.ருசி மிக்கது.
Continue Reading செப்ரெம்பர் 7, 2015 at 2:57 பிப 15 பின்னூட்டங்கள்
மூலிபரோட்டா என்று அழைக்கப்படும் முள்ளங்கி சேர்த்த ரொட்டி
சுடச்சுட சாப்பிட நன்றாக இருக்கும். செய்து பழக்கமானால் அடிக்கடி செய்வதற்குத் தோன்றும்.
Continue Reading திசெம்பர் 2, 2014 at 10:52 முப 15 பின்னூட்டங்கள்
உருளை கொத்தமல்லி பரோடா
உருளை கொத்தமல்லி என்பதற்குப் பதில் கொத்தமல்லி உருளை பரோட்டா என்று எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.
Continue Reading ஏப்ரல் 11, 2013 at 12:26 பிப 38 பின்னூட்டங்கள்
மட்டர் பரோட்டா
மட்டர் பரோட்டா செய்ய ப்ரோஸன் பட்டாணியை உபயோகித்தால்
சீஸன் இல்லாத சமயத்திலும் செய்ய முடிகிறது.
டிபன் டப்பாவில்லெடுத்துப்போக , மிருதுவாக இருக்கும்.
நான் சின்ன அளவில் செய்ய கணக்கு கொடுக்கிறேன்.
ஒரு 6, 7 செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்
பிசைவதற்கு.——கோதுமைமாவு—ஒன்றறைகப்
2 டீஸ்பூன்—எண்ணெய், துளி உப்பு
பூரணம் தயாரிக்க—-பச்சைப் பட்டாணி —-ஒன்றறைகப்
பச்சை மிளகாய்–2
சீரகப்பொடி, கரம் மஸாலாப்பொடி வகைக்கு கால் டீஸ்பூன்
தனியாப் பொடி, மாங்காய்ப்பொடிவகைக்கு அரை டீஸ்பூன்
எண்ணெய்–பூரணம் கிளற—3 டீஸ்பூன்
பரோட்டா செய்ய—வேண்டிய அளவு-எண்ணெய்,அல்லது, நெய்
ருசிக்கு உப்பு, ஒரு இதழ் உரித்த பூண்டு,
2 உறித்த ஸாம்பார் வெங்காயம்
செய்முறை.—
மாவுடன்,எண்ணெய், உப்பு கலந்து பிசறி சிறிது சிறிதாக
தண்ணீர் சேர்த்து ரொட்டி இடும் பதத்திற்கு மாவை மென்மையாகப்
பிசைந்து ஊரவிடவும்.
ப்ரோஸன் பட்டாணியைச் சுடு தண்ணீரில் சுத்தம் செய்து
வடிக்கட்டி வைக்கவும்.
வெங்காயம்,பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வடித்த பட்டாணியை
மிக்ஸியிலிட்டு ஜலம் விடாமல் நைஸாக அரைத்து எடுக்கவும்.
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுதைச்
சேர்த்துக் கிளறவும்.அடி கநமான வாணலி நல்லது.
நிதான தீயில், விடாது கிளறி கலவை கெட்டியாகும்போது,பொடி
வகைகளையும், உப்பையும் சேர்க்கவும்.
கையில் ஒட்டாத பதம் வரும்படி கிளறி இறக்கவும்.
இம்மாதிரி, பூரணம் செய்து, ப்ரிஜ்ஜில் வைத்து எப்போது வேண்டுமோ
எடுத்தும் உபயோகிக்கலாம்.
இப்போது பரோட்டா தயாரிக்கலாம்
ஆறின கலவையை சமனாக உருட்டி வைக்கவும்.
மாவைச் சற்று பெறியதாக உருட்டி வைப்போம்.
மாவைச் சிறு வட்டமாக குழவியினால் இட்டு ,சிறிதுஎண்ணெயைத்
தடவி, அதன் மேல் பூரணத்தைச் சிறியவில்லையாகத் தட்டி வைத்து
வட்டத்தின் விளிம்பினால் பூரணத்தை மூடுவோம்.
ஆலுபரோட்டா, போளி செய்வது போல இதுவும் அதே முறைதான்
மேல் மாவில் உருண்டைகளைப் பிரட்டி, குழவியின் உதவியால்
பரோட்டாக்களாகச் செய்யவும்.
காயும், கல்லில் பரோட்டாவைப் போட்டு ,மேலே ஈர பதம் குறையும்
போதே திருப்பிப் போடவும். விளிம்பில் சற்று அழுத்தம் கொடுத்து,
நெய்யோ, எணெணெயோ மேலே ஸ்பூனினால் தடவி திருப்பவும்.
.நன்றாக உப்பிக் கொண்டு மேலெழும்பும்.
இப்பாகத்திலும் நெய் தடவி, திருப்பியினால் சற்று அழுத்தம் கொடுத்து
சிவக்க பரோட்டாக்களைச் செய்து எடுக்கவும்.
தயிர்,சட்னி கூட்டு கறி, ஊறுகாய், டால், ரொட்டியின் ஜோடி வகைகள்
என எதனுடனும் ருசிக்கலாம்.
புதினா பரோட்டா
வேண்டியவைகள் கோதுமை மாவு—–2கப் சுத்தம் செய்த பொதினா இலை–அரைகப் மாவில் கலக்க வெண்ணெய் அல்லது நெய் –2 டீஸ்பூன் ருசிக்கு –உப்பு கடலைமாவு—-1 டேபிள் ஸ்பூன் பரோட்டா செய்ய தேவையான எண்ணெய் ருசிக்கு காரப்பொடி சிறிது செய்முறை——தோசைக்கல்லை நன்றாக சூடேற்றி காயவைத்து தீயை அணைத்து விட்டு, கல்லின் மீது பாதி புதினாவைப் போட்டு சூட்டில் காயவிடவும். மீதி புதினாவை நறுக்கியும். காய்ந்த புதினாவைப் பொடித்தும் ,மாவுடன் சேர்த்து வெண்ணெய் உப்பு காரம் கலந்து தண்ணீர்விட்டு ரொட்டி மாவைப் […]
Continue Reading ஓகஸ்ட் 10, 2010 at 6:01 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஆலுபரோட்டா
வேண்டியவைகள்.
கோதுமை மாவு—–ஒன்றரை கப்
உருளைக் கிழங்கு—-திட்டமான சைஸ் 4
பச்சை மிளகாய்—2
கொத்தமல்லி இலை—நறுக்கியது கால்கப்
சீரகப் பொடி—அரை டீஸ்பூன்
தனியாப் பொடி–அரை டீஸ்பூன்
மாங்காய்ப் பொடி– அரை டீஸ்பூன்
கரம் மஸாலாப் பொடி—அரை டீஸ்பூன்
உப்பு—-ருசிக்குத் தக்கபடி
எண்ணெய்—மாவிற்கு 2 டீஸ்பூன்
பரோட்டா செய்யத் தேவையான எண்ணெய் அல்லது நெய்
செய்முறை—-உருளைக் கிழங்கை நன்றாக அலம்பி
2 துண்டங்களாகச் செய்து , ஒரு காட்டன் துணியை நனைத்துப்
பிழிந்து கிழங்குகளை அதனுள் வைத்துச் சுருட்டி சிறிது
ஜலம் தெளித்து மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து
7, 8, நிமிஷங்கள் ஹை பவரில் மைக்ரோ வேவ் செய்து
எடுக்கவும்.
கிழங்கு வெந்திருக்கும். தோலை உறித்து விட்டு, கிழங்கை
சூடு இருக்கும் போதே நன்றாக கட்டி இல்லாமல் மசிக்கவும்.
கோதுமை மாவுடன் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து ரொட்டி இடும் பதத்தில்பிசைந்து ஊற வைக்கவும்.
மிளகாயைக் குறுக்காக நறுக்கி ,விதைகளை நீக்கி விட்டு மிகவும்
மெல்லியதாக, பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிசைந்த
கிழங்குடன்உப்பு, மற்றும் பொடி வகைகள்,கொத்தமல்லி, மிளகாய் சேர்த்துப்பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.
ரொட்டி மாவையும் சற்றுப் பெறிய சைஸில் பிரித்து உருட்டிக்
கொள்ளவும்.
மாவை உள்ளங்கை அளவிற்கு ரொட்டியாக இட்டு மேலாக,
லேசாக சிறிது எண்ணெயைத் தடவி, உருளைக் கிழங்கு கலவையை வடைமாதிரி தட்டையாகச் செய்து அதன்
மேல் வைத்து போளி மூடுவது போல மாவின் விளிம்புகளால்
பூரணத்தை நன்றாக மூடவும்.
மேல் மாவைத் தோய்த்து மெல்லிய ரொட்டிகளாகத் தயாரிக்கவும்.
ஒவ்வொன்றாகத் தயாரிக்கும் போதே, திட்டமாகக் காய்ந்த
தோசைக் கல்லில், ரொட்டியைப் போட்டு, மேலாக எண்ணெயோ
நெய்யோ தடவி, திருப்பிப் போட்டு, சற்று தோசைத்திருப்பியினால்
லேசாக அழுத்தம் கொடுத்து எண்ணெய் தடவிரொட்டியைச்செய்து
எடுக்கவும்.
உருளைக் கிழங்கை மைக்ரோவேவில் வேக வைத்தால் தண்ணீர்ப்
பாகம் குறைந்து பரோட்டா செய்ய, ஒட்டாமல் சுலபமாக செய்ய
ஒழுங்காக வருகிரது.
வேகவைத்து எடுத்தால் கிழங்கை முக்கால்வேக்காட்டில் எடுத்து
தோல் உறித்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி மசிக்கலாம்.
ஈரப்பதம் குறைவாக இருக்கும்.
மெல்லியதாக இடுவதற்குதான் இத்தனைப் பதமும்.
ஆலு பரோட்டாவா, உருளைக் கிழங்கு ரொட்டியா?
எல்லாம் ஒன்றேதான்.
மேதிபரோட்டா அல்லது வெந்தயக்கீரை ரொட்டி
வேண்டியவைகள்———–மாவு தயாரிக்க—-கோதுமைமாவு—2கப்
அரிசிமாவு-ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைமாவு, அல்லதுசோளமாவு–ஒருடேபிள்ஸ்பூன்
மிளகாய்ப்பொடி—-அரை–டீஸ்பூன் ஆம்சூர்–ஒரு டீஸ்பூன்
சீரகப்பொடி—அரைடீஸ்பூன் -ருசிக்கு வேண்டியஉப்பு
அலம்பி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய லெந்தயக்கீரை-ஒருகப்
மாவுடன் கலக்க-ஒருடேபிள் ஸ்பூன் எண்ணெய்.
இவைகள் யாவையும் ஒன்று சேர்த்துக் கலந்துப பிறகு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ரொட்டிமாவுபதத்தில் மாவைத் தயாரித்துக் கொள்ளவும். அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
ரொட்டி தோய்த்துயிட மாவும், ரொட்டி தயாரிக்க விருப்பம்போல எண்ணெயோ நெய்யோ உபயோகிககலாம்.
திட்டமான உருண்டைகளாகச் செய்து . குழவியினால் ஊறினமாவை வட்டமான ரொட்டிகளாக மேல் மாவில் பிரட்டிஇட்டு அவரவர்கள் அடுப்பில் தோசைக் கல்லில் நெய் விட்டு ரொட்டிகளைஒவ்வொன்றாகதயாரிக்கவும் . டால,கூட்டு முதலானவைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
அக்கி ரொட்டி[அல்லது]அரிசி மாவுரொட்டி.
அரிசிமாவு—-ஒருகப்
தேங்காய்த் துருவல்–முக்கால்கப்
சீரகம்—கால்டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ஒன்று
துளி பெருங்காயப்பொடி
ருசிக்கு உப்பு
ரொட்டி தயாரிக்க எண்ணெய்
எண்ணெய் நீங்கலாக மற்றவைகளைச் சேர்த்துக் கலந்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவைப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியோ அல்லது நான்ஸ்டிக் பேனோ இரண்டு எடுத்துக்கொண்டு உட்புறம் நன்றாக எண்ணெயைத் தடவவும். பின்னர் ஒர் சின்ன மாங்காயளவு மாவை எடுத்து உருட்டி கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு வாணலியில் வைத்து மெல்லியதாக அடைபோல வாணலியின் , ஷேப்பிலேயே பரத்தித் தட்டவும். நடுவில் இரண்டு பொத்தல்கள் இடவும். சுற்றிலும் பரவலாக 2,3 ஸ்பூன் எண்ணெய்விட்டுப் பிறகே[கவனிக்கவும்] வாணலியை காஸிலோ ஸ்டவ்விலோ வைத்து மிதமான சூட்டில் வைக்கவும்.இரண்டொரு நிமிஷ,ங்கள் தட்டினால் மூடித் திறக்கவும். சறறு முறுகலாகச் சிவந்த பிறகு சல்லிக் கரண்டியினால் திருப்பிப் போட்டு சிறிது எண்ணெய் விட்டு பதமாக வேகவிட்டு எடுக்கவும். வாணலியைக் கீழே இறக்கி விட்டு அடுத்து மற்ற வாணலியை ரொட்டியுடன் அடுப்பிலேற்றவும். முதல் வாணலியைத் தண்ணீர்விட்டு அலம்பி சூட்டைப் போக்கி அடுத்த ரொட்டியைத் தயாரித்துக் கொண்டால் தொடர்ந்து செய்ய சுலபமாக இருக்கும்.
சூடு இல்லாத லாணலியில்தான் கையினால் ரொட்டியை மெல்லியதாகத் தட்ட முடியும். ஆதலால் இரட்டை வாணலி முறை. சுடச்சுட ஊருகாய் சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
இதையே பச்சை மொச்சைப்பருப்பு, பச்சைப் பட்டாணி பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் முதலானவாகளைச் சேர்த்தும் நமது ரஸனைக்கேற்ப பல ருசிகளில் கார சார மாகவும் தயாரிக்கலாம்.