வேப்பிலைக் கட்டி.
பெயரைப் பார்த்து இது ஒரு கசப்பான பொருளாக இருக்கும்
என்றுமுடிவுக்கு வந்து விடவேண்டாம். வாய்க்கு,ருசியாகவும்,
ஆரோக்கியமுமான , தயிர் சாதத்துடன் ஊறுகாய் ஸ்தானத்தில்
உபயோகப்படுத்தப்படும் ஒரு எளிய தயாரிப்பு இது. பெரிய,
பெரிய, சாப்பாட்டுப் பந்திகளில்கூட வேப்பிலைக் கட்டி
விசாரிப்பு அலாதியானது. துளி தொட்டுண்டு பாருங்கோ இன்னும்
இன்னும் கொஞ்சம் சாப்பிடணும்னு தோணும், சொல்லிக்
கொண்டே போடுவார்கள். எங்கம்மாவும் இப்படி சொல்லி, பிறருக்கு
போடுவது அடிக்கடி ஞாபகம் வரும்போது எழுத வேண்டும்
என்று நினைப்பேன். இலைக்கு எங்கு போவது?
சமய வாய்ப்பாக சென்ற வாரம் 5, 6 நாட்களுக்கு சென்னையில்
என் பெண் வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த செடி அவர்களின் தோட்டத்தின் ஒரு மூலையில் மரமாக
வளர்ந்து இருந்தது. நாரத்தையா, சாத்துக்குடியா என்ற யோசனை
தானாக வளர்ந்த செடியின் மீது தீர்ந்து, நாரத்தை என்று உறுதி
யானது. எனக்கு மிகவும் ஸந்தோஷம். ப்ளாகில் போட ஒரு
பழைய உருப்படி, தயாராகிவிட்டது வேப்பிலைக்கட்டி.
அன்றைக்கென்று என்னைப் பார்த்துப் போக வந்தவர்கள்
சாப்பிடும்போது ரஸித்து சாப்பிட்டுவிட்டு மிகுதியிருந்த
வேப்பிலைக்கட்டியை எடுத்தும் போனார்கள். முடிந்தவர்கள்,
கிடைக்கும் போது செய்யுங்கள். அல்லது இப்படியும் ஒன்று
செய்யலாம் என்பதை மனதிற் கொள்ளுங்கள். பாலக்காட்டு
பந்தி உபசரிப்பிலும் முதன்மையானது இது. ரெடிமேடாக
கிடைக்கவும் செய்கிறது. அம்பிகாஸ்டோர்களில்.
வேண்டியவைகள்.
நாரத்தை, அல்லது எலுமிச்சை இலைகள்—–அடைத்தமாதிரி 2 கப்
கறிவேப்பிலை—அரைகப்
மிளகாய் வற்றல்—-3
ஓமம், அல்லதுசீரகம் 2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி— அரை டீஸ்பூன்
அழுத்தமாக உருட்டிய புளி—-ஒரு நெல்லிக்காயளவு
ருசிக்கு—-உப்பு
கடுகு, வெந்தயம் வகைக்கு கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய்—–சிறிது
செய்முறை.
நாரத்தை இலைகளைத் தண்ணீரில் அலசித் துடைத்து நல்ல
துணியில் போட்டு காற்றாடவிட்டு ஈரத்தைப் போக்கவும்.
வெற்றிலையை மடித்து காம்பிலிருந்து நுணிவரை நரம்பை
எடுப்பதுபோல் இந்த இலைகளிலும் அதே முறையில் இலைகளை
மடித்து, நடு நரம்பை நீக்கவும்.கறிவேப்பிலை அப்படியே
சேர்க்கலாம்.
வெறும் வாணலியில் கடுகு,வெந்தயத்தை சிவக்கவும்,ஓமத்தை
வாஸனை வரும்படியும் வறுத்து ஆறவிடவும்.
மிளகாயைத் துளி எண்ணெயில் வறுத்து , உப்பு,பெருங்காயம்
சேர்த்து யாவற்றையும் மிக்ஸியிலிட்டு பொடிக்கவும்.
பொடித்தவுடன் இந்த இலைகள், புளி யாவற்றையும் சேர்த்து
மிக்ஸியை ஓடவிடவும். ஒரு முறை கிளறிவிட்டு ஒன்று சேர
பொடிக்கவும். ஜலம் அறவே சேர்க்க வேண்டாம்.
சற்று கெட்டியாக மசிந்ததை எடுத்து சிறிய வில்லைகளாகவோ
உருண்டையாகவோ செய்து ஊறுகாயிற்கு பதில் சிறிது சிறிதாக
உபயோகிக்கலாம்.
சிறிய பாட்டில்களில் போட்டு மூடிவைத்து உபயோகிக்கவும்.
நாரத்தை, எலுமிச்சை,இலைகள் பித்தத்தை நீக்கி நாவிற்கு
ருசியைக் கொடுக்கும்.
நம்முடைய சித்திரை தமிழ் வருஷப் பிறப்பன்று ஒரேஒரு
வேப்பந் துளிரை இதனுடன் சேர்த்து, எமனுக்கு வேம்பாக
இருக்க வேண்டுமென ஆசீர்வதித்து சாப்பிடும்போது துளி
போடும் வழக்கத்தையும் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்.
அதனால்தான் இது வேப்பிலைக் கட்டி என சொல்லப் படுகிறது
போலும். குட்டி குறிப்பு. விரிந்த எண்ணங்கள்.நான் சொல்வது
ஸரிதானே?
நாள்பட இருந்தால் ஈரம் உலர்ந்து சற்று பொடியாக உதிரும்.
நான் இதை பொடி வகைகளில்தான் சேர்த்திருக்கிறேன்.
மணத்தக்காளிக்கீரைக் கூட்டு. எளியமுறை.
மிகவும் சுலபமான மருத்துவ குணமுள்ள எளிய கூட்டு இது.
வேண்டியவைகள்
மணத்தக்காளிக் கீரை—-2கட்டு
தேங்காய்த்துருவல்—அரைகப்
பயத்தம்பருப்பு—–அரைகப்
மிளகாய்—2
சீரகம்–1 டீஸ்பூன்
உளுத்தம்பருபபு—2 டீஸ்பூன்
பூண்டு.உறித்த இதழ்கள்—3
நெய்—2 டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
துளி மஞ்சள் பொடி
சிறிது, கடுகு, பெருங்காயம்.
செய்முறை.
கீரையின் இலைகளை ஆய்ந்து நறுக்கி த் தண்ணீரில்
நன்றாக அலசி வடிக்கட்டவும்.
வெறும் வாணலியில் பயத்தம் பருப்பை சற்று சிவக்க வாஸனை
வரும்படியாக வறுத்துக் கொள்ளவும்.
துளி நெய்யில் மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு
பூண்டையும் சேர்த்து இறக்கவும்.
ஆறினவுடன் தேங்காய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக
அறைத்துக் கொள்ளவும்.
வறுத்த பருப்பை நன்றாகக் களைந்து ஒண்ணரைகப் ஜலமும்,
கீரையும் , மஞ்சள் சேர்த்து ப்ரஷர் குக்கரில் 2 விஸில் விட்டு
நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த கீரை, பருப்புடன் அரைத்த கலவை, வேண்டிய
உப்பு சேர்த்துக் கிளறி ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
ஒரு தக்காளியையும் வதக்கி சேர்த்து அரைக்கலாம்.
வாய்ப்புண், வயிற்றுப் புண் முதலானவைகளை ஆற்றும்
குணமுள்ளது இக்கீரை. காய்களையும்.பச்சையாக சமைத்தும்
வற்றலாகச் செய்தும் உபயோகப் படுத்துதல் இன்றும் நடை
முறையில் உள்ளது. பத்தியச் சாப்பாடுகளில் மணத்தக்காளி
வற்றல் முதன்மையானது.
குழம்புக் கருவடாம்
நல்ல வெய்யில் காயும் போது இந்தமாதிரி வடாங்களைத்
தயாரித்து வைத்துக் கொள்வதுண்டு.
பருப்பு வகைகளில் தயாரிக்கும், இவ் வடாங்கள் கூட்டு,குழம்பு,
டால்கள், வத்தக்குழம்புகள், சாம்பார் என எல்லாவற்றுடனும்
எண்ணெயில் வறுத்துப் போட்டு செய்தால் மாறுதலுக்கு ஒரு
ருசி கிடைக்கும். இப்போதுதான் யாவுமே ரெடிமேடாக
.கிடைக்கிறது. அது வேறு விஷயம்.
இன்ட்ரஸ்ட் இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாமே.
நான் ப்ளாகில் போடுவதற்காக இந்த பாம்பே வெய்யிலையும்
சற்று உபயோகிக்கலாமே என்று செய்தேன். கிழக்கு மேற்காக
அமைந்த டூப்ளே அபார்ட்மென்ட் இது. காலையில்
பக்கவாட்டு வெய்யிலும் 2மணிக்குமேலே மேற்கத்திய
வெயிலும் உதவி செய்தது. துணியாலே மூடிமூடி
காயவைத்து ரொம்பவே அக்கரையாக செய்திருக்கிரேன்.
வேண்டிய சாமான்கள்
உளுத்தம் பருப்பு—-1 கப்
மிளகாய் வற்றல்—-4
வாஸனைக்கு —ஒரு டீஸ்பூன் மிளகு சீரகம்
ஒருகப்—-துருவிய வெள்ளை பூசணிக்காய்
திட்டமாக உப்பு.
செய்முறை—-உளுத்தம் பருப்பை நன்றாகக் களைந்து
தண்ணீரில் 4மணி நேரம் ஊரவைத்து வடித்து மிளகாய்
சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அறைத்துக்
கொள்ளவும்.
பூசணித் துருவலை ஒட்டப் பிழிந்து சேர்க்கவும்.
உப்பு, மிளகு சீரகப்பொடியையும் கலக்கவும்.
அகலமான ட்ரேயின் மீது பாலிதீன் பேப்பர்களைச் சுற்றி
வடாம் இட ட்ரே தயாரிக்கவும்.
ட்ரேயைத்தண்ணீரால் துடைத்துவிட்டு கையை ஈரமாக்கிக்
கொண்டு அறைத்த மாவை சிறு பகோடாக்கள் மாதிரி
ஒன்றிற்கொன்று இடம் விட்டு உருட்டிவைத்து ட்ரேயை
வெய்யிலில் வைத்து காயவிடவும்.
நல்ல வெய்யிலில் காயவைத்து மறுநாள் திருப்பிப் போட்டு
கருவடாங்களைக் காயவைக்கவும்.
ஈரப்பதம் போய் நன்றாக மொறுமொறு என்று ஆகும் அளவிற்கு
வெய்யிலில் காயவைத்து காற்றுப் புகாத பாட்டில்களில்
சேமித்து வைக்கவும்.
வேண்டிய போது வறுத்து கூட்டு, குழம்புகளில் சேர்க்கலாம்.
நாட்டுப்புரத்து குறிப்புகளாக நினைத்துக் கொள்ளுங்கள்.
நான் வெங்காயத்தை சேர்த்து அரைத்து செய்திருக்கிறேன்
வெந்தயக்கீரை சேர்த்தும் தயாரிக்கலாம்.
தனி பயத்தம் பருப்பிலும், காராமணி, தட்டைப் பயறு
சேர்த்தரைத்தும் கருவடாம் இதேமுறையில் தயாரிக்கலாம்.
தயாரிப்பது பெரிய காரியமில்லை. வெய்யிலில்
காயவைத்தெடுப்பதுதான் பெரிய காரியம்.
வட இந்தியர்கள் தயாரிப்பில் கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,
லவங்கம், என யாவும் முழுதாகவே சேர்த்தும் காரமாக
தயாரிக்கிரார்கள். தயாரிக்க முடிகிறதோ இல்லையோ எப்படி
எதில் தயாரிக்கிறார்கள் என்பதாவது அறியமுடிகிறது
அல்லவா.படம் ஒரு மாதிரிக்குதான்.
நெல்லிக்காய் ஊறுகாய்
இதற்கு நல்ல நெல்லிக்காய் அதுதான் தோப்பு நெல்லிக்காய்
என்றும் சொல்வார்களே அந்த வகைதான் தேவை.
அறி நெல்லிக்காய் என்றும் மற்றொரு வகை உண்டு. அது
ஜூஸ்,சட்னி , கலந்த சாதங்கள் செய்ய பயன்படும்.
நான் பெறியவகை நெல்லிக்காயில் ஊறுகாய் தயாரித்ததை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
வேண்டியவைகள்
நெல்லிக்காய்—அரைகிலோ
நல்லெண்ணெய்—அரைகப்
மிளகாய்ப்பொடி—-5 டேபிள் ஸ்பூன்
வறுத்துப் பொடிக்கசாமான்கள்
1 டீஸ்பூன் வெந்தயம்
2 டீஸ்பூன் சீரகம்
3 டீஸ்பூன்—கடுகு
மற்றும் மஞ்சள்பொடி—-2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி–2 டீஸ்பூன்
உப்பு.—4 டேபிள்ஸ்பூன்
நல்ல வினிகர்—6 டேபிள்ஸ்பூன்
செய்முறை.——வெறும் வாணலியைச்சூடாக்கிவெந்தயத்தைச்
சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
கடுகு, சீரகத்தை வாஸனை வறும்படி வறுக்கவும்.
ஆறினபின் மிக்ஸியிலிட்டுப் பொடித்துக் கொள்ளவும்.
அலம்பித் துடைத்த நெல்லிக்காய்களை, வாணலியில் சிறிது
2 ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து , அதில் போட்டு லேசாக
வதக்கி இறக்கவும்.
காய்கள் ஆறியவுடன், பகுதி,பகுதியாக சிறுகத்தியின் உதவி
யுடன் இதழ்களாகப் பிறித்துக் கொட்டைகளை நீக்கவும்.
உப்பை, அரை கப் ஜலம் விட்டுக் காய்ச்சி சற்று சுண்டியதும்
இறக்கவும்..
அகன்ற ஜாடிக் கிண்ணத்தில் மிளகாய்ப்பொடி,வெந்தய,
கடுகுப் பொடிகள், சீரக,பெருங்காயப்பொடிகள், இவைகளுடன்,
நெல்லிக்காய்த் தளர்களைச் சேர்த்து மிகுதி எண்ணெயைக்
காய்ச்சி விடவும்.
உப்பு ஜலம், வினிகர் இவைகளையும் சேர்த்துக் கிளறவும்.
உப்பு ஸரி பார்த்துக் கிளறி சுத்தமான பாட்டிலில் எடுத்து
வைத்து, 2, 3 நாட்கள் ஊற விடவும்.
தினமும் சுத்தமான ஈரமில்லாத கரண்டியினால் கிளறவும்.
பிறகு பாட்டிலின் வாயில் மெல்லிய துணியினால் கட்டி
மூடி , நல்ல வெய்யிலில் 4, 5 நாட்கள் வைத்து எடுக்கவும்.
உப்பும், எண்ணெயும் சற்று அதிகமிருந்தால் ஊறுகாய்
கெட்டுப் போகாது.
காற்று புகாத அழுத்தமான மூடியினால் பாட்டிலை மூடி
உபயோகிக்கவும்.
சாதாரணமாக நெல்லிக்காய் சீக்கிரம் கெட்டுப் போகக்
கூடிய வஸ்து. ஆதலால் பிரிஜ்ஜில் வைத்து வேண்டிய
அளவு வெளியில் எடுத்து உபயோகித்தால் மிகவும் நல்லது.
நல்ல ருசியான ஊறுகாய்.உ ப்பு, காரம், எண்ணெய் ருசிக்குத்
தக்கபடி அதிகமாக்கலாம்.
பாலக் பன்னீர்
வேண்டியவைகள்
பாலக்கீரை—250 கிராம் வரை
அரைக்க சாமான்கள்
வெங்காயம்—-3
பூண்டு—3 இதழ்கள்
இஞ்சி—சிறியதுண்டு
நல்ல சைசில் தக்காளி—-1
பொடிகள்
மிளகாய்ப்பொடி—அரை டீஸ்பூன்
தனியாப்பொடி—-அரை டீஸ்பூன்
ஜீராப்பொடி—-அரைடீஸ்பூன்
கரம் மஸாலா–கால்டீஸ்பூன்
மஞ்சள் பொடி—-சிறிது.
ருசிக்கு உப்பு
பன்னீர்—200 கிராம். திட்டமான துண்டுகளாக செய்து
கொள்ளவும்.
தாளிக்க, பன்னீர் பொரிக்க வேண்டிய எண்ணெய்
செய்முறை. கீரையைத் தண்ணீரில் அலசவும்.
கீரையை ஆய்ந்து, கொதிக்கும் தண்ணீரில் சற்று வேகவைத்து
தண்ணீரை வடிக்கட்டி தனியாக வைக்கவும். வெந்த
கீரையைக் குளிர்ந்த நீரைவிட்டு அலசி வைக்கவும்.
அரைக்கக் கொடுத்தவைகளை ஜலம் சேர்க்காமல்
மிக்ஸியிலிட்டு அரைத்தெடுக்கவும்.
கீரையையும் தனியாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான
சூட்டில், துண்டுகள் செய்யப் பட்ட பன்னீரை இலேசாக
வறுத்தெடுக்கவும். வேறொரு நான் ஸ்டிக் வாணலியில்ல்
சிறிது நெய்யும் எண்ணெயும் கலந்து சூடாக்கி அரைத்த
வெங்காய, தக்காளி விழுதைச் சேர்த்து நிதான தீயில்
வதக்கவும். நன்றாக வதங்கி சுருண்டு
எண்ணெய் பிரிந்து வரும் போது பொடிகளைச் சேர்த்துப்
பிரட்டி, அரைத்த பாலக் விழுதையும் சேர்த்துக் கிளறவும்.
வேண்டிய அளவிற்கு, கீரையை வேக வைத்து வடிக்கட்டிய
நீரைச் சேர்த்து கொதிக்க வைத்து பொரித்த பன்னீரைச்
சேர்த்து திட்டமாக உப்பைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு
இறக்கவும்.
கீரை நிறம் மாறாமலிருக்க உப்பைக் கடைசியில்
சேர்க்கிறோம்.
பன்னீரை வறுக்காமல் சேர்ப்பவர்களும் உண்டு.
எல்லாவற்றுடனும் சேர்த்துச் சாப்பிட பாலக் பன்னீர்
தயார்.
.கீரையை நறுக்கி மைக்ரோவேவில், 5, 6 நிமிஷங்கள்
வேகவைத்து , பிறகு அரைத்துச் சேர்த்துச் செய்வதும்
உண்டு
இந்த முறையிலும் கீரை பச்சென்று நிறம் மாராமல்
இருக்கும். பன்னீர் கூட்டிக் குரைக்கலாம்.
வெண்டைக்காய் ஸப்ஜி
நல்ல பிஞ்சு வெண்டைக்காயில் ஸப்ஜி செய்தால் ரொட்டிக்கு
மிகவும் ஏற்றதாக இருக்கும். வேண்டியவைகள்.
வெண்டைக்காய்—-கால்கிலோ
பெரிய வெங்காயம்—–2
பழுத்த தக்காளி –1
எண்ணெய்—2அல்லது 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி–சிறிது
மிளகாய்ப் பொடி—-அரை டீஸ்பூன்
உப்பு—ருசிக்கு
கடுகு—அரைடீஸ்பூன்
விருப்பப் பட்டால்—கரம் மஸாலா சிறிது
செய்முறை—–வெண்டைக்காயைத் தண்ணீரில் அலம்பித்
துடைத்து சுத்தமான துணியில் பரத்தி ஈரத்தைப் போக்கவும்.
காயைச் சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியையும் தனித்தனியாக பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய காயுடன் ஒருஸ்பூன் எண்ணெய் விட்டுக் கலந்து
மைக்ரோவேவ் பாத்திரத்திலிட்டு 4 நிமிஷம் ஹை பவரில்
மைக்ரோவேவ் செய்து எடுக்கவும்.
வாணலியோ,நான்ஸ்டிக் பேனோ எண்ணெயைக்
காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு வெங்காயத்தைச்
சேர்த்து வதக்கி தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
சுருள வதக்கி, உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி சேர்த்துக்
கிளறி , வெண்டைக்காயையும் சேர்த்து , ஸிம்மில் வைத்து
நன்றாக வதக்கவும்.
காய் வதங்கியதும் இறக்கி உபயோகிக்கவும்.
ரொட்டியுடன் சாப்பிட ஸப்ஜி தயார்.
வெண்டைக்காயுடன் துளி ஆம்சூரோ.அல்லது துளிபுளி
பேஸ்ட்டோ கலந்து மைக்ரோவேவ் செய்து தக்காளி
வெங்காயம் போடாமல் கடுகை தாளித்து எண்ணெயில்
வதக்கி உப்பு காரம் போட்டு உபயோகிக்கலாம்.
காயை 2 அங்குல நீளத்திற்கு மிகவும் மெல்லியதாக நறுக்கி
உப்பு காரம் பிசறி எண்ணெயில் நேரடியாக வறுவலாகவும்
வறுத்தெடுக்கலாம்.
இப்போது நான் செய்தது ஸப்ஜிதான். இப்படியே வீட்டில்
செய்தது போட்டிருக்கிறேன்.
புளி, ஆம்சூரெல்லாம் உபயோகிப்பது காயின்
கொழகொழப்பை நீக்குவதற்கே.
கரிப்பொடி தூவியும் செய்யலாம்.
தோசையும் சுலப சட்னியும்.
இதுவும் வழக்கமான தோசைதான். நான் எந்த விகிதத்தில் அரிசி,
பருப்பு, கலந்து செய்கிறேனென்பதுதான் சொல்ல வந்த விஷயம்
என்று கூடத் தோன்றும். கரகரவென்று தோசை குழந்தைகளுக்குப்
பிடிக்கிரது. அதனால் நான் எப்படிச் செய்கிறேனென்று சொல்லுகிறேன்.
வேண்டியவைகள்.
இட்டிலிக்கு உபயோகிக்கும் புழுங்கலரிசி—3 கப்
பச்சரிசி—–1 கப்
துவரம்பருப்பு—-கால்கப்
வெந்தயம்—5 டீஸ்பூன்
நல்ல விழுது காணும் உளுத்தம் பருப்பு—-1 கப்
தேவைக்கு—-உப்பு
செய்முறை
அரிசிவகைகள், துவரம்பருப்பு, வெந்தயம் இவைகளைத் தண்ணீர்-
-விட்டுக் களைந்து சுத்தம் செய்து நல்ல ஜலம் விட்டு ஊற வைக்கவும்.
இதே போல் உளுத்தம் பருப்பையும் நன்றாகக் களைந்துத் தனியாக
ஜலம் விட்டு ஊறவைக்கவும்.
அரிசி நன்றாக ஊறினால் சீக்கிரம் அரைபடும்.
குறைந்த பக்ஷம் 5, 6 மணிநேரம் ஊறினால் நல்லது.
பருப்பு 2, 3 மணி நேரம் ஊறினால் கூட போதும்.
கிரைண்டரை நன்றாகச் சுத்தம் செய்து அலம்பி முதலில்
உளுத்தம் பருப்பைப் போட்டு திட்டமாக ஜலம் தெளித்து நன்றாக
அரைக்கவும். பஞ்சுப் பொதி மாதிரி, நன்றாகக் குமிழ்கள் வரும்படி
அரைக்கவும். நல்ல கிரைண்டரானால் 40 நிமிஷமாவது ஆகும்.
உளுந்து மாவைப் பூரவும் எடுத்துவிட்டு, அரிசியைச் சிறிது,சிறிதாகக்
கிரைண்டரில் போட்டு தண்ணீர் திட்டமாகச் சேர்த்து நன்றாக மசிய
வெண்ணெய் போல அறைக்கவும். இட்டிலி மாவைப்போல அல்ல.
நைஸாக அறைக்கவும். இப்போது வேண்டிய உப்பையும் சேர்க்கவும்.
2, 3 சுற்றுகள் சுற்றி முதலில் அறைத்து வைத்த உளுந்து விழுதையும்
சேர்த்து அறைக்கவும்.
இரண்டு மூன்று நிமிஷத்தில் மாவுக்கலவை ஒன்று சேர்ந்துவிடும்.
நல்ல சுத்தமான பாத்திரத்தில் மாவை எடுக்கவும்.சிலவுக்குத் தக்கபடி மாவைக் கொஞ்சம் வெளியில் வைத்தும்,
மிகுதியை ப்ரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
மாவு சற்று பொங்கி வருமளவிற்கு முதல்உபயோக மாவு வெளியில்
இருக்கலாம் . மிகுதி பிரிஜ்ஜில் இருந்தால்கூட மாவை 2, 3, மணி நேரம்,
தோசை வார்க்குமுன்னர் வெளியே எடுத்து வைத்தால் கூட போதும்.
மாவு பதமாக இருக்கும்.
தோசை வார்ப்பதற்கு நான் ஸ்டிக் தோசைக் கல்தான் சுலபமாகவுள்ளது.
கல்லில் எண்ணெய் தடவ, உருளைக் கிழங்கை பாதியாக நறுக்கி
எண்ணெயில் தோய்த்து உபயோகிக்கலாம்.
மாவைச் சற்று கெட்டியாகவே கறைத்து வைத்துக் கொள்ளவும்.
கல்லில் எண்ணெய் தடவி சூடாக்கவும்.
தீயை ஸிம்மில் வைத்து ஒரு கரண்டி மாவைக் கல்லில் விட்டு அடி-
-தட்டையான கரண்டியினால் மாவைச் சுழற்றி தோசையாகப்
பரப்பவும்.
தீயை அதிகமாக்கி, தோசையைச் சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்
விடவும்.
தோசையின் மேல் பல பொத்தல்களுடன் ஈரப்பதம் குறையும்.
பதமாக தோசையைத் திருப்பிப் போட்டு தீயைக் குறைக்கவும்.
அடிபாக தோசை சிவக்க ஆரம்பித்தவுடன், திருப்பிப் போட்டு
மடித்து எடுக்கவும்.
கரகரஎன்று தோசை நன்றாக வரும்.
எண்ணெய் தடவி தோசையைப்பரப்பி, தீயை அதிகமாக்கி சுற்றிலும்
எண்ணெய்விட்டு , மேலே சொன்னபடிதான் மிகுதியும்.
இதுவே ஹாட் ப்ளேட்டானால் தீயைக் குறைத்தால் கூட ஒரு
தோசையின்இடைவெளியில் மற்றொன்று வார்க்குமுன் சிறிது
தண்ணீரைத் தெளித்து கல்லைத் துடைத்து வார்த்தால் தோசை
ஸரியாக எடுபடும்.
ஸரியாக புரிந்து கொண்டால் தோசை பட்டு பட்டாக வரும்.
தோசைத் திருப்பியை நுணியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக
வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
பசங்களுக்கு சட்டென்று அரைத்துப் போட ஒரு சட்னியும் கூட இதோ.
1வெங்காயம், ஒரு தக்காளிப்பழம், 1 பச்சைமிளகாய் நறுக்கிக்கொண்டு
எண்ணெயில் வதக்கவும்.
3டேபிள்ஸ்பூன் வேர்க்கடலையையும் சிவக்க வறுத்து கூட வைத்து
உப்பு சேர்த்து அரைத்தால் திடீர் சட்னியும் தயார். வேறு என்ன சேர்க்க
நினைக்கிறீர்களோ அதையும் சேர்த்து அரையுங்கள்.
வீட்டில் தோசை மாவு இருந்தால் துணைக்கு ஒருவர் இருப்பது போல
என்பது வசனம். வசனம் ஸரியாகத்தான் இருக்கும். இல்லையா
உருளைக்கிழங்கு கறி வைத்த மஸால் தோசை செய்யலாம்.
லேசாக சீஸ் தூவி தோசையை மடிக்கலாம்.
டொமேடோ, வெங்காயம் வதக்கி வைத்து தோசையை மடிக்கலாம்.
தோசையை மடக்கும் போது சிறிது வெண்ணெயைத் தடவி துப்பா-
-தோசை தயாரிக்கலாம்.
ஊத்தப்பம், நமது ரஸனைக்கேற்ப பொருள்களைக் கூட்டி விதவிதமாக
தயாரிக்கலாம்.
சுடச்சுட சாப்பிட கரகரதோசையும், எடுத்துப் போக மெத்தென்ற
மிருதுவான தோசையும் தயாரிக்கலாம்.
பலவித சட்டினி வகைகளும், மிளகாய்ப் பொடி தயாரிப்பும் ஏற்கெனவே
கொடுத்திருக்கிறேன்.













