Archive for ஜூலை 14, 2017
டால்வகையில் வெள்ளைக் காராமணி.

நாம் அநேகமாக சுண்டல்,கூட்டுமுதலானவைகள்தான் இதில் அடிக்கடி செய்வோம். அதிலும் இனிப்புப் போட்ட சுண்டல்தான் வெகு இடங்களில். என் நாட்டுப்பெண் இந்த டாலை பூரி,ரொட்டிகளுக்காகவும்,சாதத்துடனும் ஒரு மாற்றத்திற்காகச் செய்வாள் . அப்படிச் செய்தது தான் இதுவும். பூரியும் இருக்கிறது. எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம்.
தட்டப்பயறு,காராமணி, பெரும்பயறு என்று பலவிதப் பெயர்களில் பல வகைகள் கிடைக்கிறது. இது ப்ளாக் ஐ பீன்ஸ் என்று சொல்லப்படும் வெள்ளைக் காராமணி. ஹிந்திியில் Bபோடி
காராமணி,கத்தரிக்காய்,பலாக்கொட்டை இவைகள் சேர்த்துச் செய்யும் கூட்டு ருசியானது. இதில் பலாக் கொட்டை இல்லை. இதுவும் தானாக வருகிறது.

நாம் இப்போது டால் செய்வதைப் பார்க்கலாம்.
வேண்டியவைகள். டால் செய்வதற்கு–
வெள்ளைக்காராமணி—1 1/2 கப்,
வெங்காயம்–திட்டமானசைஸ்–2 பூண்டு இதழ்–4. இஞ்சி அரை அங்குலத் துண்டு.
பழுத்த தக்காளி–2
பொடிக்க —மிளகு–1டீஸ்பூன், லவங்கம்–4, பட்டை சிறிதளவு, ஏலக்காய்–1
பொடிகள்–மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன், தனியாப்பொடி—-2 டீஸ்பூன், மஞ்சள்பொடி–1டீஸ்பூன்
தாளிக்க —எண்ணெய்,நெய் வகைக்கு ஒரு டேபிள்ஸ்பூன். சீரகம்—1டீஸ்பூன்
கொத்தமல்லி, எலுமிச்சை ஒரு பாதி. ருசிக்கு—உப்பு.
செய்முறை.
வெள்ளைக்காராமணியை தண்ணீரில் நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி இவைகளைச் சுத்தம் செய்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது அரைத்துக் கொள்ளவும்.
பொடிக்கக் கொடுத்தவைகளை முடிந்தவரை பொடிக்கவும்.
காராமணியின் தண்ணீரை நீக்கிவிட்டு மூன்று கப் தண்ணீரைச் சேர்த்து மஞ்சள் பொடியுடன் குக்கரில் நேரிடையாக மிதமான தீயினில் இரண்டு விஸில்வரும்வரையில் வைத்து இறக்கி விடவும்.
நன்றாக வெந்திருக்கும். ஒரு ஸ்பூன் வெந்த காராமணிையை எடுத்து மசித்துச்
சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் நெய்யைவைத்துக் காய்ந்ததும் சீரகத்தைப் பொரியவைத்து, அரைத்த வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும்போதுபொடிகளைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

டாலிற்கு வேண்டிய உப்பையும் சேர்க்கவும். தண்ணீர் வேண்டுமானால் ஓரிரண்டு கரண்டி இப்போதே சேர்த்துக் கொதிக்க விடவும் . வேகவைத்த காராமணிையைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். சற்று நெகிழ வைத்தால்தான் ஸரியாக இருக்கும்.
இந்தப்படம் எடுக்க மறந்துவிட்டது.
உப்புக்,காரம் ஸரிபார்த்து பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். எலுமிச்சை சாறு வேண்டியளவு சேர்க்கவும். போலில் வைக்கவும்.

டாலும், பூரியுமாகச் சாப்பிடுங்கள். வெள்ளைக்காராமணிடால் ரொட்டி,சாதம் யாவற்றினுடனும் ஸரிவருகிறது.

நன்றி வழக்கம்போல மருமகளுக்கு.
