Archive for மே 6, 2014
அன்னையர் தினம்–15
எவ்வளவு ஆசை ஆசையாக குழந்தையை வளர்த்தோம். அந்தக் குழந்தையின்
நலம் குறித்துக் கூட அவர்கள் கடிதம் எழுதவில்லை அம்மா மனக் கஷ்டப்பட்டாலும்
வார்த்தைகளில் சொல்லுவார். என்ன பிரமாதம் போ. ஊரில எத்தனையோ குழந்தைகளிருக்கு.
அதுகளைக் கொஞ்சினால்ப் போகிறது. எங்கேயாவது நன்றாக இருந்தால்ப் போதுமானது
என்று அடிக்கடி சொல்லுவார்கள்.
அன்னையர் தினப்பதிவு ஆரம்பித்து அடுத்த வருடமும் வந்து விட்டது.
என்னுடைய இயலாமையை நினைத்துக் கொண்டேன்.
காலம் முழுவதும் ஏதோ போராட்டங்கள் இருந்தாலும், பொருட் படுத்தாது அதிலிருந்து
மீண்டுகொண்டே காலம் கடத்தினது பொதுஜன உறவுகளும், பிரருக்கு உதவி செய்து
மகிழும் மனப்பான்மையும் இருந்ததால்தான்.
காலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது. மிகுதி இருந்த நிலத்தையும் விற்று அடுத்த
பெண்ணிற்கும் கலியாணம் செய்து முடித்து காலம் பறந்து கொண்டு இருந்தது.
எவ்வளவோ விஷயங்கள்.
என்னுடைய பெண்ணை தன்னுடன் இருக்க வேண்டும் என்று
சொல்லி அப்பா அழைத்துப் போனது. தனக்குப் பேரன் கையினால் அந்திமக்
கிரியைகள் செய்ய வேண்டுமென்று தான் நன்றாக இருக்கும்போதே உறுதி
மொழி வாங்கிக் கொண்டது போன்றவைகள் அந்த நாளைய பெற்றோர்களின்
ஆசைகள்.
கான்ஸர். இந்த வியாதி வந்தால் , குடும்பத்தின் செல்வ நிலைக்கும் ஏதே வியாதி
பிடித்து விடும் என்று சொல்வார்கள்.
அந்த நோயினால் அப்பா பீடிக்கப் பட்டார். ஆனால் அவர் ஒரு மருந்தும் சாப்பிடவே
மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து ஒரு வலிமருந்து கூட சாப்பிடாமல் இருந்து தான்
அவருடைய வாழ்வை முடித்தார்.
அம்மாதிரி ஒரு மன உறுதி எப்படி வரும்? ஆறு வருடங்கள் அம்மாவின் பணிவிடை
அங்கும் அந்த பொறுமையுடன் சிச்ரூஷை.
அந்தக் காலத்தில் மருந்துகளும் கிடையாது.
எங்களை எல்லாம் வரவேண்டாம். குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிரமமாக
இருக்கும் என்ற ஒரே பதில்
எவ்வளவு பரோபகாரியாக இருந்தால் கூட ஸமயத்தில் சில காரியங்கள்
மறக்கப் படுகின்றன.
அப்பாவிற்கு அந்தியகாலம். பெரிய அக்காமட்டில் உதவிக்கு.
இருப்பதில் அனுபவமுள்ள பெரியவர்கள்,பார்த்து விட்டு அதிக நாள் இருக்க மாட்டார்.
பெண்களுக்குச் சொல்லி விடு. சின்ன பெண் நான், சென்னை பெண் இன்னொருத்தி.
ஆனால் அம்மா சொல்லவில்லை. அடுத்தத் தெருவிலிருக்கும் , பங்காளி உறவினர்களிடம்
போய், நாளை மறுநாள் என்றோ ஒருநாள் அவருக்கு செய்ய வேண்டிய காரியத்தை
கௌரவமாக நீ செய்ய வேண்டுமப்பா என்று வேண்டுகோள் விடுத்து வந்தார்.
அந்த வயதான ,படித்த,பக்திமானுக்கு எந்த விதக் குறைவும் ,தகன ஸமயத்தில்
ஏற்படக் கூடாது. அப்போதும் சிச்ரூஷ மனப்பான்மைதான்.
எனக்கு அப்பா உயிர் நீத்த பிறகு தந்தி கொடுத்தார்கள்.
வந்த தந்தி அம்மா போய்விட்டாளென்று. கொடுத்தவர்கள் தவறோ,
வாங்கினவர்கள் தவறோ?
இரண்டும் கெட்டான் மனப்பான்மையில் இரண்டு குழந்தைகளுடன் கல்கத்தாவினின்றும்
வருகிறேன். சென்னை பெண்ணிற்கு அவர்கள் விவரம் சொல்லவில்லை.
சென்னயிலிறங்கி, விழுப்புரம் போய் வண்டி மாறி புதுவை வண்டியில் ஊரில் இறங்குகிறேன்.
அதே கம்பார்ட்மென்டில் ஏற உறவுகாரர்கள்.
வந்தயாடி அம்மா, வா. அப்பா நல்லபடி போய்ச் சேர்ந்தார். இறங்க வழி கொடுத்து ஏறும் போதே
ஸமாசாரம்.
அப்பாதானே?
ஆமாம்.ஆமா.
மனது ஒரு நிலைக்கு வந்து , கூட வரும் குழந்தைகளைக் கவனிக்க வேண்டுமே?
ஸ்டேஷனில் வெளியில் வந்தால் வெளியில் என் பெண். அவளுக்குத் தெரிந்ததை
அவள் சொன்னாள்.
அந்திய காலம் அப்பாவிற்கு எப்படி இருந்தது?
கடைசிவரை ஞாபகம் இருந்தது. வித்தியாஸமாக மூச்சு வருவதுபோல தோன்றியதும் அம்மா சொல்கிராள். பூஜையில் கடைசியில் ஒரு ஸ்லோகம் சொல்வீர்களே அதைச் சொல்லுங்கள்.
ஸ்லோகத்தை ஆரம்ப வார்த்தை சொல்லிவிட்டு நீ சொல் என்கிரார். அவித்யா மூலநாசாயா ஜென்ம கர்ம நிவர்த்தயே என்று தொடர்ந்து கொண்டே முடியும் வரிக்கு
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் சாம்பசிவ பாதோதகம் சிவம்.
ஸ்லோகத்தை ஆரம்ப முதல் சொல்லி விட்டு
ஸத்குரு பாதோதகம் சுபம். சாம்பசிவ பாதோதகம் சிவம் வரை சொன்னவர். அவர் பாதத்திலே சுபமாகிவிட்டார்.
அம்மா அந்தக் கடைசி நேரத்தைச் சொல்லும்போது, எவ்வளவு முடியாத நேரத்திலும், பூஜை புனஸ்காரங்கள் எப்படி உதவுகிறது?
கூட இருந்து பார்த்தவர்கள் சொன்னார்கள். அந்த நேரத்தில் கூட அம்மா
தைரியமாக ஒரு அந்தியகாலம் என்ற துக்க நேரத்தைக் கொண்டுவராமல்
ஒரு சிவ பூஜையை அப்பாவிற்கு ஞாபகப்படுத்தி சொல்ல வைத்து,இருக்கவே இருக்கும் கங்கா ஜலத்தைக் கொடுத்து ஒரு பூஜைநடக்கும் இடத்தைக் கொண்டு வந்து விட்டார்.
இன்னும் எவ்வளவோ விஷயங்கள் எழுத வில்லை. யாருக்கு எந்ந நேரம் எது தேவையோ
அதைக் கொண்டுவருவதில் அம்மாவிற்கு அனுபவமாகி விட்டது.
இம்மாதிரி எல்லாம் அதிகம் படிக்காத ஒரு ஸோஷியல் ஸர்வீஸை ,தக்க ஸமயத்தில்
ஸந்தோஷத்திலும், தேவையான ஸமயங்களிலும் கொடுக்கும் அம்மாவை, நினைக்க
நினைக்க ஏதோ எழுத நினைத்து ஏதோ எழுதுவது போல நீண்டு கொண்டே போகிறது.
என்ன அம்மாமார்கள் எல்லோருக்கும் மிகவும் முக்கியமானவர்கள். எங்கள் அம்மா
ஒரு விசேஷ ப்ரகிருதி.
எல்லோரின் ஸுகத்திலும் இன்பம் காண்பவர்.
குறைந்த பக்ஷம் இதை எனக்குத்தெரிந்த வகையில் எழுதி வருகிறேன். இன்னும் சில
ஸம்பவங்களை அடுத்து எழுதுகிறேன். அன்னையர் தின நினைவுகள் இன்னும் உள்ளன.
தொடர்ந்து வருவேன்.
