பால்ப்போளி
கார்த்திகைப் பண்டிகை வருகிரதே ஏதாவது எழுதுவோம்
என்று தோன்றியது. ஸரி, பால்ப்போளி இன்று செய்து
ப்லாகிலும் போடலாமென்று நினைத்தேன். செய்து
முடித்து எழுதவும் ஆரம்பித்தாகி விட்டது.
நீங்களும் செய்து பாருங்களேன். வேண்டியஸாமான்களை
பார்ப்போமா.
வேண்டியவைகள்
மைதா–1கப்
மெல்லிய பேணிரவை—அரைகப்
பொரிப்பதற்கு வேண்டிய—எண்ணெய்
பால்—அரைலிட்டர்
சக்கரை—ஒன்றரைகப்
ஏலக்காய்–3
முந்திரிப் பருப்பு—10
பாதாம் பருப்பு—10
ஒரு சிட்டிகை—உப்பு
குங்குமப்பூ—துளி.
அரிசிமாவு—அரைகப். பூரி தோய்த்து இட
செய்முறை
பாதாம்,முந்திரி, பருப்புகளை ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்
பின்னும் கொஞ்சநேரம் ஓடவிட்டு ஒரே முறையில்
பொடியாக பொடித்துக் கொள்ளவும்.
ரவையையும், முடிந்தவரை தனியாகப் பொடித்துக்
கொள்ளவும்.
மைதா, பொடித்த ரவை இரண்டையும் கலந்து துளி உப்பு
சேர்த்து, தண்ணீரைச் சிறிது சிறிதாக விட்டு கலவையை
கெட்டியாகப் பிசையவும்.
நன்றாகப் பிசைந்த மாவை மூடி வைத்து அரைமணி நேரம் ஊர
விடவும்.
பாலை நன்றாக சற்று சுண்டக் காய்ச்சவும்.
ஊறிய மாவை அழுத்தித் திரட்டி சிறு உருண்டைகளாகப்
பிறித்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.
உருண்டைகளை சப்பாத்திக் கல்லில் அரிசிமாவு தோய்த்து
வட்டமான பூரிகளாக இட்டு நடுநடுவே போர்க்கினால் குத்தி
வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான சூட்டில்
கரகர பதத்தில் பூரிகளைப் பொறித்தெடுக்கவும்.
அகண்ட வாணலியிலோ, நான்ஸ்டிக் பாத்திரத்திலோ
சக்கரையைப் போட்டு சிறிது ஜலம் விட்டு , சக்கரை
கரையும்படிக் கிளறி , அடுப்பில் வைத்து ஸிரப்பாகச் செய்து
கொள்ளவும்.
குங்குமப்பூகரைசல்,பொடித்தபொடி இவைகளைக் கலந்து
காய்ச்சிய பாலையும் விட்டு சக்கரை ஸிரப்பில் கலந்து 2,3
நிமிஷங்கள் கொதிக்க வைத்து தீயை அணைத்து விடவும்.
பூரிகளை ஒன்றிரண்டாக பால்க்கலவையில் ஊறவைத்து,
இரண்டொரு நிமிஷங்களில்மடித்தமாதிரிஅரைவட்டஷேப்பில்
தாம்பாளத்தில் எடுத்து வைக்கவும்.
இப்படியே எல்லாப் பூரிகளையும், ஒன்றன்பின் ஒன்றாக ஊற
வைத்து எடுத்து பிறித்து அடுக்கவும்.
பால்க் கலவை ஆறாமலிருக்க தீயை ஸிம்மில் வைத்தால்
சூடான பாலில் பூரிகள் சீக்கிரம் ஊறும்.
தட்டில் அடுக்கின பூரிகள்தான் போளிகள்.
பால்க் கலவையை அடுக்கின போளிகள் மீது சிறிது விட்டால்
நன்றாக ஊறும்.
உடனேயும் சாப்பிடலாம்.
இரண்டொரு மணி நேரம் கழித்து ப்ளேட்டில் போளியும்,
மிகுந்திருந்தால் பால்க் கலவையையும் சேர்த்துக்
கொடுக்கலாம்.
விருப்பமான எஸன்ஸுகளும் பாலில் கலக்கலாம்.
பூரி மெல்லியதாக இடுவதற்கு அரிசி மாவில் பிரட்டி இடுவது
சுலபமாக இருக்கும்.
அதிக இனிப்பு வேண்டுமானால் சக்கரை, பால் அதிகரிக்கவும்.
பால்ப் போளி ரெடி.
திட்டமான அளவில் 15, 16, க்கு மேலே வரும்.
எலுமிச்சை சாதம் பலவிதம்.
அடிக்கடி கையில் டிபன் கொடுக்கும் போது ஒரே எலுமிச்சை
சாதம் என நினைக்காமல் சற்று தாளித்துக் கொட்டுவதை
மாற்றி, ருசியையும் சற்று மாற்றியதை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன். பிரமாதம் ஒன்றுமில்லை. ஆனாலும் யோசிக்க
முடியாத ஒரு ஸமயத்தில் படம் வேறு எடுத்திருந்தேன்.
நீங்களும்தான் பாருங்களேன்.
வேண்டியவைகள்.
நல்ல மெல்லியதான அரிசியில் ஒருகப் எடுத்து உதிர் உதிரான
சாதமாக வடித்து ஸ்டீல் தம்பாளத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழம் நல்ல சாறுள்ளதாக—–1
சிகப்புநிற காப்ஸிகம்—-1 . சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய்–2 . நீட்டுவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பட்டாணி பிஞ்சு—1. கைப்பிடி, பொடியாக நறுக்கவும்.
இஞ்சித் துண்டுகள்—பொடியாக நறுக்கியது 1, டீஸ்பூன்
சில கரிவேப்பிலை இலைகள்
நல்லெண்ணெய்–2 டேபிள்ஸ்பூன்
கடுகு–1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு—10
மஞ்சள்ப்பொடி–சிறிது
பெருங்காயப்பொடி—-சிறிது
ருசிக்கு உப்பு
வறுத்துப் பொடி செய்த வெந்தய, கடுகுப்பொடி 1/2டீஸ்பூன்
செய்முறை
நறுக்கிய கேப்ஸிகம், பிஞ்சு பட்டாணியை ஒரு ஸ்பூன் எண்ணெய்
விட்டுக் கலந்து 3 நிமிஷங்கள் மைக்ரோவேவில் வைத்து
எடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துகடுகைவெடிக்கவிட்டு
பருப்புகளைச் சிவக்க வறுத்து , இஞ்சி பச்சைமிளகாய்.
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மைக்ரோவேவ் செய்ததையும்
சேர்த்துப் பிரட்டி இரக்கவும். மஞ்சள்ப் பொடி சேர்க்கவும்.
ஆறினவுடன் எலுமிச்சை சாற்றையும், உப்பையும் சேர்த்துக்
கலந்து ஆறின சாதத்தில் கொட்டிக் கலக்கவும். பொடிகளைச்
சேர்த்துக் கலந்தால் சாதம் ரெடி.
மற்றும், பூண்டு, இஞ்சி விழுதை வதக்கி ரெட் கேப்ஸிகம்,கேரட்,
மட்டர், ப.மிளகாய் சேர்த்து, கடுகு,வேர்க்கடலை, கடலைப்பருப்பு
தாளித்துக்கொட்டி எலுமிச்சை சாற்றுடன் உப்பு சேர்த்து,
சாதத்துடன் கலந்து பூண்டு வாஸனை மேலோங்க
தயாரிக்கலாம். பொடிகள் அவசியம்.
பெறிய எலுமிச்சை வகையுடன், கிரீன் காப்ஸிகம்,கேரட்,
பேபிகார்ன், காரமில்லாத பெறியவகைமிளகாய், லேசாக
வேண்டியவகை மஸாலாவும் சேர்த்து. உப்பு காரம் கூட்டி
வகையாக முந்திரி வகைகளுடன் தயாரிக்கலாம்.
எல்லாம் ஒரே மாதிரி தோன்றினாலும் காய்களை மைக்ரோவேவ்
செய்து , ருசியை சிறிது மாற்றி செய்யலாம். ஒரே நாளில்
யாவற்றையும் செய்யப் போவதில்லை.கலர்க் கலராக
செய்யலாமே. பாதாம், பிஸ்தா, மற்றும் வேறுவித பருப்புகளும்
அலங்காரமாகச் சேர்க்கலாம்.
பெறிய எலுமிச்சை சாற்றில் செய்யும்போது திட்டமாக சாற்றைச்
சேர்க்கவும். சிறிய வகைப் பழத்தில் வாஸனைநன்றாகஇருக்கும்.
சுட்டரைத்தத் துவையல்
நல்ல பெறிய சைஸ் கத்தரிக்காயை
அனலில் சுட்டு துவையல்தயாரித்தால்சுவையாக இருக்கும்.
நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன்.
மிகவும் நன்றாகத் தோல்உறிக்க வந்தது.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும்
ஜெனிவா குறிப்புதான் இதுவும்,
கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான்.
வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா.
வேண்டியவைகள்–கத்தரிக்காய் துவையலுக்காக—
கத்தரிக்காய்—- பெறிய சைஸாக 2
வெங்காயம்—-திட்டமான அளவு 2
வெள்ளை எள்—–2 டீஸ்பூன்
புளி—–ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காயம்—சிறிது
கொத்தமல்லி, கறிவேப்பிலை வேண்டிய அளவு.கட்டாயமில்லை.
உப்பு–ருசிக்குத் தேவையான அளவு.
உளுத்தம் பருப்பு—-4 டீஸ்பூன்
கடுகு—1/4டீஸ்பூன்
வெந்தயம்1/4 டீஸ்பூனிற்கும் குறைவு
மிளகாய் வற்றல்—-4
எண்ணெய்—நல்லெண்ணெய். 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை—–அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாகஎண்ணெயைத் தடவவும்.
மைக்ரோவேவில், அதன் பாத்திரத்தில், காயை வைத்து,ஹை பவரில் 3 நிமிஷங்கள்சூடாக்கவும்.
திரும்பவும் காயைத் திருப்பி வைத்து4 நிமிஷங்கள்அதேபோல் சூடாக்கி எடுக்கவும்.
காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உறித்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உ.பருப்பு,மிளகாய்,
வெந்தயம்இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்
.எள்,சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய்,புளி ,வெந்தயம்
இவற்றை மிக்ஸியில்இட்டுஜலம் விடாமல் கெட்டியாக அறைக்கவும்.
நன்றாக மசிந்த பின் உளுத்தம்பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துஉப்பைச் சேர்க்கவும்.
கடுகு, பெருங்காயப் பொடியை, மிகுதி எண்ணெயில் தாளிதம் செய்யவும்.
நல்லெண்ணெய், நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாகஇருக்கும்.
வெங்காயத்திற்குப் பதில் தேங்காயும், புளிக்குப் பதில்,வதக்கிய தக்காளியும்சேர்த்து அரைக்கலாம்.
புளி சேர்த்த துவையலில் சிவக்க வறுத்த வெந்தயம் ருசியைக் கொடுக்கும்.
சுட்ட கத்தரிக் காயுடன் துளி,தேங்காய்,இஞ்சி, ப.மிளகாய் சேர்த்தரைத்து
தயிரில் கலந்து கடுகு தாளித்தால் பச்சடி தயார்.
கொத்ஸு தயாரிக்கலம்.
இப்படி சுட்ட கத்தரிக் காயில் அநேகவிதம் தயாரிக்கலாம்.
அரைக்கும் போதே கொத்தமல்லி கறிவேப்பிலையை மறக்க வேண்டாம்.
உப்பு காரம் , தேவைக்கேற்ப அதிகரிக்கலாம்.
பர்த்தா தயாரிப்பதும் இப்படி சுட்ட கத்தரிக்காயில்தான்.
கத்தரிக்காய் சேர்க்கும் பத்திய சமையலில் சுட்ட காயை மசித்து
துளி நெய்யில் கடுகு,சீரகம்,உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து,
உப்புபோட்டு கொடுப்பார்கள்
கிராமத்து ஐட்டம் இது. எதுவோ வேண்டியவர்கள் செய்து பாருங்கள்
.இரண்டாவதுபடம் மேலே வந்திருக்கிரது.கீழே 1, 3, 4.
மோர் மிளகாய்
பெயர் தான் மோர் மிளகாயே தவிர ஊறுவதென்னவோ தயிரில்தான்.
நல்ல ருசியான மிளகாய். எண்ணெயில் வறுத்து தயிர் சாதத்துடன்
சாப்பிட கட்டு சாப்பாட்டுகளுடன் எடுத்துப் போக என சுலபமானது.
ஜெனிவா வெய்யிலில் தயாரித்த என்னை ஏன் போடவில்லை என்று
கேட்பது போல மனதில் ஒரு எண்ணம். எழுதின குறிப்பைப் போட்டுவிட்டால்
போகிறது. விருப்பமானவர்களுக்கு உபயோகமாக இருக்குமே.
வேண்டியவைகள்.
பச்சை மிளகாய்—அதிக காரமில்லாத சிறிய சைஸ் ஒரு 20 , 25.
பெறிய சைஸாக இருந்தால் நம்பரைக் குறைத்துக் கொள்ளவும்.
நல்ல தயிர்—–ஒருகப். அதிகமும் விடலாம்.
உப்பு ருசிக்குத் தக்கபடி .2 டீஸ்பூன் வரை ஸரியாக இருக்கும்.
செய்முறை.
மிளகாய்களை அலம்பித் துடைத்துக் காயின் நுனியில் சற்றுக் கீரவும்.
காம்பையும் சிறிது வைத்து மிகுதியை நீக்கவும்.
கண்ணாடி, அல்லது ஜாடிக் கிண்ணத்தில் மிளகாயைப் போட்டு அது
மூழ்கும்படி தயிரைக் கடைந்து அத்துடன் சேர்க்கவும்.
உப்பு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.
2, 3நாட்கள் தயிரில் ஊறின பிறகு மிளகாயைச் சற்று பிழிந்தாற்போல
எடுத்து வெய்யிலில் காயவைக்கவேண்டும்.
ஒரு ட்ரேயிலோ, தட்டிலோ பாலிதீன் பேப்பரினால் கவர் செய்து
அதன் மேல் பரவலாக மிளகாயைப் பரப்பி நல்ல வெய்யிலில்
காயவைக்கலாம்.
தயிர்க் கலவையையும் கூடவே வெய்யிலில் வைக்கவும்.
வெய்யில் போன பிறகு மிளகாயைத் திரும்பவும் தயிருடனே
கலந்து வைக்கவும்.
ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படியே மிளகாயைக் காய வைக்கவும்.
வெய்யிலில் வைக்க வைக்க மிளகாயும், தயிரும் காய்ந்து விடும்.
கொஞ்சம்,தயிர், உப்பு காய்ந்து மிளகாயினின்றும் பொடியாக உதிரும்.
நன்றாகக் காய்ந்த மிளகாயை பாட்டிலில் போட்டு வைத்து, வேண்டும்
போது எண்ணெயில் சற்றுக் கருக வறுத்து உபயோகிக்கவும்.
தயிரில் ஊறின மிளகாய்கள் நல்ல மணத்துடன் உப்பும் உறைப்புமாக
ருசியாக இருக்கும். எண்ணெயில் வறுத்த பிறகுதான்.
ஊறும் போதே பச்சையாக தொட்டுக் கொள்ள உபயோகிப்பவர்களும்
உண்டு.
கெட்டியான புளிக்கரைசலிலும் மிளகாயை ஊறவைத்து இதே முறையில்
காயவைத்து தயாரிப்பதும் உண்டு.
தயிர் அதிகமாகவே சேர்க்கவும்.
மோர்க்குழம்பு, மோர்க்களி, இட்லிஉப்புமா இவைகளில் முக்கியமாக
இம்மிளகாய் உபயோகப்படும்.
வீட்டில் அதிகப்படியாக மிகுந்து போகும் 7, 8 மிளகாயில் கூட இதைச்
சிறிய அளவில் செய்து காயவைத்து உபயோகப் படுத்தலாம்.
மூன்றாவது படம் ஊறும் மிளகாய்.
கடைசி படம் நன்றாகக் காய்ந்த மோர் மிளகாய். இனி வறுக்க வேண்டியதுதான் பாக்கி.
கார மபின்.சோளம்.
மெல்லியதாக உடைத்த சோள ரவையில் செய்த இதைஎங்களுக்கு மிகவும்வேண்டியவர்கள்செய்துகொண்டுவந்திருந்தனர். மிகவும் ருசியாக இருந்ததால் செய் முறைகேட்டேன். மிகவும்அக்கறையாகஉங்களப்ளாகில்போடுங்கள்என்று
செய்முறைவிளக்கம்அளித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்
மெல்லியதான சோளரவை–1 கப்.polenta
மைதா—1 கப்
ருசிக்கு உப்பு
இவைகளைக் கலந்து கொள்ளவும்.
அடுத்து—எண்ணெய் –கால்கப்,
மோர் கடைந்தது–இரண்டே முக்கால் கப்
இவை இரண்டையும் மாவுடன் சேர்த்துக் கரைத்து
இட்டிலி மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து கொள்ளவும்.
மேலும் பதப்படுத்திய இனிப்பு சோள முத்துகள்—1 கப்
காப்ஸிகம் மெல்லியதாக நறுக்கிய துண்டுகள்–1 கப்
parmezan. பார்மிஜான் சீஸ்ப் பொடி–1 கப்
பச்சைமிளகாய்–2 சிறியதாக நறுக்கியது
இவைகளை மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
செய்முறை—அவனைச் சூடாக்கவும்
கலக்கிய மாவை சிறிய மபின் கப்புகளில் விட்டு
ட்ரேயில் அடுக்கி வைத்து
90 டிகிரி உஷ்ணத்தில் அவனில் வைத்து 20 நிமிஷங்கள்
பேக் செய்து எடுக்கவும்.
அழகான கலரில் ருசியான கார மபின்கள் ரெடி.
ருசித்துப் பாருங்கள். நன்றி ஸ்டெல்லா.
தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புமிக்க வலைப்பதிவு உலகத்தின் அனைவருக்கும், மற்றும் யாவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். இனிமையாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். அன்புடன் சொல்கிறேன் காமாட்சி.வணக்கம்.
காராசேவு
நீண்ட நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்குள்ளாவது
ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்புடன்
வந்திருக்கிறேன். சுலபமாக எழுதவும், செய்யவும்
காராசேவு ஞாபகத்திற்கு வந்ததால் உடனே செய்தும்,
எழுதியும் போட்டிருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்.
கடலைமாவு—2 கப்
அரிசிமாவு—அரைகப்
சமையல் ஸோடா–கால் டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
உறித்த பூண்டு இதழ்கள்–3
லவங்கம்–2
ஏலக்காய்–1
கசகசா—2டீஸ்பூன்
வெண்ணெய்–1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு–உப்பு
பொறித்தெடுக்க—தேவையான எண்ணெய்
செய்முறை—-மாவுகளைச் சேர்த்துச் சலிக்கவும்.
ஒரு தாம்பாளத்தில் உப்பு, ஸோடாஉப்பு, வெண்ணெய்
சேர்த்துத் தேய்த்துக் கலக்கவும்.
கசகசாவை ஊற வைத்து வடித்து. நறுக்கிய பூண்டுத்
துண்டுகள், ஏலம், லவங்கம்,மிளகாய்ப்பொடி சேர்த்து
சிறிது ஜலம் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதைக் கரைத்து , மாவுடன் சேர்த்து
கெட்டியாக முறுக்கு பிழியும் பதத்தில் மாவைப்
பிசைந்து கொள்ளவும்.
தேன்குழல் பிழியும் அச்சில் பெரிய கண் கொண்ட
வில்லையைப் போட்டு மாவை நிரப்பிப் பிழிய வேண்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை
வட்டமான வடிவத்தில் பிழியவும்.
நிதான தீயில், ஓசை அடங்கும்வரை வைத்து
திருப்பிப்போட்டு எடுக்கவும்.
ஆறினவுடன் , துண்டங்களாக ஒடித்துக் கொள்ளவும்.
காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
சேவு தேய்க்கும் உபகரணம் இல்லாததால் இப்படிச்
செய்வதே வழக்கமாகி விட்டது. நன்றாகவும் சுலபமாகவும்
இருக்கிறது. வேறு என்ன வேண்டும்.
மாவை நன்றாகப் பிசைவது அவசியம்.
வாழ்த்துகள்
சொல்லுகிறேன் வலைத்தள அபிமான ஸகோதர
அபிமானிகள், ஸகோதரிகள், மற்றும் யாவருக்கும்
ஸரஸ்வதி பூஜை, விஜயதசமி நல் வாழ்த்துக்களை
அன்புடன்தெறிவித்துக் கொள்கிறேன்.
ஆசிகள் சொல்லுகிறேன் காமாட்சி.
சொல்கிறேன்.
அன்புள்ள என்னுடைய ப்ளாகைப் பார்த்துத்
தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு வணக்கம்.
வீட்டில் பெரியவருக்கு உடல்நிலை ஸரியில்லாத
காரணத்தால் எனக்கு எழுதமுடியவில்லை.
நிலைமை ஸரியாகி தொடர்ந்து எழுத கடவுளைப்
ப்ரார்த்திக்கிறேன். அன்புடன் காமாட்சி சொல்லுகிறேன்.
கொழுக்கட்டை .
சிறிய அளவில் கொழுக்கட்டை தயாரிப்பதற்கு வேண்டியவைகளைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்
பூரணம் தயாரிக்க –தேங்காய்த்துருவல்–6டேபிள்ஸ்பூன்
வெல்லப்பொடி—–5 டேபிள்ஸ்பூன்.
ஏலக்காய்ப்பொடி—-சிறிது
மேல் மாவிற்கு—பச்சரிசி மாவு–அரைகப்
நல்லெண்ணெய்—-1 டீஸ்பூன்
உப்பு—-ஒரு சிட்டிகை .
செய்முறை
அரிசி மாவு களைந்து உலர்த்தி அரைத்த மாவானால் மிகவும்
நல்லது.
நான்ஸ்டிக் பேனில் தேங்காய்த் துருவலுடன் வெல்லப்
பொடியைச் சேர்த்து, துளி ஜலம் தெளித்து நிதான தீயில்
வைத்துக் கிளறவும்.
-கையில் ஒட்டாது சேர்ந்து வரும் போது இறக்கி ஏலப்பொடி
சேர்த்துக் கலக்கவும்.
அடிகனமான நான்ஸ்டிக் பேனில் ஒரு கப் தண்ணீரை
உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தீயைக் குறைத்து அரிசி மாவைச் சேர்த்துக் கிளறவும்
.பந்துபோல் மாவு வெந்து சேர்ந்து வரும்போது தீயை
அணைத்துவிட்டு, தட்டினால் மூடி வைக்கவும்.
மாவு சிறிது ஆறியதும் எடுத்து கையில் சிறிது எண்ணெயைத்
தடவிக் கொண்டு, தாம்பாளத்தில் நன்றாகத் தேய்த்துப்
பிசைந்து ஒரு ஈரத்துணியினில்சுற்றி மூடி வைக்கவும்.
மாவைச் சிறிய உருண்டைகளாகச் செய்து சிறிய சிறிய
கிண்ணங்கள் போல சொப்புகளாகச் செய்து , அதில்
சின்ன அளவுபூரணத்தை வைத்து மடக்கி , விளிம்புகளை
அழுத்தி மூடவும்.
கையில் எண்ணெய் தொட்டுக்கொண்டு சொப்புகளைச்
செய்யவும். உடனுக்குடன் பூரணத்தை வைத்து, வேண்டிய
ஷேப்புகளில் மூடவும்.
செய்த கொழுக்கட்டைகளை நல்ல நீராவியில் 6,7,
நிமிஷங்கள் ஸ்டீம் செய்து எடுக்கவும். இட்லி வேக வைக்கும்
முறைதான்.
கொழுக்கட்டைகள் தயார்.
நான் கடையில் வாங்கிய மாவில் செய்தேன்.
.கொழுக்கட்டைகள்.























