Posts filed under ‘சுண்டல் வகைகள்’
பச்சைப் பயறு சுண்டல்
பச்சைப் பயறு—–1கப்
பச்சை மிளகாய்—-2
இஞ்சி—-சிறிது
காரட் துருவல்—-அரைகப்
எண்ணெய்—-4டீஸ்பூன்
சீரகப்பொடி—அரை டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
கடுகு—அரைடீஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி—-விருப்பத்திற்கு
செய்முறை—-பயறை ஊறவைத்து ஜலம் சேர்த்து வேக வைத்து
வடிய வைக்கவும்.
இதற்கு கடலை, பட்டாணி போல அதிக விஸில் வைத்து
வேக வைக்க வேண்டாம்.
சீக்கிரம் வெந்து போகும்.
தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்து, காரட்துருவலை
வதக்கி சீரகப்பொடியுடன் வெந்த பயறையும் உப்பு சேர்த்து
சற்றே வதக்கி இறக்கவும். சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து
கொத்தமல்லியைத் தூவவும். மேலும் சுண்டல்களுக்கு
சீரகம், பெரு்ஞ்சீரகம், என,மசாலா பொடி, சாட்மஸாலா,
கறிப்பொடிஎன்று வாஸனைக்கு, சிறிது பொடிகளைச்
சேர்த்து, புளிப்பிற்கு அனார்தானா, ஆம்சூர்,பச்சைமாங்காய்,
எலுமிச்சை என வித்தியாஸமான வகைகளைச் சேர்க்கவும்.
கசகசாப்பொடி, புதிநாப்பொடிமுதலியனவும் ருசி கூட்டும்.
மொச்சை,நிலக்கடலை, வேர்க்கடலை, பட்டாணி, பெரும்பயறு,
காராமணி, பீன்ஸ் விதைகள், கொள்ளு ராஜ்மா
முதலானவற்றிலும், 2தினுஸுகள் சேர்த்தும் செய்யலாம்.
சிலவகை, பருப்புகளிலும் மிதமாக வேக வைத்தும் செய்யலாம்.
வெல்லம் சேர்த்தும் காராமணி, பயறு போன்றவைகளைச்
செய்யலாம். தேங்காய் எல்லாவற்றிறகும் ஜோடி சேரும்.
ஏதோ மனதிற்குப் பிடித்ததை ஜோடி சேர்த்து வித்தியாஸமான
சுண்டல்களைத் தயாரிக்கலாம்.
காபூலி செனா சுண்டல்
வெள்ளை முழுக் கடலை—–1கப்
தேங்காய்த் துருவல்—கால்கப்
கறிப்பொடி—–2ஸ்பூன்
ஆம்சூர்—அரை டீஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
பெருங்காயம்—-சிறிது
பச்சை கறிவேப்பிலை—சிறிது
ருசிக்கு உப்பு
செய்முறை—–இதையும் பட்டாணி சுண்டல் மாதிரியே முதல்நாளே
ஊறவைத்து மறுநாள் ப்ரஷர் குக்கரில் நன்றாக வேகவைத்து
எடுத்துத் தண்ணீரை வடிக்கட்டவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து
தேங்காயையும், சற்று வதக்கி,வெந்த கடலையுடன் உப்பு
சேர்த்து கறிப்பொடி, ஆம்சூர் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சாதாரண ப்ரவுன்கலர் கடலையானால் வேக சற்று அதிக
நேரம் வைக்க வேண்டும். சுண்டலின்
கடுகு தாளிப்பில், இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை தாளித்து
உப்பு சேர்த்து பல்லு,பல்லாக நறுக்கிய தேங்காயும் மாங்காயும்
சேர்த்து இறக்கி கொத்தமல்லியைத் தூவலாம்.
தாளித்துக் கொட்டும் போது பலதினுஸான சுவையும், மணமும்
கொண்ட பொருட்களைச் சேர்த்தால் ருசி தனிப்பட்டதாக இருக்கும்.
சாதாரண நாட்களாக இருந்தால் வெங்காயம், பூண்டையும்,
அணிவகுக்கச் சொல்லலாம்.
காய்ந்த பட்டாணி சுண்டல்
இதை வெள்ளைப் பட்டாணியிலும், பச்சை அல்லது பழுப்பு நிற
காய்ந்த பட்டாணியிலும், தயாரிக்கலாம்.
வேண்டியவைகள்—-பட்டாணி—1கப்
பச்சை மிளகாய்–2
தேங்காய்த் துருவல்—கால்கப்
இஞ்சி—-சிறு துண்டு
எண்ணெய்–4 டீஸ்பூன்
கடுகு–அரை டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—கால் டீஸ்பூன்
நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி—–விருப்பத்திற்கு
ருசிக்கு எலுமிச்சை சாறு
உப்பு—-ருசிக்கேற்ப
செய்முறை—–பட்டாணியை முதல் நாளே களைந்து தண்ணீரில்
ஊறவைக்கவும்.
மிளகாய் இஞ்சியை தேங்காயுடன் சேர்த்து ஒன்றிரண்டாக
பொடித்துக் கொள்ளவும்.
ப்ரஷர் குக்கரில் பட்டாணி அமிழ ஜலம் வைத்து நிதான
தீயில் 5, 6 விஸில் வரை வைத்து இறக்கி ஆவி போனபின்
தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
வாணலியில் எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து
தேங்காய்க் கலவையைச் சேர்த்து சிறிது வதக்கி வெந்த
பட்டாணியை உப்பு சேர்த்து வதக்கவும்.
உப்பு காரம் கலந்தவுடன் இறக்கி, ருசிக்கேற்ப, எலுமிச்சை
சாற்றைக் கலந்து, கொதத்தமல்லியைத் தூவி த் தயார்
செய்யவும்.
கொத்தமல்லி கறிவேப்பிலை அவரவர்கள் சாய்ஸ்.
பட்டாணி குழையாமல் வேக வேண்டியது அவசியம்.