Archive for செப்ரெம்பர், 2016
நவரத்ன ஸ்தோத்ரமாலை
நவராத்திரியில் எளிதாக ஸ்தோத்திரம் செய்ய உகந்த தமிழ்த் துதி இது. அகத்தியர் அருளிச் செய்தது. நவராத்ரி,குத்து விளக்கு பூஜை, வாரா வாரம் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் என எல்லா ஸமயங்களிலும் சேர்ந்து சொல்லியது. டில்லியிலிருக்கும்போது இவைகள் மனதிற்குகந்ததாக இருந்தவற்றின் ஞாபகம் வருகிறது. நீங்களும் பாடிப் பயனடையுங்கள்.
1 ஞானகணேசா சரணம் சரணம் ஞானஸ்கந்தா சரணம்சரணம்,
ஞானசத்குரோ சரணம் சரணம், ஞானானந்தா சரணம்சரணம்.
ஆக்கும் தொழில் ஐந்தரநாற்றநலம், பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்,
சேர்க்கும் நவரத்தின மாலையினை, காக்கும் கணநாயக வாரணமே.
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
வைரம்
2. கற்றும் தெளியார் காடே கதியாம், கண்மூடிநெடுங்கின வான தவம்
பெற்றும் தெளியார் நினைப் பென்னில் அவம், பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வைர படைவாள் வைரப், பகைவர்க்கு யமனாக எடுத்தவனே,
வற்றாத அருட்சுனையே வருவாய். மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
நீலம்
3. மூலக்கனலே சரணம்சரணம் , முடியா முதலே சரணம்சரணம்,
கோலக்கிளியே சரணம்சரணம், குன்றாத ஒளிக் குவையே சரணம்.,
நீலத்திருமேனியிலே நினைவாய், நினைவற்றறியேன் நின்றாய் அருள்வாய்,
வாலைக்குமரி வருவாய்வருவாய் , மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
முத்து.
4. முத்தே வரும் முத்தொழில் ஆற்றிடவே, முன்னின்று அருளும் முதல்வி சரணம்,
வித்தே விளைவே சரணம்சரணம், வேதாந்த நிவாஸினியே சரணம் சரணம்,
தத்தேரியநான் தனயன் தாய்நீ , சாகாதவரம் தரவே வருவாய்,.
மத்தேறுத் திக்கினை வாழ்வடையேன், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
பவழம்.
5. அந்திமயங்கிய வான விதானம் ,அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை,
சிந்தை நிரம்பவழம் பொழிவாரோ , தேம்பொழிலாம் இது செய்தவள் யாரோ,
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள், எண்ணுபவர்க்கருள் எண்ண மிகுத்தாள்,
மந்திர வேத மாயப் பொருள் ஆனாள், மாதாஜெயஓம் லலிதாம்பிகையே!
மாணிக்கம்.
6. காணக்கிடையா கதியானவளே, கருதக்கிடையா கலையானவளே,,
பூணக்கிடையா பொலிவானவளே,, புனையக்கிடையா புதுமைத்தவளே,
நாணித் திருநாமமும் நின் துதியும், நவிலாதவரை நாடாதவளே,
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
மரகதம்.
7. மரகதவடிவே சரணம் சரணம் ,மதுரித பதமே சரணம்சரணம்,
சுரபதி பணிய திகழ்வாய் சரணம், சுருதிஜதிலயமே இசையேசரணம்,
அரஹர சிவ என்றடியார் குழுவ, அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம், மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
கோமேதகம்.
8. பூமேவியநான் புரியும் செயல்கள், பொன்றாதுபயன் குன்றா வரமும்,
தீமேல் எனினும் ஜெய சக்தி எனத், திடமாய் அடியேன் மொழியும் திறனும்,
கோமேதகமே குளிர்வான் நிலவே , குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்,
மாமேருவினிலே வளர் கோகிலமே, மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
பதுமராகம்.
9. ரஞ்ஜனி நந்தினி அங்கணி பதும, ராக விலாஸினி வியாபினி அம்மா
சஞ்ஜலரோக நிவாரணி வாணி, சாம்பவி சந்ர கலாதரி ராணி,
அஞ்ஜன மேனி அலங்ருத பூரணி, அம்ருதஸ்வ ரூபிணி நித்ய கல்யாணி,
மஞ்சுளமேரு சிருங்க நிவாஸினி, மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
வைடூரியம்.
10…வலையொத்தவினை கலையொத்தமனம், மருளப் பறையாரொலி யொத்தவிதால்,
நிலையற்றொளியேன் முடியத் தகுமோ, நிகளம் துகளாக வரம் தருவாய்,.
அலையற் றசைவற் றனுபூதி பெரும் , அடியார் முடிவாழ் வைடூரியமே,
மலையத்துவஜன் மகளே வருவாய், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
11. பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா, நவரத்தின மாலை நவின்றிடுவார்,
அவர் அற்புத சக்தி எல்லாமடைவார், சிவரத்தினமாய்த் திகழ்வார் அவரே,
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே ,மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே மாதாஜெயஓம் லலிதாம்பிகையே!!!!!!!
பின் குறிப்பு—- எழுத்துப் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. தெரிந்தவர்கள் திருத்திக் கொள்ளவும்.
நவ ராத்திரி சுப ராத்ரிகளாக அமைய எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லுகிறேன்.
ஜெயின் கிச்சடியும் பத்லா கடியும்
ஜெயின் கிச்சடியும்,பத்லா கடியும்.
ஜெயின் சமூகத்தினர் செய்யும் விஜிடபிள் கிச்சடியும் அதற்கான நீர்த்த மோர்க்குழம்பும் ருசியாக இருக்கும். இதோடு கூட சுட்ட மிளகு அப்பளாமும் எல்லோரும் சாப்பிட ஒரு அருமையான ,சுலபமான உணவு. வாய்க்கு ருசியாக இருப்பதோடு பூரா ஸத்துகள் நிரம்பியதாகவும் இருப்பது இதன் விசேஷம். ஸாதாரணமாக பூமிக்கடியில் விளையும், கிழங்கு,இஞ்சி போன்றவைகளை ஆசாரமானவர்கள் சமையலில் சேர்ப்பதில்லை. இது அம்மாதிரி முறையில் செய்யப்படவில்லை.யாவும் சேர்த்துச் செய்தது.
வேண்டியவைகள்
பெரிய வெங்காயம் —2
பூண்டு இதழ்கள்—3,
பீன்ஸ்—6, கேரட்—1,தக்காளி—1, காப்ஸிகம் சிகப்பு,பச்சை –பாதிபாதி. பட்டாணி உரித்தது அரைகப். உருளைக்கிழங்கு –1 இரண்டாக் கீறிய பச்சை மிளகாய் ஒன்று.
தாளித்துக் கொட்ட— வற்றல் மிளகாய்—2, சீரகம்—1 டீஸ்பூன்,மிளகு—1 டீஸ்பூன்,லவங்கம்—6 , ஒரு துளி லவங்கப்பட்டை, இஞ்சி சிறிது, பிரிஞ்ஜி இலை1 எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
அரிசி—பெரியடம்ளரால் ஒரு டம்ளர். பயத்தம் பருப்பு கால் டம்ளர். ருசிக்கு உப்பு.
செய்முறை. பிரமாதமொன்றுமில்லை.
கரிகாய்களை ஒன்றுபோல் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி,பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயை விட்டுக் காய்ந்ததும் தாளித்துக் கொட்டக் கொடுத்தவைகளைப் போட்டு வறுக்கவும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி,பூண்டு இஞ்ஜியைச் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பிறகு காய்களையும்,பிரிஞ்ஜி இலையையும் சேர்த்து வதக்கவும். இதனுடன்அரிசிப்,பருப்பை நன்றாகக் களைந்து அதனுடன் மூன்று பங்கு அளவு தண்ணீரையும் சேர்க்கவும் துளி மஞ்சள்ப்பொடி வேண்டிய உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விஸில் வரும் அளவிற்கு வேக வைக்கவும். நீராவி அடங்கியபின் ஒரு கிளறு கிளறி மூடி வைத்துச் சுடச்சுட பறிமாறவும்.
நான்கு ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும்.
உடன் சாப்பிட மிளகு அப்பளாம் சுட்டதும், பத்லா கடியும்.
கடி என்ற சற்றுத் நீர்க்க இருக்கும் மோர்க்குழம்பும்.
பத்லா கடி எப்படி?
நான்கு கப் மோரில் 2 டேபிள்ஸ்பூன் கடலைமாவைப் போட்டுக் கட்டி இல்லாமல் கரைக்கவும். வேண்டிய உப்பும் மஞ்சளும் சேர்க்கவும்.
பச்சைமிளகாய் இரண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்கடுகு,வெந்தயம், சிறிது லவங்கம்,மிளகு சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டி மிளகாயையும் வதக்கி மோரில் சேர்த்து நிதான தீயில் நன்றாகக் கிளறி ஒரு கொதி விட்டு இறக்கி கொத்தமல்லி இலையோ,கறிவேப்பிலையோ போட்டு இறக்கவும்.
மிளகு அப்பாளாத்தைச் சுட்டு கிச்சடியுடன் பத்லா கடியும் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கிரார்கள். கிச்சடியின் மணம் வீடுபூராவும்.
மிகவும் ருசியாகத்தானிருக்கிறது. கமகமக்கிறது.
என் மருமகள் செய்தது. நீங்களும் ருசித்துப் பாருங்கள். நமக்கு மஸாலா அதிகமாகத் தோன்றும். நன்றி ஸுமன்.
தட்டை பீன்ஸ் கறி.
நான் முன்பு ஜெநிவாவில் இருக்கும்போது இந்தக்காயை கட்டாயம் பார்த்தால் வாங்காது விடமாட்டேன். ஃப்ரெஞ்சுப்பெயர் HARICOTS COCO. நான் என்னவோ பெரிய அவரைக்காய் என்பேன். ஆங்கிலத்தில் FLATE BEANS என்பார்கள் போல இருக்கிறது.
ஒரு கப்பீன்ஸ் கறிசாப்பிட்டால் 110 கலோரிகள் அதில் இருக்கிறது. நார்ச் சத்து அதிகம் இருக்கும் காய். நம் ஊரில் எத்தனையோவித அவரைக்காய்கள்,கலர்க் கலரில் காய்த்தும் ,வாங்கியும் சாப்பிட்டிருக்கிறோம். அவைகளின் ருசி அலாதி. இக்காயில் ப்ரோடின்,கார்போஹைட்ரேட் முதலானது அதிகம் இருக்கிறது.
இதுவும் அவரைக்காய் வகைதான். காயின் மேல்ப்பாகம் சற்று தடிமனாக இருக்கிறது. ஸரி இதையும் சமைத்து ஒரு பதிவு போடுவோமென்று தோன்றியது.
நான் செய்தது என்னவோ ஸாதாரண கறிதான்.
செய்முறை.
காய் ஒரு கால்கிலோ அளவு.
இஷ்டப்பட்ட அளவு தேங்காய்த் துருவல். இஞ்சி நசுக்கியது சிறிதளவு.
கறிப்பொடி—இரண்டு டீஸ்பூன். வேண்டிய அளவு உப்பு. மஞ்சட்பொடி அரை டீஸ்பூன் எண்ணெய்—ஒரு டேபிள்ஸ்பூன். கடுகு,உளுத்தம் பருப்பு தாளிக்க சிறிது.
செய்முறை. காயை நன்றாகத் தண்ணீர் விட்டு அலம்பி வடிக்கட்டவும்.
பின்னர் காம்பு நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காயின்மேல் நசுக்கிய இஞ்சியைப்போட்டு ,ஒரு அரைஸ்பூன் எண்ணெய் விட்டுப் பிசறி மைக்ரோவேவில் உயர்ந்த மின் அழுத்தத்தில் 10 நிமிஷங்கள் வேக வைத்து எடுக்கவும். அல்லது குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விஸில் வருமளவிற்கு விட்டு வேக வைத்ததை வடிக்கட்டவும்..
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு உளுத்தம் பருப்பைச்சேர்த்து சிவந்ததும் வெந்த காயைக் கொட்டி,உப்பு,மஞ்சள் சேர்த்து வதக்கவும். கடைசியில் கறிப்பொடியைத் தூவி வதக்கி தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி இறக்கவும். பொடிபோட்ட கறியாதலால் நான் தேங்காய் சேர்க்கவில்லை.
கூட்டு,ஸாம்பார்,அவியல்,வெந்தயக்குழம்பு என எதிலும் சேர்க்கலாம். அவரைக்காய் கறிமாதிரிதானே என்கிறீர்களா? ஜெனிவா பதிப்பில்லையா? அதுதான் விசேஷம்.பச்சைக் கொத்தமல்லியையும் தூவிக்கொண்டு இருக்கிறது. என் மும்பை மருமகள் அப்படியே எண்ணெயில் நேராக வதக்கித்தான் செய்வாள். வேக வைக்க மாட்டாள். இது சற்று தோல் பருமனாக இருப்பதால் வேக வைக்கிறேன். இரண்டு விதங்களும் நன்றாகவே இருக்கும்.
வெங்காயம்,பூண்டு வேண்டுமென்பவர்கள் தாளிதத்திலேயே அதைச் சேர்க்கவும்.
தொட்டில்—14
இந்தத் தொட்டிலும் அழகானதே
Continue Reading செப்ரெம்பர் 15, 2016 at 10:50 முப 20 பின்னூட்டங்கள்
மும்பைப் பிள்ளையார் இவரும்
மும்பைப் பிள்ளையார்கள் இவர்களும். பாருங்கள், பரவசமாகுங்கள். வக்ரதுண்ட மஹாகாய
என்னையும் பாருங்கள்.
அடுத்து நான்
இன்னும் எவ்ழளவோ அழகுடன் நாங்கள் மும்பையில்.
படமுதவி—–ஸுரேஷ். நன்றி.
ஸீனியர் ஸிடிஸனாக நான்குங்குமம் தோழியில்
ஸ்டார் தோழிக்காக கேள்விகளை எனக்கு அனுப்பியது வந்து சேர்ந்தது. கேள்விகளுக்குப் பதில் எழுதிய பிறகு ஸீனியர் ஸிடிஸனான என்னை ஸ்டார் தோழியாக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி என் முன் வந்தது.
அதுவே ஸீனியர் ஸிடிஸனாக உங்கள் முன் வலம் வரக் காரணமாக அமைந்து விட்டது என்று நினைக்கிறேன்.
என்னுடைய சொல்லுகிறேன் ப்ளாகை விட இன்னும் அதிகம்பேர் என்னைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகவும் ஸந்தோஷம். பிரஸுரத்திற்குக் காரணமான அனைவருக்கும், திரு வள்ளிதாஶன் அவர்களுக்கும் மிகவும் நன்றி.
இதை எடிட் செய்வதற்கு முன்னர் நான் எழுதியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முக நூலில் பார்க்காதவர்களும் பார்க்க ஒரு வாய்ப்பு அதில் எனக்கு ஸந்தோஷம் வருமே!
என்னைப் பற்றி—- 30 ஜூன் 2016 காமாட்சி மஹாலிங்கம். 85ஆவது வயதில்
நான் ஒரு மனுஷியாக—ஏனோ தெரியவில்லை ஏழு வயது முதல் நான் மிகவும் பொறுப்பறிந்த ஒரு பெண்ணாக இருக்கிறேன். எல்லோரிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அவரவர்களால் செய்ய முடிந்ததைத்தானே பிறருக்குச் செய்ய முடியும்? பல ஊர் பல,பாஷை, பல கலாசாரம், பல சுபாவமுள்ள மனிதர்கள், யாவரும் நல்லபடி கொண்டாடும் ஒரு மனுஷியாகவே நடந்து கொண்டு இருந்திருக்கிறேன். அனுஸரித்தே போகும் தன்மை
தாயாக மனைவியாக— குடும்பப் பொருப்புகளே தெரியாத ஒரு அப்பாவி மனிதரைக் கைப்பிடித்து குறைந்த வருமானத்தில் வருமானத்திற்குத் தக்க குடும்பம் நடத்தி இன்று வரை பலனே கண்டுள்ள ஒரு மனைவிநான்.
தாயாக—-கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு இங்லீஷ் மீடியமானாலும், ஹிந்தி,நேபாலி என்றவைகளை நானும் உடன் நின்றது.தெரிந்து கொண்டு அவர்களுக்கு உதவினதுதான் பெரிய விஷயம். அன்பைக்காட்டுவதைவிட, அடக்கு முறைகளும், கண்டிப்புமாகத்தான் வளர்த்தேன் பிள்ளைகளை. நால்வர் ஆண் பிள்ளைகள்.நேபாளத்தில் இருந்த நாங்கள் அவ்விட படிப்பு கலாசாரம் மனதிற்கு ஒவ்வாததால் இந்தியாவில்
மேற்படிப்புக்கு அனுப்பினேன்.யாவரும் டிகிரி முடித்து விட்டு
M.B.A படிக்க ஒருவர் ஸம்பாதிக்க,ஒருவர் படிக்க, ஸம்பாதித்தவர் படிக்க, படித்தவர்ஸம்பாதித்து. அவரும் படிக்க அவர்களும் முன்னுக்கு வந்து இன்று நல்ல வியக்தியாக இருப்பது பசுபதி நாதர் கொடுத்த அருள்.. பெண் என் பெற்றோரிடம் வளர்ந்து அவளும் படித்தாள்.
ஏரோநாடிக் ஸீனியர் மெகானிக்கான தகப்பனாரின் உழைப்பும், தாயின் திட்டமிட்ட படிப்புத் திட்டங்களும் அவர்கள் முன்னுக்கு வர காரணமானதை என்றும் நினைவு கூறும் பிள்ளைகள். சரிவர முடிந்த கடமை. விரும்பிய பெண்களை, எதுவும் அவர்களிடம் எதுவும் வாங்கக்கூடாது என்ற கோட்பாட்டுடன் பிள்ளைகளின் மனதிற்கிணங்க , எளிமையான நட்பு உறவுகள் சூழ வைதீக முறையில் நாங்களே மணமுடித்துவைத்தோம். இதுவும் ஒரு தாயின் கடமைதானே.
படிப்பு
என்னைப் பொருத்தவரையில் அந்த நாளில் பெண்களுக்கு அதிகம் படிப்பைக் கொடுக்க வசதியில்லை. வயதான உடல்நலமில்லாத தகப்பனார். சுதேசமித்திரன்,தின வாரப் பதிப்புகள்,பாரததேவி முதலானது தபாலில் வரும். போட்டி போட்டுக் கொண்டு பேப்பர் படிக்கும் வழக்கம் அன்று முதல் இன்றுவரை உள்ளது. என் தகப்பனார் ஒரு தமிழ்ப் பண்டிதர்.. அப்பாதான் எழுதுவதற்கு ஆசான்.உடம்பில் ஓடும் குருதி அவருடையது.
ஒரு பக்கத்தில் விஷயங்கள் எழுதி ஒருபக்கம் காலியாக விட்டு குண்டூசியால் பின் செய்து , விஷயதானம் செய்பவர்,பெறுபவர் என்றெல்லாம் குறிப்பிட்டு, புக் போஸ்ட் செய்தது ஞாபகம் வருகிறது. சிறுகதைகள்,கட்டுரைகள், சமையல் விஷயங்கள், என எழுதியனுப்பியது பிரசுரமானது, பரிசு பெற்றது என யாவும் மறக்க முடியாதவை. திருவண்ணாமலையில் நான்குவகுப்புகளும்,வளவனூரில் எட்டு வகுப்பு முடிய படித்தாலும்,பாட்டு,நடிப்பு,மேடைப் பேச்சுகள், ஸ்கவுட்,படிப்பு கைவேலை,தோட்டவேலைஎதிலும் முன்னணியில், போதித்த ஆசிரியர்கள் மறக்க முடியாதவர்கள்.
அப்போதெல்லாம் மனக்கணக்கு ஒரு நிமிஷத்தில் பதில் சொல்ல வேண்டும். லைப்ரரி ஸைலண்ட் ரீடிங். படித்த உடனே மற்றவர்களுக்குப் பார்க்காமல் விஷயத்தை யாவருக்கும் கேட்கும்படி சொல்ல வேண்டும்.. பெங்களூர்,பாரக்பூர்.காட்மாண்டு என்று எங்கள் பணிநிமித்த வாஸமும்,ரிடயரானபிறகு தில்லி,கௌஹாட்டி,மும்பை ,எர்ணாகுளம்,கல்கத்தா எனவும், கடைசி மகனுடன் ஜெநிவா எனவும் பலதரப்பட்ட அனுபவங்கள்,சினேகங்கள். பலதரப்பட்டவைகளை நேரில் பார்க்கும் ஸுகம்.
பிள்ளைகள்.
பர்த் கண்ட்ரோல் பிரசாரம் ஆரம்பித்த காலம். ஒருவித பயம் எல்லோருக்கும். இந்தியா அளவு நேபாளத்தில் பிரசாரம் இல்லை. முதலில் பெண். அடுத்து நால்வர் ஆண் குழந்தைகள். யாவரும் நன்றாகப் படித்து வேலையில் இருக்கிரார்கள். பெண் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவள். எனக்கு ஐவர் மக்கள். பேரன்2, பேத்திகள்3 என மொத்தம் அவர்களும் ஐவர்தான். கொள்ளு பேத்தி ஒன்று.
பொழுதுபோக்கு.
புதிய தேசம் நேபாளம். வேலைக்கு ஆள் கிடையாது. யாவும் செய்ய, நிர்வாகம்,குழந்தைகளுடன் படிப்பிக்க உட்காருவது, யந்திரமயமில்லாத வேலைகள்…..பொழுது போதாது. இன்னும் வேண்டும். தபால் வசதி கிடையாது. சந்தா கட்டின புத்தகங்களும் கைக்கு கிடைக்கும் வரை உறுதியில்லை. பிள்ளைகளின் முன்னேற்ற சிந்தனைகள். பிறற்கு உதவும் தன்மை. நல்ல முறையிலேயே இருந்த்து.
இயற்கை உங்கள் பார்வையில்.
ஆஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! விலை மதிப்பற்ற இயற்கைக் காட்சிகள்,ஹிமாலயம் என்ன ஆல்ப்ஸ் என்ன நம் தமிழ் நாட்டு இயற்கை காட்சிகள் என்ன? பார்த்தும், அநுபவித்தும் சிராபுஞ்சி அதிக மழை பொழியும் இடம் பார்ப்போமா என்ற எண்ணம் படிக்கும்போது இருந்தது. ஆப்பிரிக்கா என்ன அமெரிக்கா,நயகரா நீர் வீழ்ச்சி என்ன , ஸ்விஸிலேயே பத்து வருஷங்கள் இருந்ததென்ன இயற்கை என் பார்வையில் கிடைத்தது அபூர்வம். டில்லி,கல்கத்தா,சென்னை,மும்பை யாவும் எல்லா வகையிலும்.
சமுகம் உங்கள் பார்வையில்.
மிகவும் முன்னேறி விட்டது.தட்டிக்கேட்க பயப்படும் ஸமுதாயமாக மாறிவிட்டது. தடி பிடித்த யாவரும் தண்டல்காரர்கள்தான். யாரும் யாருடைய உபதேசத்தையும் விரும்பாத சமூகம்.
மனிதர்கள்.
இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் நான் இருக்கிறேன். காரியம் ஆகவேண்டுமென்றால் மனிதர்கள் வேண்டும். மனித நேயம் குறைந்து போய்விட்டது. உறவுகள் வேண்டாம். சினேகிதம் ஓரளவிற்குப் போதுமானது என்றே எல்லோரும் நினைக்கிரார்கள்.
பிறந்த ஊர் ஸொந்தங்கள்.
ஒரு அழகிய ஊராக இருந்த கிராமம் வேறுவிதமாக மாறி விட்டது. யாவருக்கும் குலதெய்வத்தை ஆராதிக்கும் ஒரு புண்ணிய பூமியாக உள்ளது.
முன்பெல்லாம் சென்னையில் ஊரார்களைப் பார்க்க முடிந்தது. இப்போது வெளி நாட்டில் பார்க்க முடிகிறது. ஒரு கல்யாணம் கார்த்தி சொந்த பந்தங்களோடு கூடும்போது எங்கு உள்ளோம் என்றே தெரியாத ஒரு உற்சாகம். ஊரைப் பார்த்தாலே ஒரு உற்சாகம்.
நேர நிர்வாகம்.
இருபத்தெட்டு வருடங்களாக எங்கு உதவி தேவையோ அங்கு ஆஜர்.இருவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியமும் பார்ப்பதில்லை. ஓடிப்போன காலங்கள். அயல்நாட்டு வாஸம். எதுவும் கரெக்ட் டைமிற்கு தயாராகும் எல்லா விஷயங்களும். பேப்பர் படிப்பதற்காக கம்யுட்டரில் சிறிது பரிச்சயம். புத்தகங்கள்.பேப்பர் படிக்கவே நேரம் தேவை.ஸொந்தங்களை விட பந்தங்களும் என்னை அவர்களாகவே நினைத்தது.அவர்களுக்குதவுவது பிடித்தமான காரியம்.
சமையல்
பிடித்தமானது. சின்னவயதில் குறிப்புகள் பார்த்து நாலும் கிடக்க நடுவில் எதையாவது செய்வேன். அம்மா ஒன்றும்சொல்லமாட்டார்கள்.சொல்லுகிறேன் என்ற பிளாகை ஆரம்பித்து ஆறு ஏழு வருடமாக எழுதிக் கொண்டே இருந்தேன். இப்போதும் அதுதான் என் உற்ற தோழி.சமையல்தான் அதில் பெரும் பாலும். எவ்வளவு பேருக்கானாலும் தைரியமாக சமைத்த நாட்கள் அதிகம். கதைகள் எழுதுவதுண்டு போஸ்டல் வசதி மிகவு மோசமாக இருந்ததில் எழுதுவதே நின்று போனது.
பிற கலைகள்.க்ரோஷா,எம்ராய்டரி,க்ராஸ்டிச், நிட்டிங் பெரிய கோலங்கள், கைவேலைகள் எல்லாம் தெரியும் ஒரு காலத்தில்.
ஆபீஸ் ஒர்க்.
பதிமூன்று வய.தில் கம்பல்ஸரி எஜுகேஷனில் டீச்சராக வேலைக்குப் போய்விட்டு நோட்ஸ்ஆஃப் லெஸன் எழுதவும், தோராயமாக பசங்களுக்கு டேட் ஆஃப் பர்த் போடவும், ரெகார்ட் ஷீட் எழுதவும் பழகிக் கொண்டேன். புடவை கட்டிக்கொண்டு, தலைப் பின்னலை தூக்கிக் கட்டிக் கொள்வது. இரண்டு வருஷகாலம் டீச்சர் என்று யாராவது சொல்லும்போது வெட்கமாக இருக்கும்.பேப்பரில் எழுதும் பழக்கம் உண்டுய
இசை
வளவனூரில் படிக்கும்போது பாட்டு கிளாஸ் உண்டு. வீட்டில் மிகவும் பாட்டுகள் கற்றுக்கொண்ட அம்மிணி மாமி என்பவர் ராமநாடகக் கீர்த்தனைகள் மற்றும் கீர்த்தனைகள் சொல்லிக் கொடுத்தார். பிரியமானது இசை. மனது ஸரியில்லாது எப்போதாவது இருந்தால் ஸர்வஸமய ஸமரஸக்கீர்த்தனங்களைப் பாடினால் மனது அமைதியாகிவிடும்.
உதாரணம் எக்காலமும் உந்தன்,.இந்தவரம் தருவாய், கருணாகர பரம் பொருளே உன்னை, தயைபுரிய தாமதமேன், உன்னை மறவாமல் எனக்கருள் வரமே இப்படிப்பல.
கடந்து வந்த பாதை
அயல்நாடு. குறைந்த வருவாய் இப்படி எவ்வளவோ, குளிர் தேசம் போனது,கடினங்களைக் கடந்தது, பார்த்தவர்கள் பாராட்டியது, இன்று நினைத்தாலும் தக்க ஸமயத்தில் யாவருக்கும் கடவுள் மார்க்க ஸஹாயராக இருப்பார் என்ற எண்ணம் தோன்றுகிறது.
சினிமா
அப்பா சினிமா பார்த்த்தில்லை. குழந்தைகளை நன்றதினின்றும் கெடுத்திடும் சாதனம் என்று எண்ணும் தீவிரவாதி. எட்டாவது படிக்கும்போது ஸ்கூல் தலைமை ஆசிரியருடன் வகுப்புத் தோழிகளுடன் பார்த்த படம் காரைக்கால்அம்மையார். அக்கம் பக்கத்தில் சாயங்காலம் சினிமாவிற்குக் கிளம்புகிறவர்களையும் பசங்களைக் கெடுத்து விடுகிறீர்கள் என்று கோபிப்பார்.
யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
உடல்நலம், மனநலம்.
உடல் நலம் ஏறத்தாழ இருந்தாலும் மனம் என்பது உறுதியாகவும், ஏற்றத் தாழ்வுகளை ஸமாளிப்பதாகவும் இருந்து கொண்டிருந்தது.
நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்தது.
சிலநினைவுகள் என்ற நிஜஉறை free books டீமால் வெளியிடப் பட்டிருக்கிறது.
அன்னையர் தினம் என்ற என் அம்மாவின் நினைவுகளை முப்பது பகுதிகளாகச் சொல்லுகிறேனில் எழுதியது எனக்குப் பிடித்தமானது. மற்றும் படிப்பவர்கள்தான் பாக்கியைச் சொல்ல வேண்டும். ஏராளமான சமையல் குறிப்புகள்
இசை
எல்லோர் வீட்டிலும் இசை யாருடையது வேண்டுமானாலும் கேட்க வசதி இருக்கிறது. மனது லயிப்பது இசையில்தான்.
ஆளுமைகள்
அரசியலில் பெரிய பதவிகளை வகிக்கும் பெண்கள் துறவிமாதிரி உண்மையாகப் பதவிகளை வகித்து நல்லது செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏனோ இவ்வளவு அவதூறுகளை எப்படி ஏற்றுக் கொள்கிரார்களோ என்றுதான் நினைப்பேன்.
பிடித்த பெண்கள் குடும்பத்தின் வெளியில்
.என்னை விட பத்துவயது சிறியவளான கங்கா கார்க்கி என்ற நேபாலி டீச்சர். ஆத்மஞானம் கற்கும் அவளின் உபயோககரமான ஒத்தாசைகளும், பேச்சும்.
என் சொல்லுகிறேன் என்ற பிளாகின் மூலம் விசேஷ நட்பைப் பெற்ற ஸ்ரீமதி ரஞ்ஜனி, மற்றும் காமாட்சிம்மா என்று அன்புடன் விளிக்கும் வலையுலக நட்புறவுகளும் மறக்க முடியாதவர்கள்
நகைச்சுவை நிகழ்ச்சிகள்.
காட்மாண்டு ஸென்ட்ரல் ஸ்கூல். பெற்றவர்களை கூப்பிட்டு ஒவ்வொரு வகுப்பிற்காக மீட்டிங் நடத்துவார்கள்
ஸரியான வகையில் ரப்பர், கொடுப்பதில்லை,நோட்புக்கும் அப்படியே. கைக்குட்டை அளிப்பதில்லை. ஹிந்தியில் சொல்லிக் கொண்டே போகிரார்கள்.
எப்படி பதில் சொல்லுவது என்று யோசிக்கும் போது, நீங்கள் என்ன இங்கு இது இரண்டாவது வகுப்பு பிள்ளைகளுக்கானது என்று கன்னடத்தில் சொன்னார் அங்கு வந்த ஒருவர்.
என் பிள்ளை பிளஸ் டூ. யாவரும் சிரிப்பு. நான் சொல்ல எழுந்து நிற்பதை அவர்கள் கவனிக்கவில்லை.
இதே மாதிரி பெண்ணுக்கு பிரஸவத்திற்கு ஆஸ்ப்பத்திரிக்குப் போனால் நான்தான் கர்பிணி என்று என்னை சோதிக்க வந்து விட்டார்கள். இது நேபாலில். சிரித்து மாளவில்லை.
பேஸ்புக் கற்றதும்,பெற்றதும்.
இந்த வயதில் காமாக்ஷி பேஸ் புக்கில். இதுவே என்னை புகழக் காரணமாக இருந்தது என் உறவினர் மத்தியில்.
இழந்த உறவுகள்,சிநேகங்கள்,புத்தம் புதிய விஷயங்கள், நம் ஆர்வங்களைப் பிறர் அறியச் செய்ய என்ற பல்வேறு நல்ல கோணங்களில்ப் பார்த்தால் நல்லதையே நினைக்கத் தோன்றுகிறது. பக்குவத்துடன், ஒருவித எல்லையுடன் உபயோகிக்க நல்ல ஆயுர்வேத மருந்து.
அழகென்பது. உள்ளும்,புறமும் சுத்தமான மனித நேயம்.
வீடு.
இகத்திற்கான வயோதிக காலத்திற்கு நம்முடையதென்ற ஸொந்த வீடு மிகவும் அவசியம். ஸுதந்திரம் என்பது ஸொந்த வீடுதான்.
வாழ்க்கை உங்கள் பாதையில்.
உழைப்பும்,ஆர்வமும், கட்டுப்பாடான வாழ்வும், மனோதைரியமும் அதிக ஆயுளைக் கொடுத்திருக்கிறது. வயோதிகத்திற்காக இன்னும் வசதிகளை முன் கூட்டியே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒதுங்கி வாழப் பழக வேண்டும்.
எழுத்தும் வாசிப்பும்.
மஹாபாரதம்,பகவத் கீதை,பாகவதம் என்று ஆன்மீகம் தேவையாக இருக்கிறது. புத்தக வாசிப்பும்,கம்யுட்டரில் ஏதோ எழுதுவதுமாக
ஸந்தோஷத்தை ஏற்படுத்திக் கொள்கிறேன். குறை ஒன்றுமில்லை.
புகைப்படக்கலை.
அமெரிகாவிலுள்ள பேரன் டிஜிட்டல் காமிரா வாங்கிக் கொடுத்தான் + தேர்ந்த கலைஞரில்லை. போதும் என்வரை விஷய தானங்களுக்குஇவை உதவுகிறது..
இவை தவிர நீங்கள் கூற விரும்புவது..
நீங்கள் யாவரும் சிரிய வயதுக்காரர்கள். வயதான காலம் என்றும் ஒன்று வரஉள்ளது. நமக்கே என்ற வீடு,வருமானம்,மெடிகல் பாலிஸி, தாராளமாக சிலவு செய்யும்படியான சேமிப்பு இவை யாவும் நமக்கு அவசியம். மனோ தைரியம் இவைகள் யாவையும் அடுத்த தலை முறைக்கு மிகவும் அவசியமானதொன்று. வயதானவர்களை நேசியுங்கள். அவர்களுக்கென்ற ஒரு மனமும் உண்டு.
குங்குமம் தோழி இதழ் பற்றி
நல்ல இதழ். அவ்வப்போது இணையத்திலும் படிப்பேன். இல்லாதவிஷயமே இல்லை.
குங்குமம் தோழியில் இடம் பெற வேண்டிய புதிய பகுதி விஷயங்கள்.
நாடகங்கள். பழைய பிரபலமான பெண் எழுத்தாளர்களின் தொடர் கதைகள் இப்படி காணக்கிடைக்காத விஷயங்கள், போடலாமே. குழந்தைகள் பெரியவர்களான பின் தனித்திருக்க அவசியம் நேரிடின் ஸோஷியல் ஸர்வீஸ் மூலம் எவ்வளவு நிம்மதி பெறலாம் என்பதைக் குறித்தெல்லாம்
எழுதலாமே. இந்த ஸ,ப்ஜெக்ட் வருங்காலத்திற்கு உதவும் என்பது என் பூரண நம்பிக்கை.
எங்கள் வீட்டு கணபதிகள்
எங்கள் வீடுகளில் பூசித்த கணபதிகளையும் உங்கள் பார்வைக்கு வைக்க வேண்டாமா? காட்மாண்டு,மும்பை,ஜெனிவா என்று எளிய கணபதிகளையும் தரிசியுங்கள்
முதலில் பார்ப்போம். காட்மாண்டு கணேசரை.
அடுத்து வருகிறார் எங்கள் மும்பை கணபதி.
அவரின் நிவேதனம்.
வினாயகர்கள்
மும்பை வினாயகர்கள் அருள்பாலிக்கப் போகு முன்னர் எனக்குத் தரிசனம் கொடுக்க வேண்டினதில் வந்தவர்கள்.நிறைய வினாயகர்கள் தரிசனம் கொடுக்க உங்கள் எல்லோருக்குமாக வருகிரார்கள். படங்கள் உதவி மும்பை மருமகள் பிரதீஷா ஸுரேஷ்
கண்டு தரிசனம் செய்யுங்கள். அன்புடன் காமாக்ஷி.
குட்டி கணபதி அம்மை,அப்பனுடன்
ஸ்ரீகிருஷ்ணபகவானை குழந்தையிலிருந்து பலவித வளர்ச்சியில் பார்ப்போம். முதுமை என்பதை அவரிடம் எப்போதும் பார்க்கவில்லை. மஹா பாரத யுத்தத்தின்போது அவருக்கு ஏராளமான பேரன்களிருந்தார்கள். அவர் என்னவோ இளமையுடன்தானிருந்தார். அதுபோல
ஸ்ரீகணேசரும் ஊர்,உலகம்,ஆறு,குளம்,மரம் வீடு,காடு எங்கு வீற்றிருந்தாலும் இளமையுடன்தான் இருந்தார் என்று நினைக்கிறேன். தாத்தா கணேசரைப் பார்க்கவில்லை. தாய் பார்வதியுடனும்,திரிசூலதாரி,கங்காதாரி சிவனுடனும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பது போன்ற இச் சித்திரம் யாவரையும் மகிழ்விக்கும் என்று நினைக்கிறேன். வினாயக சதுர்த்தி வாழ்த்துகளுடன் அன்புடனும். காமாட்சி
ஓவிய கணபதி
இங்கு இரண்டு ஓவியங்கள் ஹாலில் மாட்டப்பட்டிருந்தது. வினாயக சதுர்த்தி ஸமயமாதலால் நீங்களும் பார்க்கலாமே என்று தோன்றியது. வாங்கிய ஓவியம்தான். ரஸிக்க முடிகிறதா பாருங்கள்.
கணேச சரணம் சரணம் கணேசா.