Archive for ஜூன் 6, 2016
தொட்டில்–6
பாட்டி வீட்டு வாசலில் புதுப்பாளையத்தா வந்துவிட்டாளா? அதிகாலை ஆறு மணிக்கே வந்து விடும் தயிர்காகாரியைப் பற்றி யாவரும் விஜாரித்துக் கொள்ளும் கேள்வி இது. என்ன புதுப்பாளையத்தா ஏதாவது மாரி அம்மனா என்று தோன்றும். இல்லை. எங்கள் கிராமத்தின் அதுவும் எங்கள் வீட்டு சுற்றுப்புறமுள்ள எல்லோர் வீட்டிற்கும் தயிர் வழங்கும் பெண்மணி. ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வருவாள். பெரிய கூடையில் சுற்றிலும் அண்டையாக ஏதாவதை வைத்து பெரிய பானையில் தயிர் இருக்கும். தவிர அதன்மேல் வேண்டியவர்களுக்காக சிறியசிறிய மண் கலயங்களில் கெட்டியாக கத்தியால் வெட்ட வேண்டும் என்ற தோற்றத்துடன் தயிரும் எப்படி லாவகமாகச் சுமந்து வருகிராளோ என்று எண்ண வைக்கும்.
பெரிம்மா நான் வந்துட்டேங்கோ. பக்கத்தில் அக்கத்தில் யாராவது இறக்கி விடுவார்கள். தயிர்க்காரி வந்துட்டா,வந்துட்டா செய்திகள் அஞ்சலாகும். யாருக்கும் முதல்லே அவ குடுக்கமாட்டா. ஸரிபோவோம்
என்றுஎல்லார்வீட்டுஈயச்சொம்புகளும்,ஈயக்கிண்ணங்களும்அவரவர்கள் கையில். பெரிம்மா வரும் வரை கூடையை திறக்கமாட்டாள். எங்கே பெரிம்மா வா. ஒங்கையாலே போணி பண்ணு.
ஒரு சின்ன தடியை ஊன்றிக்கொண்டு பாட்டி வரும்போதே அவாளுக்கெல்லாம் கொடுக்கறதுதானே. சின்ன குழந்தைகாரி அவள்.
இல்லே இந்தா பிடி. உள்ளார போயி பாத்திரத்தில் ஊத்திக்கோ என்ற சொல்லுடன் ஒரு சின்ன கலயம் கைமாறும்.
அடுத்தது சுப்பம்மா. இது அவங்களுக்கு.எங்கே அவங்க? இன்னொரு கலயம் கைமாரும். எல்லாம் பாட்டி வீட்டுத் திண்ணையில்தான். பெரிய பானை திறக்கும். எல்லோரும் எனக்கு உனக்கு என்று பாத்திரம் நீளும். நறைய இருக்குது தயிரு. நீ கொண்டா உனக்குதான் பிள்ளை அழுவும். காசு எம்மாம் வைச்சிருக்கே, கடன் குடுக்க மாட்டேன்.
நாலு மொந்தை குடு. உனக்கு மூணு மொந்தைதான் . மீந்தா குடுக்கறேன்.கெட்டியாகத் தோய்த்த தயிரில் கெட்டியாக சிறிது மோர் கலந்துமற்றவர்களுக்குக் கொடுப்பாள். அதுவும் அவ்வளவு நன்றாக இருக்கும். இது ஒரு காட்சி. நான்கு மைல் தூரத்திலிருந்து வருகிறாள். அவளுக்கு பழையதும் குழம்பும் பாட்டி கொடுக்காத நாளே இருக்காது.வேறு யார் கொடுத்தாலும் வாணாம் பெரிம்மா வைச்சிருக்கும் என்பாள்.
அப்பளாத்துக்கு மாவு அறைக்க பாட்டியாத்து ஏந்திரம்தான் எல்லோருக்கும் வேண்டும் . மாவைப் பூராவும் எடுப்பதற்கு முழுத்தேங்காயின் மேல் மட்டையை ஒரு பகுதியை நறுக்கி அதை ஒழுங்கு செய்து அதுதான் மாவை ஒட்ட எடுக்கும் பிரஷ்.
மத்தியானம் அதுவும் வீட்டிற்கு ஒரு இளம் பாட்டி இருப்பார்களே!அவர்களின் பொழுது போக்கும் இடமும்,பல்லாங்குழியும், தாயக்கட்டமும், பத்து கட்டமும்,பரமபதமும் மும்முரமாக இருக்கும். ஆடு புலி ஆட்டம் என்று கூட ஒன்று வரைந்து ஆடுவார்கள்.பாட்டியின் தவலை தோசை பெயர் போனது. வீட்டு அரிசியும்.காணத்தில் ஆட்டிய நல்லெண்ணையும் சேர்த்தது. வந்தவர்கள
வீட்டின் பின்பக்கம் நெல் உலர்த்த பெரிய செங்கல் பதித்த களம். பொரிவடாம் இட மூன்று காச்சல் போட,மற்றும் வடாமிட, ஸாமான்கள் காயவைக்க பத்திரமான இடம். பாட்டியின் மாப்பிள்ளை ஊரில் இல்லாத போதெல்லாம் பாட்டி ஒரு வி.வி.ஐ.பி தான். யார் இவர் அகிலாண்டம் பாட்டிதான்.
கருப்பான சிறிய உருவம்தான்.பேச்சில் அவ்வளவு இனிமை கலந்திருக்கும். நிறைய க்ஷேத்திரங்களுக்கும்,தீர்த்த யாத்திரைகளுக்கும் சென்ற அனுபவம் உண்டு. அதைப்பற்றி எல்லாம் சொல்லும் போது யாவரும் ஆச்சரியப் படும்படி இருக்கும்.நேபாளத்திற்க்கு அந்த நாளில் போவதென்றால் அதுவும் காட்மாண்டு பசுபதி தரிசனமென்றால் யாவருக்கும் கிடைக்கக் கூடியதல்ல. இப்போது பஸ்,ஆகாய விமானம் முதலானது உண்டு. மட்டக் குதிரைகளின் மீது ஸவாரி செய்துதான் போக வேண்டுமாம். அந்த முறையில் பசுபதி தரிசனம் செய்ததைச் சொன்ன போதுஎல்லோரும் ஆச்சரியப் பட்டுப் போனோம்.
பாட்டி சின்ன வயதிலேயே விதவையானவர். ஒரு பெண் குழந்தை, அவளையும் விவாகம் செய்து கொடுத்தாகி நிறைய காலமாகிறது. பாட்டியின் உறவினருக்குத் தெரிந்தவர், திருவாங்கூர் ஸமஸ்தான திவான் ஸி.பி. ராமஸ்வாமி அய்யர். அவர்கள் மனைவி, தாயார் இருவருடனும் பூஜை முதலான நல்ல காரியங்களுக்கு உதவி செய்து கொண்டு, அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தவர் அகிலாண்டம்மா. ஆக நல்ல வாய்ப்பாக அவர் ஏராளமான இடங்களைப் பார்க்கவும், விசாலமான மனதையுடையவராகவும் இருந்ததில் ஆச்சரியமில்லை. ஓரளவுவயதான பின்பு பெண்ணுடன் இருக்க வந்தவர்.
இவ்வளவு நல்ல மனதுடைய அந்தம்மாவின் பெண்ணிற்கு மகப்பேறு ஏற்படவில்லை. வயித்தியங்கள் செய்யாது இருந்திருப்பார்களா? பெண்ணின்
புகுந்த வீட்டில் மைத்துனர்களுக்கு அந்தபாக்கியம் இருந்தது. அவர்களின் குழந்தைகளைப் பார்த்தே பாட்டியின் பெண் தங்க விக்கிரஹம்மாதிரி குழந்தைகள் என்று பெருமை பட்டுக்கொள்ளும் ஒரு தங்கமான மனம். வம்சம் விளங்குகிறது, என்று பெருமை அடைந்து பேசுவாள். பெரியவர்களைத் தேடி நமஸ்காரம் செய்து எனக்கும் வம்சம் விளங்கவேண்டும் என்று ஆசீர்வதியுங்கள் என்று வெகுளியாகக் கேட்பாள்.
பாட்டி ஊரில் வீடு,நிலம் முதலானது வாங்கி இருந்தாள். அவ்வப்போது மாப்பிள்ளை அவர்கள் உடன் பிறந்தவர்களுக்கும் ஒத்தாசை செய்வார். அவரும்
கவர்மென்ட் வேலையில் இருந்தார். பார்க்கிறவர்கள் என்ன இருந்தாலும் அவளுக்கென்று குழந்தை குட்டி இல்லாத போது தனக்கென சேமிக்கவேண்டாமா? என கேட்கத் துவங்கினர். இதெல்லாம் வழக்கம்தானே! காலம் அப்படியேவும் ஓடவில்லை.
பாட்டியின் பெண்ணிற்கு ஓயாத தலைவலி அடிக்கடி வந்து எவ்வளவு வயித்தியங்கள் செய்தும் பலனில்லாமல் இரண்டு கண்களிலும் பார்வை குறைந்து கொண்டே வந்து பார்வை பறிபோனது. பாட்டியின் மனது எப்படி இருந்திருக்கும். ஊரோடு, தாராளமான ஸொந்த வீட்டில் இருக்க பெண்ணுடன் பாட்டி ஊரோடு வந்து விட்டாள். மாப்பிள்ளை சென்னையினின்றும் அடிக்கடி வந்து போவார். பாட்டிக்கும் கால் சற்று ஊனமானதால் ஒத்தாசைக்கும் ஒரு உறவின வயதானவளையும் உடன் வைத்திருந்தார். தண்ணீர் கஷ்டம் அப்போது.
வீட்டிலும் பொழுது போக வேண்டுமே!கலகலக்க அக்கம்பக்கத்தினர்கள்,கலகத்தையும் செய்வார்கள்.
தொட்டிலுக்கும் இதற்கும் என்ன ஸம்பந்தமா? பாட்டியின் கதை என்றே தலைப்பு அளித்திருக்கலாமா? தொடருவோம்.