Archive for ஏப்ரல், 2010
கோவைக் காய்க் கறி
வேண்டியவைகள்
கோவைக்காய்—-கால்கிலோ
வெங்காயம்—2
ருசிக்கு உப்பு
எண்ணெய்—2 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி—கால் டீஸ்பூன
மிளகாய்ப் பொடி–அரை டீஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—ஒரு டீஸ்பூன்
செய்முறை—–காய்களை நன்றாக அலம்பிப் பொடிப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும் வெங்காயத்தையும் தனியாகப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
செய்முறை—— காயுடன், உப்பு மஞ்சள்பொடி, 2 டீஸ்பூன் எண்ணெய்க்
கலந்து பிசறி மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து ஐந்து ஐந்து
நிமிஷங்களாக மைக்ரோவேவில் வேகவைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும, கடுகு, பருப்பு
தாளித்து வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வெந்த காயையும் சேர்த்துக் காரம் கலந்து நிதான தீயில்
சுருள வதக்கவும். மூடியால் மூடித் திறந்து கிளறிவிட்டு
நன்றாக வதக்கவும்.
நேராக வாணலியிலேயே வதக்குவதென்றால் நறுக்குமுன்னர்
காயை சுடு தண்ணீரில் போட்டெடுத்து வடிக்கட்டி நறுக்கவும்
ஆலுபரோட்டா
வேண்டியவைகள்.
கோதுமை மாவு—–ஒன்றரை கப்
உருளைக் கிழங்கு—-திட்டமான சைஸ் 4
பச்சை மிளகாய்—2
கொத்தமல்லி இலை—நறுக்கியது கால்கப்
சீரகப் பொடி—அரை டீஸ்பூன்
தனியாப் பொடி–அரை டீஸ்பூன்
மாங்காய்ப் பொடி– அரை டீஸ்பூன்
கரம் மஸாலாப் பொடி—அரை டீஸ்பூன்
உப்பு—-ருசிக்குத் தக்கபடி
எண்ணெய்—மாவிற்கு 2 டீஸ்பூன்
பரோட்டா செய்யத் தேவையான எண்ணெய் அல்லது நெய்
செய்முறை—-உருளைக் கிழங்கை நன்றாக அலம்பி
2 துண்டங்களாகச் செய்து , ஒரு காட்டன் துணியை நனைத்துப்
பிழிந்து கிழங்குகளை அதனுள் வைத்துச் சுருட்டி சிறிது
ஜலம் தெளித்து மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து
7, 8, நிமிஷங்கள் ஹை பவரில் மைக்ரோ வேவ் செய்து
எடுக்கவும்.
கிழங்கு வெந்திருக்கும். தோலை உறித்து விட்டு, கிழங்கை
சூடு இருக்கும் போதே நன்றாக கட்டி இல்லாமல் மசிக்கவும்.
கோதுமை மாவுடன் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து ரொட்டி இடும் பதத்தில்பிசைந்து ஊற வைக்கவும்.
மிளகாயைக் குறுக்காக நறுக்கி ,விதைகளை நீக்கி விட்டு மிகவும்
மெல்லியதாக, பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிசைந்த
கிழங்குடன்உப்பு, மற்றும் பொடி வகைகள்,கொத்தமல்லி, மிளகாய் சேர்த்துப்பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.
ரொட்டி மாவையும் சற்றுப் பெறிய சைஸில் பிரித்து உருட்டிக்
கொள்ளவும்.
மாவை உள்ளங்கை அளவிற்கு ரொட்டியாக இட்டு மேலாக,
லேசாக சிறிது எண்ணெயைத் தடவி, உருளைக் கிழங்கு கலவையை வடைமாதிரி தட்டையாகச் செய்து அதன்
மேல் வைத்து போளி மூடுவது போல மாவின் விளிம்புகளால்
பூரணத்தை நன்றாக மூடவும்.
மேல் மாவைத் தோய்த்து மெல்லிய ரொட்டிகளாகத் தயாரிக்கவும்.
ஒவ்வொன்றாகத் தயாரிக்கும் போதே, திட்டமாகக் காய்ந்த
தோசைக் கல்லில், ரொட்டியைப் போட்டு, மேலாக எண்ணெயோ
நெய்யோ தடவி, திருப்பிப் போட்டு, சற்று தோசைத்திருப்பியினால்
லேசாக அழுத்தம் கொடுத்து எண்ணெய் தடவிரொட்டியைச்செய்து
எடுக்கவும்.
உருளைக் கிழங்கை மைக்ரோவேவில் வேக வைத்தால் தண்ணீர்ப்
பாகம் குறைந்து பரோட்டா செய்ய, ஒட்டாமல் சுலபமாக செய்ய
ஒழுங்காக வருகிரது.
வேகவைத்து எடுத்தால் கிழங்கை முக்கால்வேக்காட்டில் எடுத்து
தோல் உறித்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி மசிக்கலாம்.
ஈரப்பதம் குறைவாக இருக்கும்.
மெல்லியதாக இடுவதற்குதான் இத்தனைப் பதமும்.
ஆலு பரோட்டாவா, உருளைக் கிழங்கு ரொட்டியா?
எல்லாம் ஒன்றேதான்.
பருப்பரிசி உசிலி.
வேண்டியவைகள்.
அரிசி—-1 கப்
பயத்தம் பருப்பு—-ஒரு கப்பின் மூன்றிலொரு பாகம்
தேங்காய்த் துருவல்—-அரை கப்
எண்ணெயும், நெய்யுமாக—-2 டேபிள் ஸ்பூன்
கடுகு. உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு, தலா 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—-கால் டீஸ்பூன்.
மிளகாய்—2
ருசிக்கு—உப்பு
இஞ்சித் துண்டுகள்—1 டீஸ்பூன்
கறிவேப்பிலை—-சிறிது.
செய்முறை——-அரிசி, பருப்பைத் தனித் தனியாக சிவக்க வறுக்கவும் தண்ணீர்விட்டுக் களைந்து நீரை இறுத்து வைக்கவும்.
ப்ரஷர் பேனிலோ, சின்ன குக்கரிலோ நெய் ,எண்ணெயைக்
காயவைத்து , கடுகு, மிளகாய்,பருப்புகள், பெருங்காயம் சேர்த்து
சிவக்க வறுத்து, தேங்காயைப் போட்டு ஒரு முறை பிரட்டி
இஞ்சி,கறிவேப்பிலையுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து
கொதிக்க விடவும்.
திட்டமான உப்புடன் அரிசி, பருப்புக் கலவையைச் சேர்த்து குக்கரில்
ஒரு விஸில் வரும்வரை வைத்து, மேலும் ஸிம்மில் 4 நிமிஷம் வரை
வைத்து இறக்கவும்.
நீராவி அடங்கிய பின் கரண்டிக் காம்பினால் ஒரு கிளறு கிளறி
மூடி வைத்து இரண்டொரு நிமிஷம் கழித்து உபயோகிக்கவும்
சாதம் வைக்க அரிசிக்கு எந்தக் கணக்கில் ஜலம் வைப்போமோ
அந்தக் கணக்கு ஜலம் வைத்தால் போதும்.
பருப்பிற்காக வேண்டாம்.
உதிர் உதிராக உசிலி தயார்.
துவையல், கொத்ஸு, பச்சடிகளுடன் சாப்பிட முழு உணவாக
இருக்கும்.
பச்சைப் பட்டாணி , முந்திரிப் பருப்பு முதலானவை சேர்த்து
ருசியைக் கூட்டலாம்.
