ஜீராமிளகு ரஸம்.
வேண்டியவைகள்
தனியா——இரண்டு டீஸ்பூன்
மிளகு—–ஒரு டீஸ்பூன்
சீரகம்——ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு–இரண்டு டீஸ்பூன்
பெரிய தக்காளிப் பழம்—–ஒன்று
புளி—–சின்ன எலுமிச்சம்பழ அளவு
பூண்டு——7 அல்லது 8 இதழ்கள்
நெய்—-2 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
தாளிக்க—சிறிது கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை
ஒரு துளி மஞ்சட் பொடி
மிளகாய்——சிறியதாக ஒன்று
செய்முறை—-புளியை ஊறவைத்து நன்றாகக் கரைத்து
இரண்டு கப் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும்.
உப்பு, மஞ்சட்பொடி சேர்க்கவும்.
சிறிது நெய்யில் பருப்பு, மிளகு, மிளகாய், தனியாவை
சிவக்க வறுத்துக் கொண்டு பூண்டையும் சேர்த்து
கறுகாமல் வதக்கி, நறுக்கிய தக்காளியையும்,
சேர்த்து லேசாக வதக்கவும்.
ஆறியவுடன் சீரகம் சேர்த்து மிக்ஸியிலிட்டு
சிறிது ஜலம் தெளித்து விழுதாக அரைக்கவும்.
உப்பு சேர்த்த புளிக்கரைசலை பாத்திரத்திலிட்டு
நிதானமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும்.
புளி வாஸனை போகக் கொதித்தவுடன், அரைத்த
விழுதை இரண்டரை கப் நீரில் கரைத்து சேர்க்கவும்.
நுறைத்துப் பொங்கும் அளவு கொதிக்கவிட்டு
இறக்கி நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து
கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி உபயோகிக்கவும்.
சுலபமாகச் செய்யக்கூடிய மருத்துவ குணமுள்ள
ரஸமிது. ஜலதோஷம். ஜுரம் போன்றவைகளின் போது
இம்மாதிரி ரஸம் மிகவும் நல்லது. துணைக்கு
பருப்புத் துவையல். சுட்ட அப்பளாம்.
தக்காளி ரஸம்.
வேண்டிய சாமான்கள்.
கால்கப்–துவரம் பருப்பு
ரஸப்பொடி——ஒன்றறை டீஸ்பூன்
நெய்—-ஒரு டீஸ்பூன்
பெருங்காயம்—சிறு துண்டு
உறித்த பூண்டு இதழ்கள்-5 அல்லது 6
திட்டமான அளவுள்ள பழு்த்த தக்காளிப் பழம —4
சிறிய நெல்லிக்காயளவு—புளி
பச்சைக் கொததமல்லி, கறிவேப்பிலை—வாஸனைக்கு
தாளிக்க–அரை டீஸ்பூன் –கடுகு
ருசிக்கு உப்பு
செய்முறை———–தக்காளியைச் சிறு துண்டங்களாக
நறுக்கி இரண்டு ஸ்பூன் ஜலம் சேர்த்து பாத்திரத்திலிட்டு
5 நிமிஷங்கள் வேக வைத்து இறக்கவும்.
புளியையும் சேர்த்து ஊறவைத்து சிறிது,சிறிதாக 2கப்
தண்ணீரை விட்டுக் கறைத்து சாறை எடுத்துக்
கொண்டு சக்கையை நீக்கி விடவும்.
சற்று வாய்க் குறுகலான பாத்திரத்தில் நிதானமான
தீயில் , ரஸப்பொடி, உப்பு , பெருங்காயம், கரைத்த
சாறு இவைகளைக் கலந்து கொதிக்க விடவும்.
முன்னதாகவே துவரம் பருப்பை ப்ரஷர் குக்கரில்
பூண்டு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வாஸனை பிடிக்காதவர்கள் பூண்டை நீக்கவும்.
கொதிக்கும் ரஸம் அரை பாகமாகச் சுண்டியதும்
வெந்த பருப்பை 3கப் தண்ணீர் விட்டுக் கரைத்து
சேர்த்துப் பொங்க விடவும். ஒருமுறை நுறைத்துப்
பொங்கியதும் கீழிறக்கி நெய்யில் கடுகை தாளித்து
கொத்தமல்லி கரிவேப்பிலை சேர்க்கவும். ரஸக்கலவை
கொதிக்கும் போது அடிக்கடி கிளறிவிட்டு அடி பிடிக்காமல்
பார்த்துக் கொள்ளவும்.
உப்பு,காரம் அவரவர்கள் இஷ்டத்திற்கு கூட்டிக்
குரைப்பது பருப்பு நீர் விடுவதில் அட்ஜஸ்ட்
செய்யலாம்.
பச்சைக் கொத்தமல்லிப் பொடி
வேண்டியவை———சுத்தப்படுத்தி ஈரமில்லாது நறுக்கிய பச்சைக் கொத்தமல்லித் தழை–3 அல்லது 4 கப்
உளுத்தம்பருப்பு கால்கப்
கடலைப்பருப்பு கால்கப்
பெருங்காயம் சிறிது
எண்ணெய் ஒருஸ்பூன்
ஒரு பெரிய கோலி அளவு கெட்டியாக உருட்டிய புளி
மிளகாய் வற்றல் 6 அல்லது ஏழு
ருசிக்கு உப்பு
செய்முறை——–வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பருப்புகளையும்
மிளகாயையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
கலவை ஆறிய பின்னர் உப்பு பெருங்காயம் சேர்த்து
மிக்ஸியில் இவைகளை உதிர்உதிரான பருமனான
பக்குவத்தில் பொடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு நறுக்கிய கொத்தமல்லியையும், புளியையும
சேர்த்துத் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்தவிழுதில் தயாராகி வைத்துள்ள கரகரப்பான
பொடியைக் கொட்டி ஒரு சுற்று சுற்றவும்.
ஈரத்தை பருப்புகள் உறிஞ்சிக் கொள்ளும்.
சுவையான பொடி தயார். ;சற்று சேர்ந்தாற் போல
இருந்தாலும் சரியாகிவிடும். வைத்தும் உபயோகிக்கலாம்.
தோசை இட்டிலி முதல், தயிர் சாதம்வரை சுவை கொடுக்கும்.
கொத்தமல்லியை அலம்பி ஈரம் போக துணியில் பரத்தி
உலர வைத்து உபயோகிக்கவும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
எல்லா வலைப்பதிவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்
மங்களகரமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சொல்லுகிறேன் காமாட்சி
தோசை மிளகாய்ப்பொடி
வேண்டியவைகள்—-வற்றல் மிளகாய் 12அல்லது 15,-
காரத்திற்கேற்ப.
கடலைப் பருப்பு——-அரைகப்.
உளுத்தம் பருப்பு——-அரைகப்,
சர்க்கரை—-ஒரு டீஸ்பூன்,
புளி–ஒரு நெல்லிக்காயளவு,
வெள்ளை எள்—-கால்கப்,
பெருங்காயப் பொடி—-ஒரு டீஸ்பூன்
ருசிக்கு தேவையான உப்பு.
செய்முறை——வெறும் வாணலியில் எள், பருப்பு முதலானவற்றை ,
தனித் தனியாக, சிவக்க வறுத்துக் கொள்ளவும் .
துளி உப்புப்பொடி சேர்த்து காம்பு நீக்கிய மிளகாயை.
வெறும் வாணலியில் வறுத்தால் கமராமல் இருக்கும்.
புளியையும் பிய்த்துப் போட்டு வெறும் வாணலியில்
சற்றே வறுத்துக் கொள்ளவும்.
யாவும் ஆறிய பின் வேண்டிய உப்பு சேர்த்து ,புளி,
எள், நீங்கலாக, யாவையும் ஒன்று சேர்த்து மிக்ஸியிலிட்டு
பொடிக்கவும். சற்று பொடித்த பின் எள்ளைச் சேர்க்கவும்.
ஒரு சுற்று சுற்றி புளியையும் சேர்த்து கரகர என்ற
பக்குவத்தில் அரைத்து சுத்தமான பாட்டில்களில் எடுத்து
வைத்து உபயோகிக்கவும்.
இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும், நல்லெண்ணெய் சேர்த்துச்
சாப்பிட அவசரத்திற்கும் , அவசியத்திற்கும் ருசியானதுமான உற்ற
தோழனிது. வேர்க்கடலை, அல்லது பொட்டுக் கடலை சேர்த்தும்
உப்புக் காரத்தைக் கூட்டிக் குறைத்தும் செய்யலாம்.
பருப்புப் பொடி
வேண்டியவைகள்——-துவரம் பருப்பு அரை கப்
கடலைப் பருப்பு——-அரைகப்
உளுத்தம் பருப்பு—-ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள்–ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு——-ஒரு டீஸ்பூன்
வற்றல் மிளகாய்—-மூன்று
பெருங்காயம்—சிறிது
ருசிக்கு வேண்டிய உப்பு
செய்முறை——வெறும் வாணலியில் பருப்புகளைத்
தனித்தனியாகச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். எள்ளையும்
இப்படியே தனியாக வறுக்கவும். மிளகு, மிளகாயையும் தீயாமல்
வறுத்து , உப்பு, பெருங்காயம், சேர்த்து மிக்ஸியில் சற்று
கரகரப்பான பதத்தில் பொடிக்கவும்.
பருப்புகளையும், மற்றவைகளையும், நிதானமான தீயில்
வறுக்க வேண்டும். வறுபடுதல் குறைவானால் பொடி,
சாப்பிடும் போது வாயில் ஒட்டும்.
சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது, நெய்யுடன் சேர்த்து
சாப்பிட ருசியாக இருக்கும். துணைக்கு பச்சடிகள் இசைவு.
கறிப்பொடி
வேண்டியவைகள்– ——–கடலைப் பருப்பு அரைகப்
உளுத்தம் பருப்பு அரைகப்,
தனியா அரை கப்,
மிளகாய் வற்றல் 15 , வேண்டிய காரத்திற்கு தக்கபடி
கட்டி பெருஙகாயம் சிறிதளவு
அரை டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை——நிதானமான தீயில் அரைஸபூன் எண்ணெயை
வாணலியில் விட்டு காய வைத்து தனியாவைத் தவிர
மற்ற சாமான்களைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
தனியாவைத் தனியாக வறுத்துச் சேர்க்கவும்.
ஆறியபின் யாவற்றையும் மிக்ஸியிலிட்டு ரவைபோன்ற
கரகரப்பான பதத்தில் அரைத்தெடுத்து பாட்டில்களில்
கொட்டி மூடி வைத்து உபயோகிக்கலாம்.
வாஸனை பிடித்தவர்கள் சிறிதளவு சீரகமோ, பட்டையோ,
சேர்த்துப் பொடிக்கலாம். எண்ணெயில் வதக்கும் காய்
கறிகளுக்கும், வாழைக்காய், கத்தரிக்காய் ,கறிகளுக்கும்
இப்பொடி மிகவும் ஏற்றதாக இருக்கும்.
ரஸப் பொடி
- வேண்டியவைகள்——–காய்ந்த மிளகாய் வற்றல் 200 கிராம்
- .கொத்தமல்லி விதை 500 கிராம்.
- துவரம் பருப்பு 200 கிராம்.
- மிளகு 200 கிராம்.
- சீரகம் 200 கிராம்.
- விரளி மஞ்சள் 100 கிராம்.
செய்முறை——–மிளகாயைக் காயவைத்து, காம்பை நீக்கிக கொள்ளவும். மற்ற சாமான்களையும் , வெய்யிலில் நன்றாகக்
காயவைத்து ,ஒன்றாகச் சேர்த்து மிஷினில் கொடுத்து மிகவும்
நைஸாக இல்லாமல், சற்று,கரகரப்பான பதத்தில், அறைத்துக்
கொடுக்கச் சொல்லி , பேப்பரில் கொட்டிப் பரவலாக வைத்து
ஆறவைத்து பாட்டில்களில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.
அவ்வப்போது புதியதாகச் செய்வதானால் சிறிய அளவில்
வருத்துப் பொடி செய்து கொள்ளலாம். மிஷினில் அறைப்பதாநாலும்
லேசாக வறுத்துக் கொடுக்கலாம். வறுத்து அறைத்த பொடி
கெட்டுப் போகாது. நீண்ட நாட்கள் இருக்கும்.
ஸாம்பார்ப் பொடி.
வேண்டிய ஸாமான்கள்
கால் கிலோ மிளகாய் வற்றல்
அரைகிலோ கொத்தமல்லி விதை
துவரம் பருப்பு 150 கிராம்.
கடலைப் பருப்பு 150 கிராம்.
விரளி மஞ்சள் 100 கிராம்.
மிளகு 100 கிராம்.
வெந்தயம் 100 கிராம்.
செய்முறை ——எல்லா ஸாமான்களையும், நல்ல வெய்யிலில் தனித்தனியாக
காய வைத்து.மஞ்சளைத் துண்டு செய்து சேர்த்து , மிளகாய் அரைக்கும் மிஷினில்
அரைத்து, சூடுபோக ஆறவைத்து பாட்டில்களில் எடுத்து வைக்கலாம்.
குண்டு மிளகாயாக இருந்தால் காம்பை நீக்க வேண்டாம். நீளவாகு மிளகாயாக
இருந்தால் காம்பை நீக்க வேண்டும். வீட்டில் குறைந்த அளவு. மிக்ஸியில்
செய்வதானால் நன்றாக வறுத்தே செய்ய வேண்டும். மிஷினில் ்அரைக்கும்
பொடியை அவ்விடமே பெரிய பேப்பரில் பரத்தி. ஆறவைக்க வேண்டும்.
காய்ந்த கறிவேப்பிலை சேர்த்து அரைப்பதும் உண்டு.
சில நினைவுகள்
என்னைப்பற்றி சிறிது எழுதியதுடன் எனக்குத் தெரிந்த எளிமையான சமையல் குறிப்புகளைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டேன்.
எனக்குப் ப்ளாகில் எழுதக் கற்றுக் கொடுத்த என் மகன் அம்மா உனக்கு இது மட்டும்தான் எழுத வருமா. உன்னைப் பற்றியே நிறைய எழுதலாமே, என்று சொல்லவே அதற்கு மேல் அதே மனதில் பதிந்து விட்டது.
இந்தியா போகிறீர்கள். எங்களிடம் பகிர்ந்தவைகளை எல்லாம் திரும்பவும் எழுதுங்கள் . மிச்சம் மிகுதிகளும் ஞாபகம் வருமே, அதை
எழுதினாலே போதுமே என்று அடிஎடுத்துக் கொடுத்தான்.
அவர்கள் யாவருக்கும் தமிழ் பேசத்தான் தெரியும்.
மும்பை வந்திருக்கும் எனக்கு ஏனோ எதுவும் செய்யவேத தோன்றவில்லை.
இதுசரியில்லை. மனது சுறுசுறுப்பாக இருக்க ஏதாவது செய்யத்தான் வேண்டும்.
எனத தீர்மானம்செய்து எழுத ஆரம்பிக்கிறேன்.
நான் பிறந்து எட்டு வயது வரை வளர்ந்த ஊர் திருவண்ணாமலை.
இப்பொழுது போல ஜனக் கூட்டமில்லாத ஊராக இருந்தது.
கோவில் முதலானவைகளுக்கு சிறுமிகளாகிய நானும் என் சகோதரியும்தானாகவே போகவும், வீட்டுக்கு வருகிறவர்களையும் அழைத்துப் போக
முடிந்த காலம். வீடு இருந்தது சன்னதித் தெரு. புரிந்து அனுபவித்து பார்க்காவிட்டாலும் கோவிலைச் சுற்றிவந்து நமஸ்காரம் செய்துவிட்டு
வருவது வழக்கமாக இருந்தது.
இதேபோல பகவான் ரமண மகரிஷி ஆசிரமத்துக்கும் பிறரை அழைத்துப்போகவரவும் நன்கு தெரியும்.
என் தகப்பனார் டேனிஷ் மிஷின் ஹைஸ்கூலில் தமிழாசிரியர்.
பகவானிடம் அவருக்கு பக்தியும், பேசிப் பழகும் வாய்ப்பும் இருந்தது.
நாங்களும் பகவான் உட்கார்ந்திருக்கும் இடத்தினருகில் சென்று
வணங்குவோம். ஓரிருவார்த்தை புன் முறுவலுடன் சொல்லுவார்.
பக்தர்கள் கொண்டு வந்திருக்கும் பழங்களில் ஏதாவதை எங்களுக்குக்
கொடுக்கச் சொல்லுவார். உடன் வந்தவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
எல்லோரும் அமைதியாகஉட்கார்ந்திருப்பார்கள். பாடத் தெரிந்தவர்கள்
பக்தியுடன் பாடுவார்கள். சின்ன பசங்கள் நாங்களும் ஸ்கூலில்
சொல்லிக் கொடுத்த பாட்டுகள் ஏதாவது பாடுவோம்.
பக்தி பரவசம் என்பதை எல்லாம்விட குஷியாக பெருமையாகப்
இருப்போம் என்றுதான் சொல்ல முடியும். இப்போதாயிருந்தால்
இதைவிட பாக்கியம் வேறு இல்லைஎன நினைத்திருப்போம்.
பகல் வேளையாகின் ஆசிரம போஜன சாலையில், அவருடனேயே
எல்லோருக்கும் பந்தியில் சாப்பாடும் கிடைக்கும். எந்த வித்தியாஸமும்
கிடையாது. ஆசிரமத்து ஊறுகாயும், அரைத்துவிட்ட சாம்பாரும்
எல்லோரும் புகழும்படியாக அவ்வளவு ருசியாக இருக்கும்.
நல்ல சாப்பாடுகள் பொது விசேஷங்களில் சாப்பிடும் போது
ஆசிரம சாப்பாடு மாதிரி இருக்கிரதென்று என் தாயார் குறிப்பிடாமல்
இருந்ததில்லை.
மதயானம் மூன்று மணிக்குமேல் பக்தர்கள் கொண்டு வந்திருக்கும்
பழ வகைகளை நறுக்கிக் கலந்து மிச்ச மீதி இல்லாமல் எல்லோருக்கும்வினியோகம் செய்து விடுவார்கள்.
மகரிஷி அவர்களின் தலை சற்று அசைந்து கொண்டே இருக்கும்.
அன்று பார்த்த முகம் இன்றும் ஞாபகம் உள்ளது.
பகவானின் சகோதரர் நிரஞ்சனானந்தஸ்வாமிகளுடனும்
அப்பாவிற்கு பழக்கமுண்டு. ஒரு பத்திரிக்கை விசேஷ நிருபராக
எங்கிலும் நல்ல பரிச்சயமிருந்தது.
சுதேசமித்திரனில் ஸப் எடிட்டராக இருந்திருக்கிரார். அவர் ஜீவித காலம்வரைதின வாரப் பதிப்புக்கள் இலவசமாக தபாலில் வந்துகொண்டிருந்தன.
நிறைய எழுதிக் கொண்டிருந்தார். சிறியவர்களாதலால் எதுவும்
ஞாபகமில்லை. நாற்பதுகளில் ரிடயராகி சொந்த ஊர் வளவனூர்
வந்து சேர்ந்தோம்.
ப்ஞ்சாயதன பூஜையும் இராமயண பாராயணமும் மறக்க முடியாதவை.
பஞ்ச கச்ச வேஷ்டி, ஷர்ட், கோட், விபூதி கோபிசந்தன நெற்றி, பிடிவாதமானபழையனவற்றில் நம்பிக்கையுள்ள மனிதர் .திருவண்ணாமலையில்
காங்கிரஸ் அண்ணாமலைப் பிள்ளை காலத்தில் கட்சிக் கூட்டத்தில்
அவருடன் கலந்து கொண்ட போட்டோவைப் பார்த்திருக்கிரேன்.
கார்த்திகைத் தீபத் திருவிழா எங்கள் வீட்டில் 15 நாடகள்
திருவண்ணாமலையில் உறவினர்களுடன் கூட்டம் திமிலோகப்படும்.
தெறிந்தவர்கள் வேறு எங்காவது தங்கி விட்டால் அப்பாவிற்கு
வரும் கோபம் சொல்லி முடியாது.
தீபத்திருவிழாவில் அந்த நாளில்ப் பார்த்த பிடாரன், பிடாரச்சி,
பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், பலவித வாகனங்கள்
தேரோட்டங்கள், மின்விளக்கு அலங்காரங்கள், அதையொட்டிய
பின்னால் வரும் மின் வசதி வண்டிகளின் சத்தம்,
கடைகளின் அணிவகுப்பு, பொரி உருண்டையும்,பஞ்சு மிட்டாயும்
பசங்களின் இலக்கு. ஒரு ரூபாவிற்கு ஒரு குலை வாழைப்பழம்
வாங்கி, கை எட்டும்படியாக கட்டித் தொங்கும் அழகு.
இப்படியாக கார்த்திகை தீபம் வரும் அடுத்த நாட்களை
எவ்வளவோ வருடங்களுக்கு முன்பான என்நினைவுகளை
எழுதியிருக்கும் நான் காமாட்சி.
