Posts filed under ‘பஜ்ஜி வகைகள்’
இனிப்பு கார பஜ்ஜி.
புளிப்பு கார பஜ்ஜி என்று கூடச் சொல்லலாம். செய்து ருசித்தால்தான்
அபிப்பிராயம் சொல்ல முடியும் இல்லையா.
வேண்டியவைகள்—–மைதா, கடலைமாவு, அரிசி மாவு எல்லாமாகக்
கலந்து 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை—-2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் —-1 பொடித்துக் கொள்ளவும்.
பெரு்ஞ் சீரகம்—அரை டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—முக்கால் டீஸ்பூன்
ருசிக்குச் சற்று குறைவாகவே உப்பு
மாவில் கலக்க—2 டீஸ்பூன் நெய்
பொரிப்பதற்கு எண்ணெய்
தோய்த்துப் போட உபயோகிக்கத் தக்கவைகள்
பழுத்தும், பழுக்காததுமான தக்காளிக் காய், ஆப்பிள், பீட்ரூட், கேரட்
பறங்கிக் காய், வெங்காயம், வெள்ளிக் கிழங்கு.
செய்முறை——மாவுடன் உப்பு, காரம், இனிப்பு, நெய்,ஏலம், சீரகம்,
எல்லாவற்றையும் கலந்து திட்டமாக ஜலம் சேர்த்து இட்டிலி
மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பிடித்தமானவற்றை மெல்லிய வில்லைகளாக நறுக்கி மாவில்
தோய்த்து , வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பதமான
சூட்டில் பொரித்து எடுக்கவும். வயதானவர்கள், சின்னவர்கள்
விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு ருசி மாறுதலுக்கு உகந்தது.
இனிப்பு கூட்டிக் குறைக்கலாம்.ருசித்துப் பாருங்கள்.
கார கதம்பம்.
வாங்கி மிகுந்த காய் கறிகளிலோ அல்லது வாங்கி வந்த
அன்றோ சிறிது விதவிதமான காய் கறிகளில் இதைத்
தயாரிக்கலாம்.காரட்,கத்திரி, வாழைக்காய்,காப்ஸிகம்,
பீட்ரூட்,உருளைக் கிழங்கு என கலந்து மெல்லிய
வட்டங்களாக இரண்டு கப் அளவிற்கு நறுக்கி வைத்துக்
கொள்ளவும்.
மேலும் வேண்டியவைகள்.——கடலைமாவுஅரைகப்.
அரிசிமாவு——–4 டீஸ்பூன்
நெய்——–3 டீஸ்பூன்
ஒரு துளி ஸோடாஉப்பு
ருசிக்கு–உப்பு
பெருங்காயம்—சிறிது
பொரிக்க எண்ணெய்
செய்முறை—–நறுக்கிய காய்கறித் துண்டுகளில்
இரண்டு ஸ்பூன் எண்ணெய், நெய்,உப்பு,ஸோடா
பெருங்காயம்,காரம் சேர்த்து நன்றாகப் பிசிறவும்.
அதன் பின் காய்க் கலவையில் மாவைத் தூவி
பகோடா பக்குவத்தில் சிறிது ஜலம் தெளித்து
மாவைக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,பிசிறி
வைத்திருக்கும் கலவையை கையால் பிரித்துப்
போட்டு, சிவக்க, கரகரப்பாகப் பொரித்து எடுக்கவும்.
பலவித ருசிகளில் நன்றாக இருக்கும்.
மாவு கலக்கும் போது அதிக தண்ணீர் விடாமல்
சரிவரக் கலக்கவும்.
பஜ்ஜி வகைகள்-bhajji
வேண்டியவைகள்
கடலைமாவு—ஒருகப்.
அரிசிமாவு—ஒரு டேபிள் ஸ்பூன்.
மிளகாய்ப் பொடி–அரை டீஸ்பூன்.
வாஸனைக்கு-துளி பெருங்காயம்.
தேவையான உப்பு.
காய்ச்சிய எண்ணெய்-ஒரு டேபிள் ஸ்பூன். இவை யாவும் மேல் மாவு தயாரிப்பதற்கு மட்டும்.
பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
காய்களில் அடுத்து வரும் எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
வாழைக்காய், பீர்க்கங்காய், பெரிய வெங்காயம், சௌசௌ, உருளைக் கிழங்கு இவைகள் தோல் நீக்க வேண்டியவைகள்.
கத்திரிக்காய்க்கு தோல் நீக்க வேண்டாம்.
காலிப்ளவரானால் சிறிய பூக்களாகப் பிரித்து சுடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டெடுக்கவும்.
எதை வேண்டுமானாலும் மெல்லிய வட்டமாக நறுக்கி தண்ணீரில் அலம்பி ஒரு துணியிலோ,டிஷ்யூபேப்பரிலோ போட்டு ஈரம் குறைக்கவும்.
பச்சை மிளகாய்முழுதாகநறுக்கியும், காப்ஸிகம் நறுக்கியும் உபயோகிக்கலாம்.
செய் முறை—–மேல் மாவிற்காக கொடுத்திருக்கும் சாமான்களை
தண்ணீர் சேர்த்து இட்டிலிமாவு பதத்திற்கு கட்டி இல்லாமல்
கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து நறுக்கிய வில்லைகளை ஒவ்வொன்றாகக் கரைத்த மாவில் தோய்த்துஎடுத்துப் போட்டு வேக வைக்கவும். சற்று சிவந்ததும்,திருப்பிப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.
கரகரப்பிற்காக ஸோடாமாவு சிறிது சேர்ப்பவர்களும் உண்டு. எண்ணெய் அதிகம் இழுக்கும்.
மாவில் விதவிதமான மாறுதலான ருசிக்காகவும், வாசனைக்காகவும், சில சாமான்களைச் சேர்க்கலாம்.
சிறிய வெங்காயம் ஒன்றை நசுக்கிப் போடலாம்.
சீரகம் சோம்பு சிறிது பொடித்துச் சேர்க்கலாம்.
நசுக்கிய பூண்டு கரம் மஸாலா சிறிது சேர்க்கலாம்.
ஏதாவது ஒன்றைத் தெரிந்தெடுத்து சேர்க்கலாம்.
அதிக அளவு பஜ்ஜி செய்யும் பொழுது காய்களை நீளவாக்கில் பெரியதாகவும், குறைவான அளவில் செய்யும் பொழுது வில்லைகளாகவும், பொதுவாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாயில் செய்யும் பொழுது காரம் குறைக்கவும்.
ஏற்ற சட்னிகளுடன் சாப்பிட வேண்டியதுதான் பாக்கி.