Archive for ஜூன் 19, 2012
வாழைத் தண்டு பிட்லை
அதிகம் நாரில்லாத அடிமரத்து வாழைத் தண்டு
வீட்டிலேயே கிடைத்ததால் பிட்லை செய்ய நன்றாக
இருந்தது.
தண்டின் மேலிருக்கும் பட்டைகளை நீக்கவும்.
வாழைத் தண்டை வறுவலுக்கு நறுக்குவது போல ஒரு
வில்லையை நறுக்கி, ஒரு விரலில் நாரை இழுத்துச் சுற்றிக்
கொண்டு, அடுத்தடுத்து வில்லைகளை நறுக்கி நாரை
நீக்கவும்.
வில்லைகளை நாலைந்தாக அடுக்கி மெல்லிய துண்டுகளாக
நறுக்கவும்.
2 டேபிள்ஸ்பூன் மோர் கலந்த தண்ணீரில் நறுக்கிய துண்டுகளை
அவ்வப்போது போட்டு வைத்தால் தண்டு கறுக்காமல்
இருக்கும்.
வேண்டியவை
சுமாரான ஒரு துண்டு வாழைத் தண்டிற்கான பிட்லையைச்
செய்ய ஸாமான்கள்.
துவரம்பருப்பு—–அரைகப்
கொத்தமல்லி விதை—-1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்—-5
கடலைப் பருப்பு—-2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—-1 டீஸ்பூன்
மிளகு—-கால் டீஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—-அரைகப்
புளி—-ஒரு கோலியளவு
தக்காளி—-ஒன்று
எண்ணெய்—ஒரு டேபிள்ஸ்பூன், தாளித்துக் கொட்ட கடுகு,
பெருங்காயம்.
மஞ்சள் பொடி சிறிது
ருசிக்கு—உப்பு
செய்முறை.
துவரம் பருப்போடு வேண்டுமானால் சிறிது கடலைப் பருப்பும்
சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தனியா,மிளகாய்,பருப்பு,,மிளகை துளி எண்ணெயில் வறுத்து
சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியையும் வதக்கி,
தேங்காயையும், சேர்த்துப் பிரட்டி சீரகம் சேர்த்து ஆறியவுடன்
மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அறைத்து வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் சிறிது தண்ணீரைக் கொதிக்க
வைத்து, நறுக்கிய மோர்த் தண்ணீரில்போட்ட வாழைத்
தண்டை ஒட்டப் பிழிந்து போட்டு நன்றாக வேகவைக்கவும்.
புளியைக் கறைத்து விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து
கொதிக்கவிட்டு, அறைத்த கலவையையும் சேர்த்துக் கிளறி
ஒரு கொதி விட்டு, வெந்த பருப்பைச் சேர்க்கவும்.
கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கி கடுகு, பெருங்காயம் தாளித்துக்
கொட்டி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
கெட்டியாகவோ, சற்று தளரவோ செய்யவும்.
வாழைத் தண்டு உடம்பிற்கு நல்லது.
சுடசுட சாதத்துடன் சாப்பிட்டால் ருசிதான். உடன் சாப்பிட
இருக்கவே இருக்கிறது பொறித்த அப்பளாம், வடாம்.
இது சென்னையில் செய்தது. காரம் உங்கள் இஷ்டம் போல
கூட்டிக் குறைக்கலாம்.

