ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.5
திசெம்பர் 19, 2012 at 10:29 முப 30 பின்னூட்டங்கள்
இந்த ஒருமாதமாக என்ன செய்தீர்களென்று கேட்கிறீர்களா?
அக்கம்,பக்கம், அரிந்தவர்,தெரிந்தவர்கள் இப்படி யாவரின்
விசாரிப்புகளும், நல்லபடி வந்து சேர்ந்ததற்கு ஸந்தோஷமும்
தெரிவித்த வண்ணமிருந்தனர்.
எங்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் C.P.W.D. இல் வேலை
செய்பவர் I.c.mஇல் காட்மாண்டுவில் வேலை செய்து கொண்டு
இருந்தார். வழிவழியாக தலைமுறை,தலை முறையாக நல்ல
பூஜை,புனஸ்காரங்கள் செய்து பழக்கப் பட்டவர்கள்
குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரும் விடாது
பூஜைகள்செய்பவர்.அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு
சாளக்ராமம் வேண்டும் என்று சொன்ன போது, முன்னதாகவே
நான் கேட்டிருந்தேன். என்ன செய்யலாமென்று.
திருப்பதி போய்வந்தால்,வேங்கடாசலபதிக்கும், காசி,ராமேசுவரம்
போய்வந்தால், கங்கையை வைத்து ,பூஜை,ஸமாராதனைகள்
செய்வது போல இதையும், அப்படியே அபிஷேக ஆராதனைகள்
முடிந்த அளவு செய்து, வேண்டியவர்களுக்கு கொடுங்கள் என்று
சொல்லி இருந்தார்.அப்படி செய்வது நல்லதென்றும் சொன்னார்.
அதை ஞாபகப்படுத்தி அவரையே நம் வீட்டிற்கு வந்து நல்லபடி
பூஜையை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்
கொண்டதற்கிணங்க அவரும் வந்தார். மற்றும் சில
குடும்பங்களையும் கூப்பிட்டோம்.
கூப்பிட்ட யாவரும் வந்து புஷ்பங்களும், பாலும்,பழங்களுமாக
நிரப்பி ஒரு பக்தி பூர்வமாக அருமையான ஸமாராதனையாக
நடத்திக் கொடுத்தனர்.
மந்திர பூர்வமாக, அபிஷேகங்களும்,அர்ச்சனைகளும்
வந்தவர்களுக்கும்,மனம் நிறைந்த ஒரு ஸொந்த
வீட்டு பூஜை,புனஸ்காரம் மாதிரி உணர்ந்தார்கள்.
வீட்டு,ஸமாராதனையாக ஒரு ஸந்தோஷத்தைக் கொடுத்தது.
இதற்கு முன்னரே, சாளக்ராமங்களைப் பற்றிய அனுபவம் உள்ள
ஒரு பெரியவரிடம் வகை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டோம்.
கைக்கடக்கமானவைகள்தான் வீட்டில் வைத்து பூஜிப்பதற்குச்
சிரேஷ்டமானது.
பெரிய அளவுள்ளவைகள் கோவிலுக்குக் கொடுத்து விடுங்கள்,
என்று சொன்னவர்,சங்கு சக்கரம் உள்ளவைகள், சிவாம்சம்
உள்ளவைகள்,வம்ச விருத்திக்கான,ஸந்தானகோபாலர்கள்,
இப்படி பலவகையாகப் பிரித்துக் கொடுத்தார். பெரிய பெரிய
தாம்பாளங்களில் வைத்து, பால்,தேன்,தயிர்,என விமரிசையாக
அபிஷேகம் நடந்தது.
இது நர்மதாநதியில் கிடைக்கும் பாணம் என ப்படும் சாளக்ராமம்.
கீழே.
புத்தம் புதியதாக வருத்து,அரைத்து,பொடித்து, மடி ஆசாரமாக
செய்த சமையல் எல்லோரும்,ஒன்று கூடி, மகிழ்ந்தது மறக்க
முடியாத ஒரு நிகழ்வு.
யார் யார்க்கு,அவரவர் தெரிந்தவர்களுக்கு, உறவினர்களுக்கு,
எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு,புஷ்ப சந்தனத்துடன்
கொடுத்ததுவுமல்லாமல் மீதி இவ்வளவு சாளக்ராமம் உள்ளது,
யாருக்கு வேண்டுமோ ,வந்து வாங்கிப்போகலாம் என்று, அறிக்கை
விடாத குறையாகச் சொல்லியும் அனுப்பினேன்.
அதன் விளைவு, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் இன்டியன்
எம்பஸியில் வேலை செய்யும் பலரிடமிருந்து, இவர் சொன்னார்,
அவர் சொன்னார், என்ன விலை வேண்டுமோ கொடுத்து
விடுகிறோமென்றும் வர ஆரம்பித்தனர்
எல்லோருக்கும் விரும்பியதைக் கொடுத்தோம்.
எப்பவும் உங்களை மறக்க மாட்டோம், இம்மாதிரி எங்கு
கிடைக்கும்? என்ற வாழ்த்துக்களோடு திக்கு,திக்காய், சாளக்ராமம்
விஜயம் செய்ய போய்க்கொண்டிருந்தது.
என்னப்பா உன் சாளக்ராமங்கள் பாலக்காட்டிலும். வேறு
ஊர்களிலும், வீட்டில் வாத்தியார் வைத்து,கிரமமாக பூஜை
செய்யப்படுகிறது.
மேலே உள்ள படம் ஸதாபிஷேகத்தில் வாத்தியார் செய்த அபிஷேக
படம். அபிஷேகம் நடக்கிரது.
வயதான பெரியவர் கேட்டிருந்தார், அவருக்குக்
கொடுத்தேன்,என்ன ஸந்தோஷம் அவருக்குத் தெரியுமா?
திருநெல்வேலியில் என் மாமாவுக்கு அனுப்பினேன்.
அவருக்கு வேண்டியவர்களுக்கு வேண்டுமாம்,
ஆந்திராவில் இப்படி நான்கைந்து பேர்கள் இப்படியாக வாங்கிப்
போனவர்களின் நல்லாசிகளுடன்,அன்பு வார்த்தைகளும்
தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தது.
எவ்வளவு திருப்தியாக இருந்தது தெரியுமா?
குதிரை சுமந்து,ப்ளேனில் வந்து யார்யாரிடமோ போய்
என்னளவில் இதிஹாஸம் படைத்து, நல்ல , நல்ல ,
பின்னூட்டங்களையும், கொடுத்துக் கொண்டிருந்தது.
கட்டுக்கதையல்ல நிஜம்.
பாக்கி இருந்த வைகளை,பின்னொரு ஸமயம் சென்னை
போகும்போது காஞ்சி மடத்தில் சேர்த்து விடலாமென்று அங்கு
போனோம்.
மஹாப்பெரியவர், சிவாஸ்தானம் என்ற இடத்தில் தங்கி
இருந்தார்.
நாங்கள் ஒரு மூங்கில் தட்டில் சாளக்ராமங்களை வைத்து,
இதைச் சேர்ப்பதற்காக வந்திருக்கிரோம் என்று சொன்னோம்.
அவர் தங்கியிருந்த இடத்தின் நடுவே ஒரு கிணறு. அந்தப்புறம்
நின்று கொண்டு தரிசனம் _கொடுத்ததுடன், எப்படி இவ்வளவு
சாளக்ராமங்கள், எல்லாம் இவ்விடத்திற்கேயா?என்று
விசாரித்தார்.
மளமள வென்று சுருக்கமாகவும்,விவரமாகவும் நாங்கள்
சொன்னோம். மேலும் விஷயங்களையெல்லாம் கேட்டார்.
எங்களுக்குத் தெரிந்தவைகளைச் சொல்லி ,நமஸ்கரித்து
ஆசிகளைப் பெற்றுக்கொண்டு, மற்றும் கோவில்களைத்
தரிசித்துத் திரும்பினோம்.
அச்சமயம் புதுப் பெரியவர் திக் விஜயத்திலிருந்தார். ஆக
இந்த வகையிலும் பலயிடங்களுக்குச் சென்றது சாளக்ராமங்கள்.
பிள்ளைகள் துரைப்பாக்கம் D.B ஜெயின் காலேஜில் படிக்கும் போது
அதன் பிரின்ஸ்பால் உயர்.திரு. நாகராஜன் என்பவரிருந்தார்.
அவருக்கு வேண்டி பின்நாளில் சாளக்ராமங்களை விலைக்கு
வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்தோம்.
ஒன்றுமில்லாவிட்டாலும்,சாளக்ராமங்களை மடியாக அலம்பித்
துடைத்து, காயத்ரி சொல்லி,துளசி தளம் சேர்த்தால் கூட
போதுமென்றார்.சந்தன குங்குமம், இட்டால் போதும் என்றார்.
இதெல்லாம் ஒருவர்க்கொருவர் அபிப்ராயம் மாறுபடும்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் இவரின்
ஸதாபிஷேகத்தில், தானங்கள் செய்யும் போது
அதில்,சாளக்ராமம்,ருத்திராக்ஷம் முதலானவைகள்
வைத்திருந்தது. வாத்யாரின் மொத்த காண்டிராக்ட் அது.
ஓஹோ!! இவைகள் தானத்தில் விசேஷம் போலும்
நம்மை அறியாமலேயே நாமும் இவைகளை வாங்கிக்
கொடுத்துள்ளோம் என்ற நினைவு வந்த போது பழைய ஒரு
ரீல் மனக்கண் முன் ஓடி வந்து விட்டு மறைந்தது.
ராயல் ஃப்ளைட்டிற்கும், சாளக்ராமத்திற்கும் என்ன ஸம்பந்தம்?
எல்லாம் வல்ல பசுபதீசுவரர்,கிருபையால், ராஜ சேவகமும்,
ராயல்ஃப்ளைட்டால்,சாளக்ராம வினியோகமும், இதை எழுத
எனக்கு ஒரு ப்ளாகும் கிடைத்தது எதைக் குறிக்கிறது.?
அனுபவம் கணவருக்கும், எடுத்துரைப்பது எனக்கும் கிடைத்த
முக்கியமான நிகழ்வுகளென்பதில் யாருக்கும் ஸந்தேகமிராது. இது வரை
என்னுடன் வந்து இந்த நிகழ்வுகளை அக்கரையுடன்
படித்து,பின்னூட்டங்களும் கொடுத்து என்னை ஊக்குவித்த
அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகளைச் சொல்லுகிறேன்.
Entry filed under: சில நினைவுகள்.
30 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 10:47 முப இல் திசெம்பர் 19, 2012
ஸ்ரீ வைஷ்ணவ திருமணங்களில் மணப்பெண்ணின் கையில் சாளிக்ராமத்தை எழுந்தருளப் பண்ணி அதையும் சேர்த்து கன்னிகாதானம் செய்வார்கள். அதை அவள் மடியில் கட்டி, கிருஹ்ப்ரவேசத்தின் போது மாமியாரின் மடியில் சேர்த்து விடுவார்கள்.
எங்கள் அகத்திலும், தினமும் சாளக்ராமப் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) உண்டு.
உங்களது சாளக்ராம தானமும் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
நீங்களும் மாமாவும் சேர்ந்து இருக்கும் சதாபிஷேகப் புகைப்படம் அருமை!
உங்களிடமிருந்து அன்று சாளக்ராமம் பெற்றுக் கொண்டவர்களும், இதைப் பதிவாகப் படித்தவர்களும் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள்.
உங்கள் கையால் சாளக்ராமம் பெற்றுக் கொண்ட நிறைவு!
2.
chollukireen | 11:14 முப இல் திசெம்பர் 19, 2012
கல்யாணங்களில் ஓடம் என்று ஒரு பாட்டு முக்கியமாக பாடப்படும். அதில்,சாளக்ராமம்,துளசிதளம்,தட்டிலே வைத்து,அலங்காரக் கன்னிகையை தானமே செய்தார்.
என்ற பாடல் வரியை ஞாபகப்படுத்திக் கொண்டேன்.
பிரதி பலன் எதிர்ப்பார்க்காத ஒரு தானம்,கன்னிகை,சாளக்ராமம், துளசிதளம் யாவும் போலும்.!!!!!!
உங்கள் ஸம்ரதாயம் குறித்து அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
உடனுக்குடன் உங்கள் விருப்பத்தையும் பின்னூட்டத்தையும் அனுப்பி என்னை நெகிழ்வடையச் செய்து விட்டீர்கள். அன்பிற்குத் தலை வணங்குகிறேன்.
உங்கள் வீட்டுப் பெருமாளுக்கு என் நமஸ்காரங்கள்.
யாவும் நன்மையாக நடக்கட்டும். அன்புடன்
3.
gardenerat60 | 10:51 முப இல் திசெம்பர் 19, 2012
அருமை அருமை அருமை அம்மா!
உங்கள் விசாலமான மனது அப்படியே பதிவில் பிரதிபலிக்கிறது!.
போட்டோவும் பாத்துட்டோமே!
இவ்வளவு பொறுமையாக எங்களுக்காக , அருமையா சம்பவங்களை நினைவு கூர்ந்து , எழுதியதற்கு, நன்றி, நமஸ்காரம் .
4.
chollukireen | 11:23 முப இல் திசெம்பர் 19, 2012
உடனுக்குடன் விருப்பம், பின்னூட்டம், என எழுதி என்னை மிகவும் கௌரவப்படுத்தி விட்டீர்கள், ரஞ்சனியும், நீங்களும்.எங்கேயோ வானத்தில் பறப்பதுபோல ஸந்தோஷ உணர்வுகள். ஆதரவு என்பது இதுதான். ஆசிகளையும்,அன்பையும் தவிர நான் என்ன கொடுக்கப் போகிறேன். போட்டோக்கள் பொருந்தும் போலத் தோன்றியது. அபிஷேகம்,தானம், இவைகள் ஒரு
நல்ல உணர்வை உண்டாக்கும் என்றும் தோன்றியது.
மிகவும் ஸந்தோஷமம்மா. அன்புடன்
5.
gardenerat60 | 1:28 பிப இல் திசெம்பர் 19, 2012
அம்மா! மனுஷா எதிரே இருந்தாலும் , அக்கம் பக்கமே இருந்தாலும், கண்டுக்காம, நமக்கு என்ன என்று இருப்பவர்கள் அதிகம் உள்ள காலம் இது.
மன நிறைவோடு நீங்கள் கொடுக்கும் ஆசிகளும் அன்பும் பெற நான் பாக்யம் செய்துள்ளேன்.
உங்கள் பதிவுகளை படிக்கும் போது, நல்ல உணர்வுகள் எழும்புகின்றன. அது ஒரு தனி திறன் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!
நமஸ்காரம்.
6.
chollukireen | 11:42 முப இல் திசெம்பர் 21, 2012
நிஜமாகவே எதிர் போரஷனில் இருப்பது யார் என்று தெரியாத நிலையில்தான் வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
எல்லாரும் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.மேல் நாட்டில் மட்டுமல்ல. நம் நாட்டிலும்தான். இதுதான் உண்மை நிலை.
7.
angelin | 11:34 முப இல் திசெம்பர் 19, 2012
.அம்மா நலமாக இருக்கீங்களா …இடையில் கணினி பிரச்சினை மற்றும் வேலை பிசி காரணமா மற்ற பகுதிகளை படிக்க இயலாமல் போனது ..
மிக பெரிய சந்தோசம் ..பிறரை சந்தோஷப்படுத்தி பார்ப்பது ..
சாளக்ராம தானம் மூலமாக நீங்க நிறைய பேருக்கு ஆசிர்வாததையும் சந்தோஷத்துடன் கொடுத்திருக்கீங்க
உங்க நினைவுகளை அருமையான புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி .
முந்தைய பகுதிகளையும் வாசிக்கிறேன்
8.
chollukireen | 12:05 பிப இல் திசெம்பர் 19, 2012
எல்லாப் பிரச்சினையும் கடந்து பின்னூட்டமிட்டதில்
மிக்க ஸந்தோஷம்.அதுவும் சுடச்சுட. இப்படி சில பேர் நீங்கள் இருப்பதால்தான் எனக்கு ஊக்கம் வருகிறது.வேலையை எல்லாம் முடித்து வந்து பிறகு
எழுதுங்கள். உங்களை எல்லாம் பார்ப்பதில்தான் என்னுடைய பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிரது. தொடர்ந்து அன்புடன்
9.
Sheela | 11:45 முப இல் திசெம்பர் 19, 2012
Mami
Namaskaram. rombavum nanraga ulladu. Innum ungaludaiya , experiences niraiya ezudhungo. waiting eagerly to read & enjoy.
My regards to mama also.
And a special regards on behalf of appa, who was planning to visit you, but some how could not do so.
regards
10.
chollukireen | 5:46 முப இல் திசெம்பர் 20, 2012
ஆசிகள் ஷீலா. நன்றாகத் தெரிந்த என்னை பாராட்டி எழுதியிருப்பதும் நன்றாக உள்ளது. குளிர் காலம் முடிந்ததும், டில்லி வர கணேஷ் கூப்பிட்டுள்ளான்.
பார்க்கலாம். என்னஎன்ன மாறுதல்கள் ஏற்படுமென்று?
அப்படி வந்தால் எல்லோரையும் பார்க்க முடியும்.அப்பாவிற்கு எங்களின் ஸ்பெஷல் விசாரிப்புக்களைச் சொல்லவும். அன்புடன்
11.
VAI. GOPALAKRISHNAN | 4:17 பிப இல் திசெம்பர் 19, 2012
நமஸ்காரம் மாமி. இந்தப்பதிவும் படங்களும் மிகவும் அழகாக அருமையாக உள்ளது.
எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கோ.
அன்புடன்
கோபாலகிருஷ்ணன்
12.
chollukireen | 6:03 முப இல் திசெம்பர் 20, 2012
உங்களுக்கு எங்களின் மனப்பூர்வ ஆசீர்வாதங்கள். பாராட்டி எழுதியுள்ளீர்கள். உங்களைப்போன்றவர்களின்
பாராட்டுகள் தான் 5 பதிவுகள்போட உற்சாகமளித்தது..உங்கள் பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்
பதிவான மாதிரியில் வந்தது. பின்னர் இல்லை. ப்ளாகரில்
பின்னூட்டமிடுவதற்காக வேண்டி ஒரு வலைத்தளம் ஆரம்பித்தால் என்ன என்று கூடத் தோன்றுகிறது. உங்கள் மேலான யோசனையைச் சொல்லுங்கள். எனக்குச் சில ஸமயம் இப்படி பின்னூட்டங்கள் போய்ச் சேராமல் இருந்து விடுகிறது. வருத்தமாக இருக்கிறது. திரும்பவும் நன்றி கூறி
அன்புடன் ஆசீர்வாதங்களையும் சொல்லுகிறேன்.
13.
இளமதி | 7:15 முப இல் திசெம்பர் 20, 2012
அம்மா..
சாளக்ரம விநியோகம் அற்புதமாக நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு நடந்தேறியிருக்கே….
சத்தியமாக சொல்கிறேன் உங்களைப் போல புண்ணிய கர்மாக்களைச் செய்பவர்களை நான் இதுவரை அறியவே இல்லை. பேசுவதற்கு வார்த்தை வருகுதில்லை..
உங்களையும் அப்பாவையும் சதாபிஷேக தின போட்டோவில் பார்க்கக் கிடைத்தது அலவில்லாத சந்தோஷமாயிருக்கு….
எல்லாம் என்னது, எனக்கே என்றில்லாம எல்லாவற்றையும் எல்லாருக்கும் கொடுத்து வாழ்க்கைன்னா எப்பிடி வாழனும்னு கத்துக்குடுக்கிறீங்க…
உங்களுக்கு நல்ல்ல ஆரோக்கியமும் ஆயுளையும் பகவான் தந்தருள ப்ரார்த்திச்சு உங்ககிட்ட ஆசியை வேண்டுகிறேன்.
மிக அருமையான பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா.
14.
chollukireen | 7:35 முப இல் திசெம்பர் 21, 2012
இந்த சாளக்ராமங்கள் முன்பெல்லாம் கிடைக்க அறிதானது. எங்களுக்குக் கிடைத்தது அதிகம்.
கிடைத்ததை நல்ல முறையில் வினியோகிக்க ஆசை.
அது நடந்தது. பணமோ,காசோ,பொருளோ இல்லை அது. அமெரிக்காவிலிருந்துகூட,அமரேஷ் என்னும் இளைஞர் சாளக்ராமத்துக்கு பின்னூட்டத்தில் நன்றி எழுதியுள்ளார் பார். இன்னும் ஒருவருக்குக் கூட
சாளக்ராமம் அமெரிக்கா போய் அனுக்ரஹித்துக்
கொண்டுள்ளது. எல்லோருக்கும் நன்மையை வேண்டுகிறேன்.உன்பதில் அன்பைப் பிரதிபலிக்கிறது.
அன்புடன்
15.
chitrasundar5 | 4:11 பிப இல் திசெம்பர் 20, 2012
காமாஷிமா,
சாளக்ராம பதிவுகளில் முதல் 4 பதிவுகள் அந்நாளைய பேச்சு வழக்குடனும் (கொஞ்ஜமே கொஞ்ஜம் கடினமாக), ஐந்தாம் பதிவு மட்டும் இந்நாளைய பேச்சுவழக்கு போலவும் முடித்திருக்கிறீர்கள்.சிறப்பான பதிவுக்கு நன்றி அம்மா.
மஹாலிங்கம் ஐயா நலமுடன்(சில பிரச்சினைகள் இருந்தாலும்) இருப்பதால் பதிவு சுபமாக முடியும் என்று நினைத்துத்தான் படித்துவந்தேன்.அவ்வாறே கடைசிப்பதிவை மங்களகரமாக முடித்து,ஸதாபிஷேக படத்தை வெளியிட்டு, ஆசிகளை படிப்பவர் அனைவரையும் பெற்றுக்கொள்ளச் செய்துவிட்டீர்கள்.
சாளக்ராம விநியோகத்தால் உங்கள் மகிழ்ச்சியை நாங்களும் உணர்ந்தோம். மேலும் பல அநுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.அன்புடன் சித்ரா.
16.
chollukireen | 7:23 முப இல் திசெம்பர் 21, 2012
அன்புள்ள சித்ரா பேச்சு வழக்கு,யோசனை செய்து எழுதவில்லை. மனதில் வந்ததை எழுதியிருக்கிறேன்.
நானே திருப்பிப் படித்துப் பார்த்தால்தான் என்னவென்று
தெரியும். உங்களுடைய அபிமானங்கள், நல்லெண்ணங்கள் யாவும் புரிகிறது. எல்லாவற்றிற்கும்
ஒன்று சேர நன்றிகள்.அன்புடன்
17.
Amaresh Rajasekharan | 1:09 முப இல் திசெம்பர் 21, 2012
Dear Mami,
Ennidam Tamil fonts illai. Aagaiyinaal English scripts use panni, tamil language le ezhudhugiren.
Neengal anbudan, aasirvaadham-udan koduttha Salagrama-shila vai en poojai roomil dhinamum poojai saigiren.
Ungalukku en manamaarndha nanri. Neengalum, mamavum nalamudan irukka enadhu prarthanai enrum undu.
Udal nalam paartthu kondu irungal. Ingirundhu ungalukkum, mamavukkum enadhu namaskaram. Mamavukkum enadhu namaskratthai dhayavu saidhu therivikkavum.
Enraikkum Anbudan
Amaresh
18.
chollukireen | 9:56 முப இல் திசெம்பர் 21, 2012
பரவாயில்லை. நான் புரிந்து கொள்வேன். உன்னுடைய பின்னூட்டம் பார்த்து மிக்க ஸந்தோஷம்.
அமெரிக்காவில், பூஜையும்,புனஸ்காரமுமாக,அமரேஷ்
நினைக்கவே அழகாயும்,அருமையாகவும் இருக்கு.மாமா உடல்நிலை அப்படியே இருக்கிரது.
என்னுடைய பதிவுகளைப் படித்துதான் பின்னூட்டம்
கொடுத்திருப்பாய். இம்மாதிரி பின்னூட்டங்கள் படிக்கும் எல்லோருக்கும் நன்றாக இருக்கும். எப்போதும் எங்களுடைய பரிபூரணமான ஆசீர்வாதங்கள், உனக்கும், உன் சினேகிதர்களுக்கும்.
நன்றி. அன்புடன்
19.
Mahi | 2:56 முப இல் திசெம்பர் 25, 2012
Nice way of ending Kamakshi-ma! I got to know many things from this salakramam posts. Thank you!
20.
R.Narasimahan | 6:18 முப இல் ஜனவரி 23, 2013
Pranams Mami
very intersting
you are doing wonderful service
we pray for you and your family on behalf of the beneficiaries
dasan
narasimhan dubai
21.
chollukireen | 9:49 முப இல் ஜனவரி 23, 2013
ஆசிகள். உங்கள் கமென்டிற்கும், முதல் வருகைக்கும் மிகவும் ஸந்தோஷம். அடிக்கடி வருகை தந்து ஊக்கமளிக்க வேண்டுகிறேன்.
அன்புடன் சொல்லுகிறேன்.
22.
ranjani135 | 1:16 பிப இல் ஜனவரி 18, 2022
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பின் எல்லாப் பகுதிகளையும் மறுபடியும் படித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கும் ஒரு நல்ல மலரும் நினைவுகளாக இருந்திருக்கும். நம்முடைய பழைய அனுபவங்களே இப்போது புதிதாகத் தோன்றுவது அதிசயம் தான் இல்லையா? வயதாக ஆகஇந்த மாதிரியான பழைய நினைவுகளிலே தான் நாம் வாழ்கிறோம் என்று கூடத் தோன்றுகிறது. உங்களையும் மாமாவையும் சேர்த்துப் பார்த்தபோது மனது கலங்கியது. உங்களுக்கு என்ன சொல்ல?
23.
chollukireen | 5:34 பிப இல் ஜனவரி 18, 2022
நான்கு மாதங்கள் கழித்து இது ஒரு நினைவு அஞ்சலி ஆக இருக்கட்டும் என்று போஸ்ட் செய்திருக்கிறேன் நீங்களும் என்னை நன்றாக அறிந்தவராக இருப்பதால் உங்களுக்கு சில எண்ணங்கள் உண்டாகலாம் வருகைக்கு நன்றி அன்புடன்
24.
chollukireen | 12:26 பிப இல் பிப்ரவரி 14, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
சாளகிராமத்திற்கும் ராயல் ஃபிளைட்டிற்கும் என்ன உறவு புரிந்ததா? இப்படியெல்லாம் எழுதிய இந்தப்பதிவு அவரின் ஞாபகமார்த்தப் பதிவாக இப்போது பதிவாகிறது.சாளக்ராம வினியோகம் . அன்புடன்
25.
ஸ்ரீராம் | 12:22 முப இல் பிப்ரவரி 15, 2022
எவ்வளவு சாளக்ராமங்கள்… அம்மாடி… உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் வாங்கி கொண்டவர்கள்.
26.
chollukireen | 12:08 பிப இல் பிப்ரவரி 15, 2022
யாரோ நேராக முக்திநாத்திலிருந்து கொண்டு வந்த சாளக்ராமமிது. நமக்கு எவ்வெப்படியோ வந்து சேர்ந்தது என்று பேசிக்கொள்ளலாம். சிலஸமயம் நான் இப்படி நினைத்துக் கொள்வேன்.நன்றி. அன்புடன்.
27.
நெல்லைத்தமிழன் | 3:39 முப இல் பிப்ரவரி 15, 2022
நமக்குத் தெரியாமலேயே அமைந்துவிடும் பெரிய புண்ணியங்கள் இவை.
நீங்கள் கொடுத்த சாளக்ராமங்களுக்கு எத்தனையோ இடத்தில் ஆராதனைகள் நடந்துகொண்டிருக்கும்.
நானும் நேபாள் 2008 விஜயத்தில் நிறைய சாளக்ராமங்கள் வாங்கினேன். சமீபத்தில்தான் பிரதிஷ்டையாச்சு
28.
chollukireen | 12:14 பிப இல் பிப்ரவரி 15, 2022
மிக்க ஸந்தோஷம். தினமும் திருமஞ்ஜனம், ஆராதனைகள் இருக்கும். நமஸ்காரங்கள். நீங்களே வாங்கி வந்தவைகள்.இன்னும் விசேஷம். வேண்டியவர்களுக்கும் கொடுத்திருப்பீர்கள். அது இன்னும் விசேஷம். நன்றி. அன்புடன்
29.
Geetha Sambasivam | 1:14 முப இல் பிப்ரவரி 18, 2022
ஆஹா! சாளக்கிராமங்கள் விநியோகம் பற்றிய விவரணைகளைப் படிச்சுட்டு ஒரு வழியாக் கருத்துச் சொல்லவும் வந்திருக்கேன். இதுவும் போகும் என எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு நிறையப் புண்ணியமாகச் சேர்ந்திருக்கும். இறை அருளால் எல்லாம் நல்லபடி முடிந்திருக்கிறது. எங்க வீட்டிலும் சாளக்ராமம் இருக்கு. ஆனால் தினசரி பூஜைனு செய்யாமல் துடைத்துத் துளசி மட்டும் சார்த்திவிட்டு நிவேதனம் பண்ணுகிறோம்.
30.
chollukireen | 12:11 பிப இல் பிப்ரவரி 18, 2022
இந்தமாதிரி ஏராளமாக வாங்கிக் கொடுக்க இப்போது நினைத்தாலும் எங்களால் முடியுமா?அது ஒருகாலம்.அதுவாகக் கிடைத்து அதுவாகவே வினியோகமும் ஆனது. இப்போது பிள்ளை ,பெண், மாப்பிள்ளைபேரன் யாவரும் போன வருஷம் போய் வந்தார்கள். வேண்டியவர்களுக்காக கொடுப்பதற்கு வாங்கி வந்தனர். அவ்வளவுதான்.உங்களாத்திலும் சாளக்கிராமங்கள் இருக்கிறது. கேட்க ஸந்தோஷம். உங்கள் வரவிற்கு மிகவும் நன்றி. அன்புடன்