Archive for ஜூலை, 2017
விளக்கு பூஜை நினைவுகள்.
டில்லியில் எப்போதோ நடந்த விளக்கு பூஜையின் படங்கள். மலரும் நினைவுகள் மயூர் விஹார்—மேதா அபார்ட்மென்ட். நாங்கள் ஒரு பத்து தமிழ்க்குடும்பம் இருக்கும்.
வேலைக்குப் போகிறவர்களும் வருவதற்காக சனிக்கிழமைகளில் லலிதா ஸஹஸ்ரநாமம், குத்து விளக்குபூஜை ஆடி,தை வெள்ளிக்கிழமைகள்,நவராத்ரி பத்து தினங்கள் என ஒன்று தவராது செய்தவைகள். ப்ளாகில் போட்டுப் பார்ப்போமா… படங்கள் அவ்வளவு பிரகாசமாக இல்லை. மலரும் நினைவுகள்தானே.!!!!!!!!
நடுவில் ஒரு விளக்கு. சுற்றிலும் உட்கார்ந்து பூஜை. நிவேதனம் லலிதா அதான் கனராபேங்க் மாமி செய்கிரார். தில்லி ரோஜா இதழ்களாகவேபூஜை.
நினைத்துப் பார்க்கவே ஆனந்தம். அடுத்து கிடைத்த படங்களெல்லாம், டில்லி நினைவுகளாகக் கிடைத்த சில பழைய படங்கள். ஆடி வெள்ளிக்கிழமை. ஞாபகம் வந்தது. அவ்வளவே.
டால்வகையில் வெள்ளைக் காராமணி.
நாம் அநேகமாக சுண்டல்,கூட்டுமுதலானவைகள்தான் இதில் அடிக்கடி செய்வோம். அதிலும் இனிப்புப் போட்ட சுண்டல்தான் வெகு இடங்களில். என் நாட்டுப்பெண் இந்த டாலை பூரி,ரொட்டிகளுக்காகவும்,சாதத்துடனும் ஒரு மாற்றத்திற்காகச் செய்வாள் . அப்படிச் செய்தது தான் இதுவும். பூரியும் இருக்கிறது. எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம்.
தட்டப்பயறு,காராமணி, பெரும்பயறு என்று பலவிதப் பெயர்களில் பல வகைகள் கிடைக்கிறது. இது ப்ளாக் ஐ பீன்ஸ் என்று சொல்லப்படும் வெள்ளைக் காராமணி. ஹிந்திியில் Bபோடி
காராமணி,கத்தரிக்காய்,பலாக்கொட்டை இவைகள் சேர்த்துச் செய்யும் கூட்டு ருசியானது. இதில் பலாக் கொட்டை இல்லை. இதுவும் தானாக வருகிறது.
நாம் இப்போது டால் செய்வதைப் பார்க்கலாம்.
வேண்டியவைகள். டால் செய்வதற்கு–
வெள்ளைக்காராமணி—1 1/2 கப்,
வெங்காயம்–திட்டமானசைஸ்–2 பூண்டு இதழ்–4. இஞ்சி அரை அங்குலத் துண்டு.
பழுத்த தக்காளி–2
பொடிக்க —மிளகு–1டீஸ்பூன், லவங்கம்–4, பட்டை சிறிதளவு, ஏலக்காய்–1
பொடிகள்–மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன், தனியாப்பொடி—-2 டீஸ்பூன், மஞ்சள்பொடி–1டீஸ்பூன்
தாளிக்க —எண்ணெய்,நெய் வகைக்கு ஒரு டேபிள்ஸ்பூன். சீரகம்—1டீஸ்பூன்
கொத்தமல்லி, எலுமிச்சை ஒரு பாதி. ருசிக்கு—உப்பு.
செய்முறை.
வெள்ளைக்காராமணியை தண்ணீரில் நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி இவைகளைச் சுத்தம் செய்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது அரைத்துக் கொள்ளவும்.
பொடிக்கக் கொடுத்தவைகளை முடிந்தவரை பொடிக்கவும்.
காராமணியின் தண்ணீரை நீக்கிவிட்டு மூன்று கப் தண்ணீரைச் சேர்த்து மஞ்சள் பொடியுடன் குக்கரில் நேரிடையாக மிதமான தீயினில் இரண்டு விஸில்வரும்வரையில் வைத்து இறக்கி விடவும்.
நன்றாக வெந்திருக்கும். ஒரு ஸ்பூன் வெந்த காராமணிையை எடுத்து மசித்துச்
சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் நெய்யைவைத்துக் காய்ந்ததும் சீரகத்தைப் பொரியவைத்து, அரைத்த வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும்போதுபொடிகளைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
டாலிற்கு வேண்டிய உப்பையும் சேர்க்கவும். தண்ணீர் வேண்டுமானால் ஓரிரண்டு கரண்டி இப்போதே சேர்த்துக் கொதிக்க விடவும் . வேகவைத்த காராமணிையைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். சற்று நெகிழ வைத்தால்தான் ஸரியாக இருக்கும்.
இந்தப்படம் எடுக்க மறந்துவிட்டது.
உப்புக்,காரம் ஸரிபார்த்து பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். எலுமிச்சை சாறு வேண்டியளவு சேர்க்கவும். போலில் வைக்கவும்.
டாலும், பூரியுமாகச் சாப்பிடுங்கள். வெள்ளைக்காராமணிடால் ரொட்டி,சாதம் யாவற்றினுடனும் ஸரிவருகிறது.
நன்றி வழக்கம்போல மருமகளுக்கு.
பாசிப்பருப்பு ரொட்டி
முன்பெல்லாம் நெடுந்தூரம் பிரயாணம் செய்வதானால் உணவிற்காக ஏதாவது தயார் செய்தே எடுத்துப் போவார்கள். இன்னும் முன்காலத்தில் அரிசி,பருப்புமுதல் கட்டி எடுத்துக் கொண்டே போவார்கள். ஸமீபத்தில் காட்மாண்டுவிலிருந்து ஒரு நடுத்தர வயது தம்பதியினர் ஐரோப்பாவில் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க வந்தனர்.
வந்த இடத்தில் சைவ உணவு சில ஸமங்களில் கிடைக்காது போகலாம். எதற்கும் கைவசம் ஏதாவது வைத்திருக்க வேண்டுமென்று, இனிப்புகளும், சில வகை ரொட்டிகளும் எடுத்து வந்திருந்தனர். ஜெயின் தம்பதிகள்.
எதுவும் கிடைக்காவிட்டால்,அலுத்து சலித்து திரும்பவும் ஹோட்டல் தேட வேண்டுமே என்று நினைக்காமல், ஏதோ ஒன்றுடன் இரண்டு ரொட்டிகளைச் சாப்பிட்டு விட்டு ,இனிப்பும் எடுத்துக் கொண்டால் அந்தநேர பசி அடங்கி விடும் என்றனர். ஸரி நாமும் கேட்டுக் கொண்டால் பிளாகில் ஒரு குறிப்புஎழுதலாமே என்று யோசித்து விவரம் கேட்டுக் கொண்டேன்.
நாம் பிரயாணங்களுக்காகத் தயாரிக்கா விட்டாலும் சுடச்சுட தயாரித்துச் சாப்பிடலாமே!
மாதிரிக்காக சிறிய அளவில் செய்தது. வீட்டிலுள்ள சாமான்களைக் கொண்டே செய்ய முடியும். வேண்டியவைகள்.
பயத்தம் பருப்பு—இரண்டு குழிக்கரண்டி.
ரொட்டிமாவு தேவையான அளவு, ரொட்டிக்கும்,பிரட்டியிட மேல் மாவிற்குமாக
எண்ணெய்–மாவில்க் கலந்து பிசைய–2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் வேண்டிய அளவு உபயோகிக்கவும்.
தாளித்துக் கொட்ட–கடுகு அரைஸ்பூன்+சீரகம் அரைஸ்பூன்+நெய் ஒரு டீஸ்பூன்
.வேண்டிய பொடிகள்—மிளகாய்ப்பொடி–ஒரு டீஸ்பூன்,
பெருங்காயப்பொடி–கால்டீஸ்பூன்,மஞ்சள்பொடி–கால்டீஸ்பூன்
கஸூரிமெத்தி–அரைடீஸ்பூன். அதாவது பொடித்த வெந்தய இலைகள்
ருசிக்குஉப்பு, கால்டீஸ்பூன் சர்கரை.
செய்முறை
பருப்பைக் களைந்து ஒருமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
தண்ணீரை ஒட்ட இறுத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் ,ஒருஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கி,கடுகு,சீரகம் தாளித்து, அதனுடன் இரண்டு குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். மிளகாய்,மஞ்சள்,பெருங்காயப் பொடிகளைச் சேர்க்கவும். பருப்பைும் சேர்த்து சற்று வேகவைக்கவும். அதிகம் வேக வேண்டாம்.
நெத்துப்பதமாக பருப்பு அழுத்தமாக இருக்க வேண்டும். கீழிறக்கி ஆறவைக்கவும்.
பருப்பும்,அது வெந்த தண்ணீரும் இருக்கும். நன்றாக ஆறியவுடன் அந்த தண்ணீருக்கு ஏற்றபடி ரொட்டிமாவைச் சேர்த்துப் பிசையவும். வேண்டியஉப்பு,சர்க்கரை,இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய், கஸூரிமெத்தி
இவைகளைையும் சேர்த்துச் சப்பாத்திமாவு பதத்திற்குப் பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.இது ஞாபகத்தில் இருக்கட்டும்.
இரண்டு கரண்டி ஊறவைத்தப் பருப்புடன் இரண்டு கரண்டி தண்ணீர் சேர்த்து சற்று வேக வைத்து ஆறிய கலவையில் மாவைப் போட்டு பிசைந்திருக்கிறோம். தண்ணீர் வேறெதுவும் சேர்க்கவில்லை. இது முக்கியம்.
பத்து நிமிஷங்கள் மாவை ஊறவைக்கவும்.,
இனி வழக்கமாக ரொட்டி தாரிப்பது போலவே மாவைப்பிரித்து, குழவியினால் மாவில்த் தோய்த்து ரொட்டிகளை இடவும். பருப்புடன் சேர்ந்து ரொட்டி இட அழகாகவே வருகிறது.
திட்டமான சூட்டில் ரொட்டிகளை எண்ணெய் விட்டு தோசைக்கல்லில் போட்டுச்செய்து எடுக்கவும்.
ஆறவைத்து, நான்கு நான்காக அடுக்கிப் பார்ஸல் செய்து வைத்தால் அதிக நாட்கள் உபயோகிக்கலாமாம்.
நீங்கள் உங்களுக்குப் பிடித்த எதனுடனும் சாப்பிடலாம். தயிர் மிகவும் ஏற்றது.
கறி,கூட்டு,சட்னி,ஊறுகாய்,டால் எது வேண்டுமோ அதையும் செய்யவும்.
டால்,காலிபிளவர்வதக்கல், கீரை,தயிர் இவைகளுடன் உங்களுக்குக் கொடுக்கிறேன். சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள்.
எனக்கு உதவி என் மருமகள்.