Archive for திசெம்பர் 25, 2009
தோசை மிளகாய்ப்பொடி
வேண்டியவைகள்—-வற்றல் மிளகாய் 12அல்லது 15,-
காரத்திற்கேற்ப.
கடலைப் பருப்பு——-அரைகப்.
உளுத்தம் பருப்பு——-அரைகப்,
சர்க்கரை—-ஒரு டீஸ்பூன்,
புளி–ஒரு நெல்லிக்காயளவு,
வெள்ளை எள்—-கால்கப்,
பெருங்காயப் பொடி—-ஒரு டீஸ்பூன்
ருசிக்கு தேவையான உப்பு.
செய்முறை——வெறும் வாணலியில் எள், பருப்பு முதலானவற்றை ,
தனித் தனியாக, சிவக்க வறுத்துக் கொள்ளவும் .
துளி உப்புப்பொடி சேர்த்து காம்பு நீக்கிய மிளகாயை.
வெறும் வாணலியில் வறுத்தால் கமராமல் இருக்கும்.
புளியையும் பிய்த்துப் போட்டு வெறும் வாணலியில்
சற்றே வறுத்துக் கொள்ளவும்.
யாவும் ஆறிய பின் வேண்டிய உப்பு சேர்த்து ,புளி,
எள், நீங்கலாக, யாவையும் ஒன்று சேர்த்து மிக்ஸியிலிட்டு
பொடிக்கவும். சற்று பொடித்த பின் எள்ளைச் சேர்க்கவும்.
ஒரு சுற்று சுற்றி புளியையும் சேர்த்து கரகர என்ற
பக்குவத்தில் அரைத்து சுத்தமான பாட்டில்களில் எடுத்து
வைத்து உபயோகிக்கவும்.
இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும், நல்லெண்ணெய் சேர்த்துச்
சாப்பிட அவசரத்திற்கும் , அவசியத்திற்கும் ருசியானதுமான உற்ற
தோழனிது. வேர்க்கடலை, அல்லது பொட்டுக் கடலை சேர்த்தும்
உப்புக் காரத்தைக் கூட்டிக் குறைத்தும் செய்யலாம்.
பருப்புப் பொடி
வேண்டியவைகள்——-துவரம் பருப்பு அரை கப்
கடலைப் பருப்பு——-அரைகப்
உளுத்தம் பருப்பு—-ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள்–ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு——-ஒரு டீஸ்பூன்
வற்றல் மிளகாய்—-மூன்று
பெருங்காயம்—சிறிது
ருசிக்கு வேண்டிய உப்பு
செய்முறை——வெறும் வாணலியில் பருப்புகளைத்
தனித்தனியாகச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். எள்ளையும்
இப்படியே தனியாக வறுக்கவும். மிளகு, மிளகாயையும் தீயாமல்
வறுத்து , உப்பு, பெருங்காயம், சேர்த்து மிக்ஸியில் சற்று
கரகரப்பான பதத்தில் பொடிக்கவும்.
பருப்புகளையும், மற்றவைகளையும், நிதானமான தீயில்
வறுக்க வேண்டும். வறுபடுதல் குறைவானால் பொடி,
சாப்பிடும் போது வாயில் ஒட்டும்.
சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது, நெய்யுடன் சேர்த்து
சாப்பிட ருசியாக இருக்கும். துணைக்கு பச்சடிகள் இசைவு.