வாழ்த்துகள்
வலையுலக எல்லா அன்புள்ளங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். அன்புடன் சொல்லுகிறேன்.
பீன்ஸ் கறி.

என்ன பிரமாதம் பீன்ஸ் கறி இல்லையா! இது பஞ்சாபியர்கள் செய்யும் வகை. மிக்கச் சுலபம்தான். ரொட்டியுடன் சாப்பிட இந்தவகை வதக்கல். நாமெல்லாம் பொடிப்பொடியாக நறுக்கி தேங்காய் சேர்த்தும், கறிப்பொடி சேர்த்தும் வதக்குவோம் பருப்புசிலியும் செய்வோம். ஒரு சிறு மாறுதல்தான். அதையும்தான் பார்ப்போமே.
என்ன விசேஷமானது என்றால் பெரியஅளவில் காய்கள் நறுக்கப்பட்டிருந்தது. தாளிதம் வேறு பொருள்கள் . அவ்வளவுதான்.
பீன்ஸை இரண்டு அங்குல நீளமாக நறுக்கி தண்ணீரில் அலசி வடியப்போடவும். நான் ஸ்டிக் பேனை சூடாக்கி வேண்டுமான எண்ணெய் விடவும். வெள்ளை எள் ஒரு டீஸ்பூன்,அரை டீல்பூன் சீரகத்தைத் தாளித்து, விழுதாக்கிய பூண்டு இஞ்சியைப் போட்டு வதக்கவும். பின்னர் பீன்ஸைச் சேர்த்து வதக்கவும். மூடித்திறந்து மிதமான தீயில் காயை நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின் கீழிறக்கி ரொட்டி,காரஸாரமான டாலுடன் உபயோகிக்கவும். வேண்டுமானால் மிளகாய் சேர்க்கலாம். எள்ளும்,சீரகமுமாக ரொட்டியுடன் இது ஒரு ருசி. ஒன்றும் பிரமாதமில்லை.

பெருஞ்ஜீரகச் செடியின்அடி பாகம். bulb சமையலில்.

ஸாதாரணமாக இதன் கீரையை சமையலி்ல் உபயோகப் படுத்துவார்கள். பெருஞ்சீரகம் மருந்து வகைகளிலும், மஸாலா வகைகளிலும், மது தயாரிப்பிலும் உபயோகப் படுத்துகிறார்கள் என்பது நாம்படித்தும்,கேட்டும்,பார்த்தும் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்தக் கிழங்கு போன்ற அடிப்பாகத்தின் உபயோகம் எனக்குத் தெரியாது.
கீரையைப் பற்றி பகோடா,அடை,வடைஎன்று நானே கூட எழுதியிருக்கிறேன். இதன் அடி பாகம் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.

பார்க்க வெண்மையான நிறம். பூண்டு மாதிரியான , சற்றுப்பருமனான மடல் கொண்ட வடிவமைப்பு.
இதில் கால்ஷியம், காப்பர், இரும்பு,மெக்னீஷியம்,, பாஸ்பரஸ் போன்ற ஸத்துக்கள் நிறைந்திருக்கிரதாம். பிளட் பிரஷருக்கு மிகவும் நல்லதாம்.
இது எனக்கு அறிமுகமானதே ஜெனிவா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போதுதான். அதற்கு முன் அதிகம் இதைப் பற்றி நான் அக்கரை காட்டினதில்லை. இதனுடைய வடிவம் குழந்தைகள் விளையாடும் சொப்பினூடே காய்கறிகளில் இருந்தது. ஸரி நாம் இபபொழுது விஷயத்திற்கு வருவோம்.
இந்த அடிபாகத்து Bulb சமைக்க உதவுகிறது. ஸூப்,ஸேலட்,முதலானவைகள் செய்கிரார்கள். கோஸ் கறிபோல் சமைக்கவும் உதவுகிறது.
ஆஸ்ப்பத்திரியில் நோயுற்றவர்களுக்கு இதை வேகவைத்து அரைத்த மாதிரி உண்ணக் கொடுக்கிறார்கள். நமக்குதான் உபயோகப்படுத்தத் தெரிந்தால் போதுமே!
பொடியாக நறுக்கிப்போட்டு பகோடா,அடைவடைகளிலும் போட்டுப் பார்த்தது. எல்லாமே மிதமான சோம்பு வாஸனையுடன் கூடியதாக நன்றாக இருந்தது. தேங்காய் போடாத கறியாக ஜெனிவாவில் இருக்கும்போது செய்தது. அதை இங்கே எழுதுகிறேன். நறுக்கிய வெங்காயம் ஒன்று சேர்த்தேன்
கோஸ் நறுக்குவது போல மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

தண்ணீரில் அலசி வடிக்கட்டவும். இது இரண்டுஅடிப்பகுதியில் செய்தது. கோஸ் நறுக்குவது போலதான். இதிலும் நடுவில் சற்று அழுத்தமான பாகம் இருக்கிறது.அதை நீக்கி விடவும்.
வாணலியில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காயவைக்கவும். அரைஸ்பூன் கடுகை வெடிக்க விடவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். வகைக்கு அரை டீஸ்பூன் மிளகாய்ப்பொடி,தனியாப்பொடி, மஞ்சள்பொடி சேர்க்கவும். சிறிதளவு நறுக்கி வைத்திருப்பதைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு மீதியைச் சேர்த்து வேண்டிய உப்பு சேர்த்து வதக்கவும்.
கீழிறக்கி வேண்டுமானால் ஒருதுளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

பெருஞ்சீரக வாஸனை லேசாகத் தெரிகிறது.
மூடித் திறந்து செய்தாலே வெந்து விடுகிறது. அவசியமானால் லேசாகத் தண்ணீர் தெளித்தாலும் போதும். நன்றாக வெந்து விடுகிறது.
காரட்,பீட்ரூட்,அவகேடோ, தக்காளி சேர்த்து ஸேலட்டும் பலவகைகளிற் செய்யலாம். இதன் கீரையையே சிறிது தூவி அலங்கரிக்கலாம்.
இது நம்முடைய ஸ்டைலும் இல்லை. பலவித ருசிகளில் உப ஸாமான்கள் சேர்த்துச் செய்யலாம்.
உடனே கடைக்குப் போய் வாங்கும் பொருளாகத் தோன்றவில்லை. ஏதோ நமக்குப் புதியதாகத் தோன்றலாம்.
எழுதுவோமா வேண்டாமா என்ற யோசனையினூடேதான் எழுதுகிறேன்.
ஒரு குறிப்பு எப்போதாவது பிறருக்குச் சொல்லவாவது உதவும். இதன் கீரை சேர்த்துச் செய்யும் பகோடாக்கள் ருசியானது.
ஸூப்பில் கீரையும்சேர்த்துச் செய்யலாம். மற்றஸூப்களிலும் சேர்க்கலாம்.
மொத்தத்தில் ஸோம்ப் அதாவது பெருஞ்ஜீரக வாஸனை பிடித்தவர்களாக இருக்கவேண்டும்.

தீபாவளி வாழ்த்துகள்

அன்புள்ளம் கொண்ட யாவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகளையும்,மனமார்ந்த அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி மஹாலிங்கம்.
17—10—-2017 டில்லி
வாழ்த்துகள்
யாவருக்கும் என் இனிய நவராத்திரி வாழ்த்துகள். அன்புடன்
கணபதியே வருகவருக.
வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
மும்பை கணபதிகளின் அணி வகுப்பு. அவ்விடமுள்ள என் மகன் அமெரிக்கா போவதால் முன்கூட்டியே படங்கள் கேட்டிருந்தேன். குறைந்தது படமாவது போடலாமே.
வேழ முகத்து வினாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
வெற்றி முகத்து வினாயகனைத் தொழ புத்தி மிகுத்து வரும்.
அல்லல் போம் வல்வினைகள் போம், அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல குணமதிக
மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்
கணபதிையைக் கொதொழுதக்கால்.
கணபதிியின் அடி பணிந்து யாவருக்கும் நன்மைகள் உண்டாக வேண்டி வணங்குவோம்.
நல் வாழ்த்துகள் யாவருக்கும்.





விளக்கு பூஜை நினைவுகள்.
டில்லியில் எப்போதோ நடந்த விளக்கு பூஜையின் படங்கள். மலரும் நினைவுகள் மயூர் விஹார்—மேதா அபார்ட்மென்ட். நாங்கள் ஒரு பத்து தமிழ்க்குடும்பம் இருக்கும்.
வேலைக்குப் போகிறவர்களும் வருவதற்காக சனிக்கிழமைகளில் லலிதா ஸஹஸ்ரநாமம், குத்து விளக்குபூஜை ஆடி,தை வெள்ளிக்கிழமைகள்,நவராத்ரி பத்து தினங்கள் என ஒன்று தவராது செய்தவைகள். ப்ளாகில் போட்டுப் பார்ப்போமா… படங்கள் அவ்வளவு பிரகாசமாக இல்லை. மலரும் நினைவுகள்தானே.!!!!!!!!

நடுவில் ஒரு விளக்கு. சுற்றிலும் உட்கார்ந்து பூஜை. நிவேதனம் லலிதா அதான் கனராபேங்க் மாமி செய்கிரார். தில்லி ரோஜா இதழ்களாகவேபூஜை.
நினைத்துப் பார்க்கவே ஆனந்தம். அடுத்து கிடைத்த படங்களெல்லாம், டில்லி நினைவுகளாகக் கிடைத்த சில பழைய படங்கள். ஆடி வெள்ளிக்கிழமை. ஞாபகம் வந்தது. அவ்வளவே.









டால்வகையில் வெள்ளைக் காராமணி.

நாம் அநேகமாக சுண்டல்,கூட்டுமுதலானவைகள்தான் இதில் அடிக்கடி செய்வோம். அதிலும் இனிப்புப் போட்ட சுண்டல்தான் வெகு இடங்களில். என் நாட்டுப்பெண் இந்த டாலை பூரி,ரொட்டிகளுக்காகவும்,சாதத்துடனும் ஒரு மாற்றத்திற்காகச் செய்வாள் . அப்படிச் செய்தது தான் இதுவும். பூரியும் இருக்கிறது. எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம்.
தட்டப்பயறு,காராமணி, பெரும்பயறு என்று பலவிதப் பெயர்களில் பல வகைகள் கிடைக்கிறது. இது ப்ளாக் ஐ பீன்ஸ் என்று சொல்லப்படும் வெள்ளைக் காராமணி. ஹிந்திியில் Bபோடி
காராமணி,கத்தரிக்காய்,பலாக்கொட்டை இவைகள் சேர்த்துச் செய்யும் கூட்டு ருசியானது. இதில் பலாக் கொட்டை இல்லை. இதுவும் தானாக வருகிறது.

நாம் இப்போது டால் செய்வதைப் பார்க்கலாம்.
வேண்டியவைகள். டால் செய்வதற்கு–
வெள்ளைக்காராமணி—1 1/2 கப்,
வெங்காயம்–திட்டமானசைஸ்–2 பூண்டு இதழ்–4. இஞ்சி அரை அங்குலத் துண்டு.
பழுத்த தக்காளி–2
பொடிக்க —மிளகு–1டீஸ்பூன், லவங்கம்–4, பட்டை சிறிதளவு, ஏலக்காய்–1
பொடிகள்–மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன், தனியாப்பொடி—-2 டீஸ்பூன், மஞ்சள்பொடி–1டீஸ்பூன்
தாளிக்க —எண்ணெய்,நெய் வகைக்கு ஒரு டேபிள்ஸ்பூன். சீரகம்—1டீஸ்பூன்
கொத்தமல்லி, எலுமிச்சை ஒரு பாதி. ருசிக்கு—உப்பு.
செய்முறை.
வெள்ளைக்காராமணியை தண்ணீரில் நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி இவைகளைச் சுத்தம் செய்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது அரைத்துக் கொள்ளவும்.
பொடிக்கக் கொடுத்தவைகளை முடிந்தவரை பொடிக்கவும்.
காராமணியின் தண்ணீரை நீக்கிவிட்டு மூன்று கப் தண்ணீரைச் சேர்த்து மஞ்சள் பொடியுடன் குக்கரில் நேரிடையாக மிதமான தீயினில் இரண்டு விஸில்வரும்வரையில் வைத்து இறக்கி விடவும்.
நன்றாக வெந்திருக்கும். ஒரு ஸ்பூன் வெந்த காராமணிையை எடுத்து மசித்துச்
சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் நெய்யைவைத்துக் காய்ந்ததும் சீரகத்தைப் பொரியவைத்து, அரைத்த வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும்போதுபொடிகளைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

டாலிற்கு வேண்டிய உப்பையும் சேர்க்கவும். தண்ணீர் வேண்டுமானால் ஓரிரண்டு கரண்டி இப்போதே சேர்த்துக் கொதிக்க விடவும் . வேகவைத்த காராமணிையைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். சற்று நெகிழ வைத்தால்தான் ஸரியாக இருக்கும்.
இந்தப்படம் எடுக்க மறந்துவிட்டது.
உப்புக்,காரம் ஸரிபார்த்து பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். எலுமிச்சை சாறு வேண்டியளவு சேர்க்கவும். போலில் வைக்கவும்.

டாலும், பூரியுமாகச் சாப்பிடுங்கள். வெள்ளைக்காராமணிடால் ரொட்டி,சாதம் யாவற்றினுடனும் ஸரிவருகிறது.

நன்றி வழக்கம்போல மருமகளுக்கு.
பாசிப்பருப்பு ரொட்டி

முன்பெல்லாம் நெடுந்தூரம் பிரயாணம் செய்வதானால் உணவிற்காக ஏதாவது தயார் செய்தே எடுத்துப் போவார்கள். இன்னும் முன்காலத்தில் அரிசி,பருப்புமுதல் கட்டி எடுத்துக் கொண்டே போவார்கள். ஸமீபத்தில் காட்மாண்டுவிலிருந்து ஒரு நடுத்தர வயது தம்பதியினர் ஐரோப்பாவில் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க வந்தனர்.
வந்த இடத்தில் சைவ உணவு சில ஸமங்களில் கிடைக்காது போகலாம். எதற்கும் கைவசம் ஏதாவது வைத்திருக்க வேண்டுமென்று, இனிப்புகளும், சில வகை ரொட்டிகளும் எடுத்து வந்திருந்தனர். ஜெயின் தம்பதிகள்.
எதுவும் கிடைக்காவிட்டால்,அலுத்து சலித்து திரும்பவும் ஹோட்டல் தேட வேண்டுமே என்று நினைக்காமல், ஏதோ ஒன்றுடன் இரண்டு ரொட்டிகளைச் சாப்பிட்டு விட்டு ,இனிப்பும் எடுத்துக் கொண்டால் அந்தநேர பசி அடங்கி விடும் என்றனர். ஸரி நாமும் கேட்டுக் கொண்டால் பிளாகில் ஒரு குறிப்புஎழுதலாமே என்று யோசித்து விவரம் கேட்டுக் கொண்டேன்.
நாம் பிரயாணங்களுக்காகத் தயாரிக்கா விட்டாலும் சுடச்சுட தயாரித்துச் சாப்பிடலாமே!
மாதிரிக்காக சிறிய அளவில் செய்தது. வீட்டிலுள்ள சாமான்களைக் கொண்டே செய்ய முடியும். வேண்டியவைகள்.
பயத்தம் பருப்பு—இரண்டு குழிக்கரண்டி.
ரொட்டிமாவு தேவையான அளவு, ரொட்டிக்கும்,பிரட்டியிட மேல் மாவிற்குமாக
எண்ணெய்–மாவில்க் கலந்து பிசைய–2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் வேண்டிய அளவு உபயோகிக்கவும்.
தாளித்துக் கொட்ட–கடுகு அரைஸ்பூன்+சீரகம் அரைஸ்பூன்+நெய் ஒரு டீஸ்பூன்
.வேண்டிய பொடிகள்—மிளகாய்ப்பொடி–ஒரு டீஸ்பூன்,
பெருங்காயப்பொடி–கால்டீஸ்பூன்,மஞ்சள்பொடி–கால்டீஸ்பூன்
கஸூரிமெத்தி–அரைடீஸ்பூன். அதாவது பொடித்த வெந்தய இலைகள்
ருசிக்குஉப்பு, கால்டீஸ்பூன் சர்கரை.
செய்முறை
பருப்பைக் களைந்து ஒருமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
தண்ணீரை ஒட்ட இறுத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் ,ஒருஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கி,கடுகு,சீரகம் தாளித்து, அதனுடன் இரண்டு குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். மிளகாய்,மஞ்சள்,பெருங்காயப் பொடிகளைச் சேர்க்கவும். பருப்பைும் சேர்த்து சற்று வேகவைக்கவும். அதிகம் வேக வேண்டாம்.

நெத்துப்பதமாக பருப்பு அழுத்தமாக இருக்க வேண்டும். கீழிறக்கி ஆறவைக்கவும்.

பருப்பும்,அது வெந்த தண்ணீரும் இருக்கும். நன்றாக ஆறியவுடன் அந்த தண்ணீருக்கு ஏற்றபடி ரொட்டிமாவைச் சேர்த்துப் பிசையவும். வேண்டியஉப்பு,சர்க்கரை,இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய், கஸூரிமெத்தி
இவைகளைையும் சேர்த்துச் சப்பாத்திமாவு பதத்திற்குப் பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.இது ஞாபகத்தில் இருக்கட்டும்.

இரண்டு கரண்டி ஊறவைத்தப் பருப்புடன் இரண்டு கரண்டி தண்ணீர் சேர்த்து சற்று வேக வைத்து ஆறிய கலவையில் மாவைப் போட்டு பிசைந்திருக்கிறோம். தண்ணீர் வேறெதுவும் சேர்க்கவில்லை. இது முக்கியம்.

பத்து நிமிஷங்கள் மாவை ஊறவைக்கவும்.,
இனி வழக்கமாக ரொட்டி தாரிப்பது போலவே மாவைப்பிரித்து, குழவியினால் மாவில்த் தோய்த்து ரொட்டிகளை இடவும். பருப்புடன் சேர்ந்து ரொட்டி இட அழகாகவே வருகிறது.

திட்டமான சூட்டில் ரொட்டிகளை எண்ணெய் விட்டு தோசைக்கல்லில் போட்டுச்செய்து எடுக்கவும்.

ஆறவைத்து, நான்கு நான்காக அடுக்கிப் பார்ஸல் செய்து வைத்தால் அதிக நாட்கள் உபயோகிக்கலாமாம்.
நீங்கள் உங்களுக்குப் பிடித்த எதனுடனும் சாப்பிடலாம். தயிர் மிகவும் ஏற்றது.
கறி,கூட்டு,சட்னி,ஊறுகாய்,டால் எது வேண்டுமோ அதையும் செய்யவும்.
டால்,காலிபிளவர்வதக்கல், கீரை,தயிர் இவைகளுடன் உங்களுக்குக் கொடுக்கிறேன். சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள்.
எனக்கு உதவி என் மருமகள்.
ஜெனிவாவில் பலநாட்டு இசைத்திருவிழா.

ஜப்பானியக் குழு பாடுகின்றது.
ஜெனிவா நகரமே இசைப்பெருக்கில் திளைத்திருக்கும் கட்டணம் எதுவும் இல்லை. அவரவர்கள் நாட்டின் இசையை யாவருக்கும் வழங்குவதே இதனுடைய சிறப்பு.

ஒரே நாளில் நூற்றுக்கணக்கான இடங்களில், பலவிதமான தேசத்து இசைகளில்
இசையில் திளைத்திருக்கும் திருவிழா இது.

எங்கெங்கு நோக்கினும் இசை வெள்ளம். எல்லா பாஷைகளிலும்,எல்லோர் கலாசாரங்களிலும் எவ்வெவ்வளவு உண்டோ, அவ்வளவைும் அவரவர்கள் குழுக்களாக இசைப்பதற்கு வசதி.

ஒருவித சிலவுமில்லாமல் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தருகிறார்கள். ஒரு குழுவின்பின், மற்ற குழுவினர் என்று அவரவர்களாக நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள்.
சாலை ஓரமாக அமைந்திருக்கும் சிறிய பார்க்குகளிலும், பெரியபெரிய பார்க்குகளில் பல இடங்களிலும் மேடைகள்.

இடைவிடாது நாள் பூரவும் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள், பார்வைாளர்கள் வந்து போ்ய்க் கொண்டே இருக்கின்றனர்.


அவர்களுக்காக பெரிய நிழற்குடைகளும், இருக்கை முதலானவைகளும், சிலவு செய்து சாப்பிடுபவர்களுக்கு சிற்றுண்டி வசதியும், குப்பைகள் போட வசதி முதற்கொண்டு எல்லா வசதிகளும் உண்டு.

இத்திருவிழா ஒவ்வொரு வருஷமும் ஜூன் மூன்றாவது வார இறுதி நாட்களில் மூன்று , நான்கு நாட்கள் கொண்டாடப் படுகிறது. வெள்ளி சனி,ஞாயிறு என்ற வகையில்.
இதைப்பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டதினால் கூட வந்து பார் என்று கூட்டிப்போனார்கள்.

இவ்விடம் எவ்வளவு முடியாதவர்களானாலும் வெளிியில் போகாது இருக்க மாட்டார்கள். இரண்டொரு இடங்களைப் பார்த்து விட்டுத் திரும்பி விடலாம் என்று சொல்லி என்னை வீல்சேர் வசதியுடன் அழைத்துப் போனார்கள். அப்போது எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பாருங்கள் வழியிலேயே பியானோ இசைக்கும் பெட்டிகள்.

உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் இசைக்கலாம். கூட்டம் தன்னால் கூடிக் கொள்ளும்.
எல்லா தேசத்தினரும் அவரவர்கள் திறமையை யாவருக்கும் பிரகடனப் படுத்தும் ஒரு அரிய வாய்ப்பு.
பரதநாட்டியமும் ஒரு இடத்தில் அழகாக நடந்தது. ஆக வெளி உலகம்,பல தேச இசைகள் என ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை உங்களிடமும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஒரு ஸந்தோஷம். உண்மைதானே!!!!
