Posts filed under ‘கறி வகைகள்’
பீன்ஸ் கறி.
என்ன பிரமாதம் பீன்ஸ் கறி இல்லையா! இது பஞ்சாபியர்கள் செய்யும் வகை. மிக்கச் சுலபம்தான். ரொட்டியுடன் சாப்பிட இந்தவகை வதக்கல். நாமெல்லாம் பொடிப்பொடியாக நறுக்கி தேங்காய் சேர்த்தும், கறிப்பொடி சேர்த்தும் வதக்குவோம் பருப்புசிலியும் செய்வோம். ஒரு சிறு மாறுதல்தான். அதையும்தான் பார்ப்போமே.
என்ன விசேஷமானது என்றால் பெரியஅளவில் காய்கள் நறுக்கப்பட்டிருந்தது. தாளிதம் வேறு பொருள்கள் . அவ்வளவுதான்.
பீன்ஸை இரண்டு அங்குல நீளமாக நறுக்கி தண்ணீரில் அலசி வடியப்போடவும். நான் ஸ்டிக் பேனை சூடாக்கி வேண்டுமான எண்ணெய் விடவும். வெள்ளை எள் ஒரு டீஸ்பூன்,அரை டீல்பூன் சீரகத்தைத் தாளித்து, விழுதாக்கிய பூண்டு இஞ்சியைப் போட்டு வதக்கவும். பின்னர் பீன்ஸைச் சேர்த்து வதக்கவும். மூடித்திறந்து மிதமான தீயில் காயை நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின் கீழிறக்கி ரொட்டி,காரஸாரமான டாலுடன் உபயோகிக்கவும். வேண்டுமானால் மிளகாய் சேர்க்கலாம். எள்ளும்,சீரகமுமாக ரொட்டியுடன் இது ஒரு ருசி. ஒன்றும் பிரமாதமில்லை.
பெருஞ்ஜீரகச் செடியின்அடி பாகம். bulb சமையலில்.
ஸாதாரணமாக இதன் கீரையை சமையலி்ல் உபயோகப் படுத்துவார்கள். பெருஞ்சீரகம் மருந்து வகைகளிலும், மஸாலா வகைகளிலும், மது தயாரிப்பிலும் உபயோகப் படுத்துகிறார்கள் என்பது நாம்படித்தும்,கேட்டும்,பார்த்தும் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்தக் கிழங்கு போன்ற அடிப்பாகத்தின் உபயோகம் எனக்குத் தெரியாது.
கீரையைப் பற்றி பகோடா,அடை,வடைஎன்று நானே கூட எழுதியிருக்கிறேன். இதன் அடி பாகம் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.
பார்க்க வெண்மையான நிறம். பூண்டு மாதிரியான , சற்றுப்பருமனான மடல் கொண்ட வடிவமைப்பு.
இதில் கால்ஷியம், காப்பர், இரும்பு,மெக்னீஷியம்,, பாஸ்பரஸ் போன்ற ஸத்துக்கள் நிறைந்திருக்கிரதாம். பிளட் பிரஷருக்கு மிகவும் நல்லதாம்.
இது எனக்கு அறிமுகமானதே ஜெனிவா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போதுதான். அதற்கு முன் அதிகம் இதைப் பற்றி நான் அக்கரை காட்டினதில்லை. இதனுடைய வடிவம் குழந்தைகள் விளையாடும் சொப்பினூடே காய்கறிகளில் இருந்தது. ஸரி நாம் இபபொழுது விஷயத்திற்கு வருவோம்.
இந்த அடிபாகத்து Bulb சமைக்க உதவுகிறது. ஸூப்,ஸேலட்,முதலானவைகள் செய்கிரார்கள். கோஸ் கறிபோல் சமைக்கவும் உதவுகிறது.
ஆஸ்ப்பத்திரியில் நோயுற்றவர்களுக்கு இதை வேகவைத்து அரைத்த மாதிரி உண்ணக் கொடுக்கிறார்கள். நமக்குதான் உபயோகப்படுத்தத் தெரிந்தால் போதுமே!
பொடியாக நறுக்கிப்போட்டு பகோடா,அடைவடைகளிலும் போட்டுப் பார்த்தது. எல்லாமே மிதமான சோம்பு வாஸனையுடன் கூடியதாக நன்றாக இருந்தது. தேங்காய் போடாத கறியாக ஜெனிவாவில் இருக்கும்போது செய்தது. அதை இங்கே எழுதுகிறேன். நறுக்கிய வெங்காயம் ஒன்று சேர்த்தேன்
கோஸ் நறுக்குவது போல மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரில் அலசி வடிக்கட்டவும். இது இரண்டுஅடிப்பகுதியில் செய்தது. கோஸ் நறுக்குவது போலதான். இதிலும் நடுவில் சற்று அழுத்தமான பாகம் இருக்கிறது.அதை நீக்கி விடவும்.
வாணலியில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காயவைக்கவும். அரைஸ்பூன் கடுகை வெடிக்க விடவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். வகைக்கு அரை டீஸ்பூன் மிளகாய்ப்பொடி,தனியாப்பொடி, மஞ்சள்பொடி சேர்க்கவும். சிறிதளவு நறுக்கி வைத்திருப்பதைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு மீதியைச் சேர்த்து வேண்டிய உப்பு சேர்த்து வதக்கவும்.
கீழிறக்கி வேண்டுமானால் ஒருதுளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
பெருஞ்சீரக வாஸனை லேசாகத் தெரிகிறது.
மூடித் திறந்து செய்தாலே வெந்து விடுகிறது. அவசியமானால் லேசாகத் தண்ணீர் தெளித்தாலும் போதும். நன்றாக வெந்து விடுகிறது.
காரட்,பீட்ரூட்,அவகேடோ, தக்காளி சேர்த்து ஸேலட்டும் பலவகைகளிற் செய்யலாம். இதன் கீரையையே சிறிது தூவி அலங்கரிக்கலாம்.
இது நம்முடைய ஸ்டைலும் இல்லை. பலவித ருசிகளில் உப ஸாமான்கள் சேர்த்துச் செய்யலாம்.
உடனே கடைக்குப் போய் வாங்கும் பொருளாகத் தோன்றவில்லை. ஏதோ நமக்குப் புதியதாகத் தோன்றலாம்.
எழுதுவோமா வேண்டாமா என்ற யோசனையினூடேதான் எழுதுகிறேன்.
ஒரு குறிப்பு எப்போதாவது பிறருக்குச் சொல்லவாவது உதவும். இதன் கீரை சேர்த்துச் செய்யும் பகோடாக்கள் ருசியானது.
ஸூப்பில் கீரையும்சேர்த்துச் செய்யலாம். மற்றஸூப்களிலும் சேர்க்கலாம்.
மொத்தத்தில் ஸோம்ப் அதாவது பெருஞ்ஜீரக வாஸனை பிடித்தவர்களாக இருக்கவேண்டும்.
தட்டை பீன்ஸ் கறி.
நான் முன்பு ஜெநிவாவில் இருக்கும்போது இந்தக்காயை கட்டாயம் பார்த்தால் வாங்காது விடமாட்டேன். ஃப்ரெஞ்சுப்பெயர் HARICOTS COCO. நான் என்னவோ பெரிய அவரைக்காய் என்பேன். ஆங்கிலத்தில் FLATE BEANS என்பார்கள் போல இருக்கிறது.
ஒரு கப்பீன்ஸ் கறிசாப்பிட்டால் 110 கலோரிகள் அதில் இருக்கிறது. நார்ச் சத்து அதிகம் இருக்கும் காய். நம் ஊரில் எத்தனையோவித அவரைக்காய்கள்,கலர்க் கலரில் காய்த்தும் ,வாங்கியும் சாப்பிட்டிருக்கிறோம். அவைகளின் ருசி அலாதி. இக்காயில் ப்ரோடின்,கார்போஹைட்ரேட் முதலானது அதிகம் இருக்கிறது.
இதுவும் அவரைக்காய் வகைதான். காயின் மேல்ப்பாகம் சற்று தடிமனாக இருக்கிறது. ஸரி இதையும் சமைத்து ஒரு பதிவு போடுவோமென்று தோன்றியது.
நான் செய்தது என்னவோ ஸாதாரண கறிதான்.
செய்முறை.
காய் ஒரு கால்கிலோ அளவு.
இஷ்டப்பட்ட அளவு தேங்காய்த் துருவல். இஞ்சி நசுக்கியது சிறிதளவு.
கறிப்பொடி—இரண்டு டீஸ்பூன். வேண்டிய அளவு உப்பு. மஞ்சட்பொடி அரை டீஸ்பூன் எண்ணெய்—ஒரு டேபிள்ஸ்பூன். கடுகு,உளுத்தம் பருப்பு தாளிக்க சிறிது.
செய்முறை. காயை நன்றாகத் தண்ணீர் விட்டு அலம்பி வடிக்கட்டவும்.
பின்னர் காம்பு நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காயின்மேல் நசுக்கிய இஞ்சியைப்போட்டு ,ஒரு அரைஸ்பூன் எண்ணெய் விட்டுப் பிசறி மைக்ரோவேவில் உயர்ந்த மின் அழுத்தத்தில் 10 நிமிஷங்கள் வேக வைத்து எடுக்கவும். அல்லது குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விஸில் வருமளவிற்கு விட்டு வேக வைத்ததை வடிக்கட்டவும்..
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு உளுத்தம் பருப்பைச்சேர்த்து சிவந்ததும் வெந்த காயைக் கொட்டி,உப்பு,மஞ்சள் சேர்த்து வதக்கவும். கடைசியில் கறிப்பொடியைத் தூவி வதக்கி தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி இறக்கவும். பொடிபோட்ட கறியாதலால் நான் தேங்காய் சேர்க்கவில்லை.
கூட்டு,ஸாம்பார்,அவியல்,வெந்தயக்குழம்பு என எதிலும் சேர்க்கலாம். அவரைக்காய் கறிமாதிரிதானே என்கிறீர்களா? ஜெனிவா பதிப்பில்லையா? அதுதான் விசேஷம்.பச்சைக் கொத்தமல்லியையும் தூவிக்கொண்டு இருக்கிறது. என் மும்பை மருமகள் அப்படியே எண்ணெயில் நேராக வதக்கித்தான் செய்வாள். வேக வைக்க மாட்டாள். இது சற்று தோல் பருமனாக இருப்பதால் வேக வைக்கிறேன். இரண்டு விதங்களும் நன்றாகவே இருக்கும்.
வெங்காயம்,பூண்டு வேண்டுமென்பவர்கள் தாளிதத்திலேயே அதைச் சேர்க்கவும்.
வாழைக்காய் பொடித்தூவல்.
வாழைக்காய் கறியின் இது ஒரு செய்முறை.
Continue Reading ஏப்ரல் 8, 2013 at 9:40 முப 20 பின்னூட்டங்கள்
பேபி பொடேடோ வதக்கல்.
குட்டி உருளையின் கறி
Continue Reading மார்ச் 25, 2013 at 12:44 பிப 21 பின்னூட்டங்கள்
கதம்பக் கறி.
எல்லா காய்களையும் சேர்த்த ஒரு கறி
Continue Reading மார்ச் 18, 2013 at 12:28 பிப 14 பின்னூட்டங்கள்
வெஜிடபிள்ப் பன்னீர்க் கறி
பன்னீரை வதக்கிச் செய்யும் கறி. ருசியானது. முயற்சியுங்கள்.
Continue Reading மார்ச் 12, 2013 at 11:37 முப 27 பின்னூட்டங்கள்
பழு பாகல் வதக்கல்
பாகற்காய் வகையைச் சேர்ந்த பழுபாகலை உப்பு காரம் புளிப்பு சேர்த்து வதக்கி ஸிம்பிளாக அறிமுகம் செய்கிறேன். உங்கள் ரஸனைக்கேற்ப செய்யுங்கள். தேங்காய், வெங்காயம் உங்கள் ரஸனைக்கேற்ப உபயோகிக்கவும்.
Continue Reading ஓகஸ்ட் 30, 2012 at 6:35 முப 28 பின்னூட்டங்கள்
ஆலு மேதி வதக்கல்.
கிழங்கை நறுக்கி மைக்ரோவ்வேவில் வைத்து எடுத்து,,வாணலி.யில் ஒன்றன்பின் ஒன்றாக வெங்காய வகைகளை வதக்கி உப்பு காரம் சேர்த்து கிரையையும் வதக்கி கிழங்கைச் சேர்த்து வதக்கினால் ஆலு மேதி வதக்கல் ரெடி.
Continue Reading ஜூலை 31, 2012 at 10:53 முப 12 பின்னூட்டங்கள்
புடலங்காய்க் கறி.
இதுவும் சுலபமான தயாரிப்புதான். நல்ல பிஞ்சு காயாக இருந்தால் ,
கறி, கூட்டு,பச்சடி என பலவிதங்களில் தயார் செய்யலாம்.
பத்தியச் சாப்பாட்டில் கூட புடலங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
துவையல்,வறுவல்,மோர்க்குழம்பு என விதவிதமாகத் தயார்
செய்யலாம்.
முதலில் கறி செய்வோம்.
வேண்டியவைகள்.
புடலங்காய்—அறை கிலோ
பயத்தம் பருப்பு—-கால் கப்.
தேங்காய்த் துருவல்—-கால்கப்
மிளகாய்—-காரம் வேண்டிய அளவிற்கு
இஞ்சி—-வாஸனைக்காக சிறிது
ருசிக்கு—உப்பு
மஞ்சள்ப் பொடி—சிறிது
தாளித்துக் கொட்ட –எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு—சிறிதளவு
செய்முறை
புடலங்காயை அலம்பி நறுக்கி, விதைகளிருந்தால் அகற்றிவிட்டு
பொடியாக நறுக்கவும். பிஞ்சு காயானால் அப்படியே
கூட நறுக்கலாம்.
பயத்தம் பருப்பைக் களைந்து தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
பருப்பையும், நறுக்கின காயையும் ஒன்று சேர்த்து உப்பு,
மஞ்சள்ப்பொடியைக் கலந்து கையினால் அழுத்தமாகப் பிசறி
ஊற வைக்கவும்.
அழுத்திப் பிசறுவதால் பருப்பு காய் விடும் தண்ணீரிலேயே
நன்றாக ஊறும். சற்று ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுத்தம்
பருப்பைத் தாளித்துக் கொட்டி இஞ்சி, பச்சை மிளகாயை
வதக்கி, காய்,பருப்புக் கலவையைக் கொட்டி வதக்கவும்.
நிதான தீயில் மூடிவைத்து அடிக்கடி கிளறிக் கொடுத்து
காயை வதக்கவும்.
ஸிம்மில் வைத்தால் கூட ஸரியாக இருக்கும்.
காய்பருப்பு வதங்கியதும் தேங்காய்த் துருவலைச்
சேர்த்துக் கிளறி வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
பத்தியச் சாப்பாட்டில் தேங்காய் போடுவதில்லை.
ஒரு சிட்டிகை சர்க்கரையும் சேர்க்கலாம்.
மிளகாய் ஸவுகரியம்போல காய்ந்ததோ, பச்சையோ
சேர்க்கலாம். பருப்பு,தேங்காயும் கூட்டிக் குரைக்கலாம்.