தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
wordpress.com இன் பதிவாளர்கள் , பார்வையாளர்கள் யாவருடைய
குடும்பத்தினர்கள் அனைவருக்கும் என்னுடைய , எங்கள் குடும்பத்தினருடைய
அமோகமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
சொல்லுகிறேன் காமாட்சி
பீட்ரூட் பச்சடி [கட்டா மீட்டா]
வேண்டியவைகள்—-திட்டமான அளவில் 2 பீட்ரூட்
வெல்லப் பொடி—-கால்கப்
புளி—சின்ன நெல்லிக்காயளவு
மிளகாய்ப் பொடி—அரை டீஸ்பூன்
கரம் மசாலா அல்லது ஏலக்காய்ப் பொடி–சிறிது
ஒரு டீஸ்பூன் —-எண்ணெயும், சிறிது கடுகும்.
கால் டீஸ்பூன் —உப்பு. மிளகாய் ஒன்று
செய்முறை—–பீட்ரூட்டை நன்றாக அலம்பி தோல் சீவிப் பொடியாக
நறுக்கி, திட்டமாக ஜலம் சேர்த்து வாணலியிலோ, கச்சாத பாத்திரத்திலோ
நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை அரைகப் ஜலத்தில் ஊற வைத்துக் கரைத்து வெந்த காயில்
சேர்க்கவும்.
உப்பு, வெல்லம், காரம் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
கடுகு, மிளகாய் ஒன்றுஎண்ணெயில் தாளிக்கவும்.குறுகி வரும்
போது இறக்கி ஏலக்காயோ, கரம் மஸாலாவோ சேர்க்கவும்.
திதிப்பு அதிகம் வேண்டுமானால் வெல்லம் அதிகரிக்கவும்.
ஜலம் ஜாஸ்தியாகிவிட்டால் துளி மாவு கரைத்து விடலாம்.
முந்திரி, திராக்ஷை சேர்த்தால் ருசி கூடும்.
கோவைக் காய்க் கறி
வேண்டியவைகள்
கோவைக்காய்—-கால்கிலோ
வெங்காயம்—2
ருசிக்கு உப்பு
எண்ணெய்—2 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி—கால் டீஸ்பூன
மிளகாய்ப் பொடி–அரை டீஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—ஒரு டீஸ்பூன்
செய்முறை—–காய்களை நன்றாக அலம்பிப் பொடிப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும் வெங்காயத்தையும் தனியாகப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
செய்முறை—— காயுடன், உப்பு மஞ்சள்பொடி, 2 டீஸ்பூன் எண்ணெய்க்
கலந்து பிசறி மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து ஐந்து ஐந்து
நிமிஷங்களாக மைக்ரோவேவில் வேகவைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும, கடுகு, பருப்பு
தாளித்து வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வெந்த காயையும் சேர்த்துக் காரம் கலந்து நிதான தீயில்
சுருள வதக்கவும். மூடியால் மூடித் திறந்து கிளறிவிட்டு
நன்றாக வதக்கவும்.
நேராக வாணலியிலேயே வதக்குவதென்றால் நறுக்குமுன்னர்
காயை சுடு தண்ணீரில் போட்டெடுத்து வடிக்கட்டி நறுக்கவும்
ஆலுபரோட்டா
வேண்டியவைகள்.
கோதுமை மாவு—–ஒன்றரை கப்
உருளைக் கிழங்கு—-திட்டமான சைஸ் 4
பச்சை மிளகாய்—2
கொத்தமல்லி இலை—நறுக்கியது கால்கப்
சீரகப் பொடி—அரை டீஸ்பூன்
தனியாப் பொடி–அரை டீஸ்பூன்
மாங்காய்ப் பொடி– அரை டீஸ்பூன்
கரம் மஸாலாப் பொடி—அரை டீஸ்பூன்
உப்பு—-ருசிக்குத் தக்கபடி
எண்ணெய்—மாவிற்கு 2 டீஸ்பூன்
பரோட்டா செய்யத் தேவையான எண்ணெய் அல்லது நெய்
செய்முறை—-உருளைக் கிழங்கை நன்றாக அலம்பி
2 துண்டங்களாகச் செய்து , ஒரு காட்டன் துணியை நனைத்துப்
பிழிந்து கிழங்குகளை அதனுள் வைத்துச் சுருட்டி சிறிது
ஜலம் தெளித்து மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து
7, 8, நிமிஷங்கள் ஹை பவரில் மைக்ரோ வேவ் செய்து
எடுக்கவும்.
கிழங்கு வெந்திருக்கும். தோலை உறித்து விட்டு, கிழங்கை
சூடு இருக்கும் போதே நன்றாக கட்டி இல்லாமல் மசிக்கவும்.
கோதுமை மாவுடன் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து ரொட்டி இடும் பதத்தில்பிசைந்து ஊற வைக்கவும்.
மிளகாயைக் குறுக்காக நறுக்கி ,விதைகளை நீக்கி விட்டு மிகவும்
மெல்லியதாக, பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிசைந்த
கிழங்குடன்உப்பு, மற்றும் பொடி வகைகள்,கொத்தமல்லி, மிளகாய் சேர்த்துப்பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.
ரொட்டி மாவையும் சற்றுப் பெறிய சைஸில் பிரித்து உருட்டிக்
கொள்ளவும்.
மாவை உள்ளங்கை அளவிற்கு ரொட்டியாக இட்டு மேலாக,
லேசாக சிறிது எண்ணெயைத் தடவி, உருளைக் கிழங்கு கலவையை வடைமாதிரி தட்டையாகச் செய்து அதன்
மேல் வைத்து போளி மூடுவது போல மாவின் விளிம்புகளால்
பூரணத்தை நன்றாக மூடவும்.
மேல் மாவைத் தோய்த்து மெல்லிய ரொட்டிகளாகத் தயாரிக்கவும்.
ஒவ்வொன்றாகத் தயாரிக்கும் போதே, திட்டமாகக் காய்ந்த
தோசைக் கல்லில், ரொட்டியைப் போட்டு, மேலாக எண்ணெயோ
நெய்யோ தடவி, திருப்பிப் போட்டு, சற்று தோசைத்திருப்பியினால்
லேசாக அழுத்தம் கொடுத்து எண்ணெய் தடவிரொட்டியைச்செய்து
எடுக்கவும்.
உருளைக் கிழங்கை மைக்ரோவேவில் வேக வைத்தால் தண்ணீர்ப்
பாகம் குறைந்து பரோட்டா செய்ய, ஒட்டாமல் சுலபமாக செய்ய
ஒழுங்காக வருகிரது.
வேகவைத்து எடுத்தால் கிழங்கை முக்கால்வேக்காட்டில் எடுத்து
தோல் உறித்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி மசிக்கலாம்.
ஈரப்பதம் குறைவாக இருக்கும்.
மெல்லியதாக இடுவதற்குதான் இத்தனைப் பதமும்.
ஆலு பரோட்டாவா, உருளைக் கிழங்கு ரொட்டியா?
எல்லாம் ஒன்றேதான்.
பருப்பரிசி உசிலி.
வேண்டியவைகள்.
அரிசி—-1 கப்
பயத்தம் பருப்பு—-ஒரு கப்பின் மூன்றிலொரு பாகம்
தேங்காய்த் துருவல்—-அரை கப்
எண்ணெயும், நெய்யுமாக—-2 டேபிள் ஸ்பூன்
கடுகு. உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு, தலா 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—-கால் டீஸ்பூன்.
மிளகாய்—2
ருசிக்கு—உப்பு
இஞ்சித் துண்டுகள்—1 டீஸ்பூன்
கறிவேப்பிலை—-சிறிது.
செய்முறை——-அரிசி, பருப்பைத் தனித் தனியாக சிவக்க வறுக்கவும் தண்ணீர்விட்டுக் களைந்து நீரை இறுத்து வைக்கவும்.
ப்ரஷர் பேனிலோ, சின்ன குக்கரிலோ நெய் ,எண்ணெயைக்
காயவைத்து , கடுகு, மிளகாய்,பருப்புகள், பெருங்காயம் சேர்த்து
சிவக்க வறுத்து, தேங்காயைப் போட்டு ஒரு முறை பிரட்டி
இஞ்சி,கறிவேப்பிலையுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து
கொதிக்க விடவும்.
திட்டமான உப்புடன் அரிசி, பருப்புக் கலவையைச் சேர்த்து குக்கரில்
ஒரு விஸில் வரும்வரை வைத்து, மேலும் ஸிம்மில் 4 நிமிஷம் வரை
வைத்து இறக்கவும்.
நீராவி அடங்கிய பின் கரண்டிக் காம்பினால் ஒரு கிளறு கிளறி
மூடி வைத்து இரண்டொரு நிமிஷம் கழித்து உபயோகிக்கவும்
சாதம் வைக்க அரிசிக்கு எந்தக் கணக்கில் ஜலம் வைப்போமோ
அந்தக் கணக்கு ஜலம் வைத்தால் போதும்.
பருப்பிற்காக வேண்டாம்.
உதிர் உதிராக உசிலி தயார்.
துவையல், கொத்ஸு, பச்சடிகளுடன் சாப்பிட முழு உணவாக
இருக்கும்.
பச்சைப் பட்டாணி , முந்திரிப் பருப்பு முதலானவை சேர்த்து
ருசியைக் கூட்டலாம்.
தக்காளி ஸ்வீட் பச்சடி.
சமீபத்தில் விசேஷத்திற்கு பரிமாறிய சமையலில் ஸ்வீட்பச்சடி
மிகவும் நன்றாக இருந்தது. பச்சடியைப் பற்றி விசாரித்தேன்.மிகவும்
சாதாரண குறிப்புதான். இருந்தாலும் குழந்தைகளும் பெறியவர்களும்
மிகவும் விரும்புவார்களென்று நினைக்கிறேன்.
வேண்டியவைகள்.
பழுத்த தக்காளிப் பழம்——4
சர்க்கரை——5,—6 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி—-கால் டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு—8
உலர்ந்த திராக்ஷை —2 டேபிள்ஸ்பூன்
நெய்—-1 டேபிள் ஸ்பூன்
செய்முறை——–தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கச்சாத பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்யில் தக்காளியை லேசாக
வதக்கி, அரை கப் ஜலம் சேர்த்து நன்றாக வேகவிடவும். ஜலம்
வேண்டுமானால் சிறிது அதிகம் சேர்த்து மசிக்கவும்.
சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
நீர்த்துக் கொதித்தபின், திக்காக சேர்ந்து வரும்போது இறக்கி
நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துச் சேர்க்கவும்.
ஏலப்பொடி சேர்த்து உபயோகப்படுத்தவும்.
தக்காளியை நன்றாக மசிப்பது அவசியம். சொன்னால்தான்
தெரியும் தக்காளிப் பச்சடி என்று.
வேப்பம்பூப் பச்சடி.
வேண்டியவைகள்
வேப்பம்பூ——-3 டீஸ்பூன்
புளி—-ஒரு நெல்லிக்காயளவு
பச்சை மிளகாய்—-1
வெல்லப் பொடி——–3 டேபில்ஸ்பூன்
உப்பு –சிறிது
தாளிக்க எண்ணெய் —சிறிது
கடுகு—- கால் டீஸ்பூன்,துளி பெருங்காயம்
செய்முறை—-புளியை வென்னீரில் ஊற வைத்து் அரைகப் அளவிற்கு தண்ணீரில்
கெட்டியாகக் கறைத்துக் கொள்ளவும்.
வேப்பம் பூவை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடிக்கவும்.
காய்ந்த பூவாக இருந்தால் துளி நெய்விட்டு வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, பெருங்காயம் தாளித்துக்
கீறின பச்சை மிளகாயை வதக்கி, புளி ஜலத்தைச் சேர்க்கவும்.
உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். ஜாம் பதத்தில்
சுண்டி வரும் போது இறக்கி வைத்து வேப்பம் பூப்பொடியைச்
சேர்க்கவும். இஞ்சியும் சேர்க்கலாம். தமிழ் வருஷப்பிறப்பிற்கு
இந்தப் பச்சடி கட்டாயம் செய்வது வழக்கமாக இருந்தது.
பித்தத்தினால் ஏற்படும் கோளாறுகளுக்கெல்லாம் இந்தப் பச்சடி
மிகவும் நல்லது.
.வெந்தயக்கீரை ஸாம்பார்
இது அவரைக்காயும் வெந்தயக்கீரையையும் சேர்த்து
செய்யும் ஸாம்பார். அறைத்து விட்டு செய்யலாம்.
வேண்டியவைகள்
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக்கீரை—-3 கப்
காம்பு நீக்கி இரண்டாக நறுக்கிய அவரைக்காய் 10
பச்சை மிளகாய்—-2
வறுத்தரைக்க—-தனியா -2டீஸ்பூன்
மிளகாய்—4
கடலைப் பருப்பு–1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—அரைகப்
தாளிக்க—-எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயம்
ருசிக்கு உப்பு
துவரம் பருப்பு—முக்கால் கப். துளி மஞ்சள் பொடி
புளி–1 எலுமிச்சைஅளவு தக்காளிப் பழம் 2
செய்முறை-—–பருப்பைக் களைந்து மஞ்சள் சேர்த்து
திட்டமான தண்ணீருடன் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைக்கவும்.
வறுக்கக் கொடுத்த சாமான்களை 1 ஸபூன் எண்ணெயில் சிவக்க
வறுத்து, தேங்காயையும் சேர்த்துப் பிறட்டி இறக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியிலிட்டு சிறிது ஜலம் சேர்த்து அறைத்து
எடுக்கவும்.
புளியைக்கரைத்து 3கப் அளவிற்கு அதிகமாகவே சாறு பிழிந்து
கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம்
தாளித்து ,, பச்சைமிளகாயுடன் அலம்பிய கீரையைப் போட்டு
வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி புளி ஜலத்தைச்
சேர்க்கவும். அவரைக்காய், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
காய் வெந்து, புளி வாசனை போன பிறகு அறைத்த விழுதைக்
கரைத்துக் கொட்டி நன்றாக கொதித்தபின். வெந்த பருப்பை
மசித்துச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும்.
கொதிக்கும்போது அடிக்கடி கிளறி அடி பிடிக்காமல் செய்வது
அவசியம் கீரை அவரைக்காய் ருசி பொருத்தமாக இருக்கும்.
அவசியமானால், பருப்பை அதிகம் சேர்த்து வேகவைக்கவும்.
முழு உளுந்து மஸாலா.
வேண்டியவைகள்
கருப்பு முழு உளுந்து—–1 கப்
ராஜ்மா—–கால்கப்
இஞ்சி—-1 அங்குலத் துண்டு
பூண்டு—–7 —-8,இதழ்கள்
வெங்காயம்—-பெரியதாக 3
தக்காளிப் பழம்–2
மிளகாய்ப் பொடி—-1 டீஸ்பூன்
தனியாப் பொடி—1 டீஸ்பூன்
பெரிய ஏலக்காய்—-1
லவங்கம்—–5
பட்டை—-மிகச் சிறிய அளவு
வெண்ணெய்—-2 டீஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
ருசிக்குத் தேவையான—-உப்பு
தக்காளி ஸாஸ் 2 டீஸ்பூன்
செய்முறை—–உளுந்து,ராஜ்மாவை முதல் நாள் இரவே களைந்து
தண்ணீரில் ஊற வைக்கவும்.
பட்டை லவங்கத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு, வெங்காயத்தைத் தனியே நறுக்கி அரைத்துக்
கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
தக்காளியையும் தனியே அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை——ஊற வைத்தத் தண்ணீரை இறுத்துவிட்டு, உளுந்தை
4 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேகவிடவும்.
2—3 —-விஸில் வந்த பிறகு தீயை ஸிம்மில் வைத்து
7,—-8 நிமிஷங்கள் வேக வைத்து இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காயவைத்து, ஏலக்காய்,
வெங்காய விழுதைப்போட்டு நன்றாக வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் சமயம் வரை வதக்கி
மிளகாய்,தனியாப்பொடி. மஸாலா சேர்த்துக் கிளறி
அரைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
நன்றாகச் சேர்ந்து வரும் போது எடுத்து, வெந்த
உளுந்தில் சேர்க்கவும்.
உப்பு, டொமேடோ ஸாஸ் கலந்து வெண்ணெயையும்
சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கவும்.
தளர்வு செய்ய வேண்டுமானால் கொதிக்கும் போதே
ஜலம் சேர்க்கவும்.
க்ரீம் சிறிது சேர்த்தாலும் ருசி கூடும்.
ரொட்டி, சாதம் என எதனுடனும் சாப்பிடலாம்.
காரம் கூட்ட மிளகாய்ப் பொடி அதிகம் போடவும்.
சேனைக்கிழங்கு வறுவல்.
வேண்டியவைகள்
சேனைக் கிழங்கு—–கால் கிலோ
வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்
மஞ்சள்பொடி—–கால் டீஸ்பூன்
கடலைமாவு–2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு—2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—சிறிது
ருசிக்கு உப்பு, நெய் ஒரு ஸ்பூன்
செய்முறை—-சேனையை நன்றாகத் தண்ணீரில் அலம்பி மண்
போக சுத்தம் செய்து தோல் நீக்கி சிறிய மெல்லிய சதுரங்களாக
நறுக்கிக் கொள்ளவும்.
கொதிக்கும் தண்ணீரை விட்டு 5 நிமிஷம் ஊற வைத்துத்
துண்டங்களை வடிக்கட்டிக் கொள்ளவும்.
துண்டங்களை, உப்பு, நெய், ஒருஸ்பூன் எண்ணெய் விட்டு பிசறி
சிறிது நேரம் வைக்கவும். துண்டங்களில்காரம மாவுகள், மஞ்சள் பொடியென வேண்டியவைகளைத் தூவிக்
கலந்து உதிர்த்து காயும் எணெணெயில் பரவலாகப் போட்டு
கரகரவென்ற பக்குவத்தில் வறுத்து எடுக்கவும். இதுவும் ருசியான
வறுவல்தான்.
